பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Sunday, March 25, 2012

வேதநாயகம் பிள்ளையின் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்

            இசைப்பாட்டு வடிவத்தின் முதிர்ந்த நிலையே கீர்த்தனைப் பாடல்களாகும். இப்பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற மூன்று நிலைகளில் அமையப்பெறும். இவற்றை எடுப்பு, தொடுப்பு, படுப்பு என்ற பெயர்களில் அழைப்பர். இத்தகைய கீர்த்தனைப் பாடல்களைச் சமரச நோக்கோடு பாடியவர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை ஆவார். இவர் பாடிய இசைப்பாடல்களுக்குச் ``சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்'' என்று பெயரிட்டழைத்தார். இதில், 192 கீர்த்தனைப் பாடல்கள் இடம் பெற்றன. இந்நூலின் பெயருக்கு ஏற்ப, எல்லா மதங்களுக்கும் பொதுவான எந்தக் கடவுளையும் சுட்டாத அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இசைப்பாடல்களாகப் பாடி இருப்பது சிறப்பிலும் சிறப்பாகும். இத்தகைய சமரச நூலில் காணலாகும் கருத்துக்களை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.



வேதநாயகமும் தமிழும்

                  தமிழ்நாட்டில் சிறப்புமிக்;க கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று விளங்குபவர் வேதநாயகம் பிள்ளையாவார். இவர் தமிழில் நாவல் என்னும் புத்திலக்கிய வகையைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்தவர். இவரின் நாவல்களில் நகைச்சுவை நிரம்பிய நிலையில் அமையும். இசைத் தமிழின் பெருமையைக் கீர்த்தனை என்ற இலக்கிய வகையில் நிலை நிறுத்தியவர். உண்மையில் நாட்டம் காணல், சர்வ சமய சமரசச் சிந்தனைகள், பெண்மையை மேம்படுத்துதல் ஆகியன இவரின் இலக்கியக் கொள்கைகளாகும்.

                 வேதநாயகம் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள குளத்தூரில் பறிந்தவர். சிறுவயதிலேயே ஆங்கிலப் பயிற்சி பெற்றமையால் ஆங்கில அரசாங்கம் இவரை மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தியது. பின்பு, தரங்கம்பாடி, சீர்காழி, மாயூரம் ஆகிய இடங்களில் மாவட்ட நீதிமன்றத்தில் முன்சீப் என்ற உயர் பதவியில் பணியாற்றினார்.


நூல்களும் சிறப்புகளும்


                   சீர்காழியில் பணியாற்றிய காலத்தில், அங்கு வசித்து வந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் நெருங்கிப் பழகிச் செந்தமிழைக் கற்றறிந்தார். சீகாழிக் கோவை பாடிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் புலமைத் திறத்தைப் பாராட்டிப் பற்பலக் கவிதைகள் இயற்றினார். நன்னெறியில் நாட்டம் கொண்டு தம் மனத்தில் பதிந்த கருத்துக்களைப் பாடல்களாகப் பாடினார். அப்பாடல்கள் 45 அதிகாரங்களைக் கொண்டது. அதனை `நீதி நூல்' என்ற பெயரில் வெளியிட்டார்.

                     வேதநாயகர் சீர்காழியிலிருந்து மாயூரத்திற்கு முன்சீப்பாக மாற்றம் பெற்றார். அச்சமயத்தில் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை இயற்றிய கோபாலகிருஷ்ண பாரதியார் நட்பு கிடைத்தது. அவரின் தொடர்பால் கீர்த்தனைப் பாடல்களைப் பாடும் தொடர்பைப் பெற்றார். ஒரு சமயத்தில் தஞ்சாவூர்ப் பகுதியில் ஏற்ப்பட்ட பஞ்சம் குறித்து நெஞ்சுருகப் பாடினார். தாம் சேர்த்து வைத்த செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மாயுரத்தின் பல பகுதிகளில் கஞ்சித் தொட்டிகளை அமைத்து மக்களின் பசித் துன்பத்தைப் போக்கியுள்ளார். இத்தகைய அறப்பணியைக் கண்ட கோபால கிருஷ்ண பாரதியார் வேதநாயகரை வியந்து பாராட்டி, `நீயே புருஷ மேரு' எனத் தொடங்கும் கீர்த்தனைப் பாடலைப் பாடியுள்ளார். மனிதர் நோக மனிதர் பார்க்காத நற்பண்பிற்குக் கிடைத்த பேறாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.


                        வேதநாயகம்பிள்ளை பிற சமயத்தாருடன் வேற்றுமை இல்லாமல் பழகியுள்ளார். அன்றைய திருவாவடுதுறை ஆதினத் தலைவர் சுப்பிரமணியத் தேசிகரைப் பாராட்டிப் பற்பல கவிதைகள் பாடியுள்ளார். திருவாவடுதுறை ஆதீன வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வேதநாயகம் பிள்ளையினைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துக் `குளத்தூர்க் கோவை' இயற்றியுள்ளார்.

                               கிறித்துவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவராயினும் தெய்வத்தின் பெயரால் சமயத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்வது தவறு என்று எண்ணினார். பல சமயத்தைச் சார்ந்தோரும் சமரச உணர்ச்சியோடு வாழ வேண்டும் என ஆசைப்பட்டார். அதன் விளைவாக சர்வ சமரசக் கீர்த்தனைகள் என்ற நூல் தோற்றம் பெற்றது. சத்திய வேத கீர்த்தனைகள், திருவள்ளுவ மாலை, தேவத் தோத்திர மாலை, பெண்மதி மாலை, திருவருளந்தாதி, தேவ மாத அந்தாதி, பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி சரித்திரம், ஞான சுந்தரி ஆகியன இவர் படைத்த நூல்களாகும்.


எக்காலமும் பணிந்து போற்றல்


                     எக்காலமும் உன்தன் திருவடிகளை நான் பணிந்து கொண்டிருக்க நீ வரம் அருள வேண்டும். சிறப்பு பொருந்திய மேலோரின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் அறிவிற் சிறந்தவனே! அனைத்து உலகங்களையும் காப்பவனே! நன்மை தருவோனே! ஊன் மேல் இன்னிசை மிக்க பாடல்களைப் பாட வேண்டும். மணம்; மிக்க தாமரைப்பாதங்களை என் தலையில் சூடி வணக்கங்கள் பல சொல்லிப் பூமியில் விழுந்து வணங்க வேண்டும். தூய உள்ளம் உடைய நல்ல மனிதர்களோடு சேர்ந்து ஞானக் கடலில் நான் ஆட வேண்டும். எவ்விதக் குற்றமும் குறையுமின்றி உன்னை நாள் முழுவதும் நாடித் தொழுது நேசமுடன் பக்திப் பரவசத்தால் அழுது பாட வேண்டும். சிவந்த நெருப்பில் உருகும் மெழுகினைப் போல் என் மனம் உருகி மிகுதியும் மெய் சிலிர்த்து எக்காலமும் உன்னை நான் பணிந்து போற்ற நீ வரம் அருள வேணடும். இதனை,


``எக்காலமும் உந்தன் பொற்கால் பணிந்துகொண்டு

இருக்கநீ வரம் அருள்வாய்''

என வரும் `பல்லவி'யால் உணரலாம்.

அழகிற் சிறந்தோனே! அனைத்தும் கடந்தவனே!

                 தலைவனே! நான் உன்னைத் தேடி ஓடி வந்தேன். நீ எனக்கு உதவி செய்தருள வேண்டும். நான் உன்னை நாடி வந்து உன் திருப்பாதங்களைத் தொட்டுக் கொடிமுறை கும்பிட்டேன். ஐயனே! அழகிற் சிறந்தவனே! துன்பம் தீர்ப்பவனே! அறிவு மிக்கோனே! பேதங்கள் அற்றவனே! அனைத்தும் கடந்தவனே! வாத பிரதிவாதங்களுக்கு அப்பாற்பட்டவனே! புகழ்மிக்கவனே! அற்பமான இவ்வுலகப் பொருள்களை நான் சிறிதும் வரும்ப மாட்டேன். இதுவே முற்றிலும் உண்மையாகும். இந்த உலகத்தில் அற்புதமான இறைவனின் பொருளாகிய அருள் மட்டும் கிடைத்தால் எனக்கு அதுவே மிகுந்த பயனை விளைவிக்கும். நான் வேறு யாரின் துணையையும் நாடிச் செல்வதில்லை. உன் துணையையே நாடி வந்துள்ளேன். கீர்த்தனை மாலைகள் வகை வகையாகத் தொடுத்தேன். நீ வாசிப்பதற்கே என் இரு கரங்களையும் கொடுத்தேன். என் மனத்தை உன் வீடாக்கிக் கொள். உன் மனத்தில் எனக்கு இடம் தருவாயாக. உன்னைப் பணிந்து நடப்போர்க்கு அன்போடு உதவுகின்றவனே! உருவம் அற்றவனே! நியாயத்தின் இருப்பிடமாக விளங்குகின்றவனே! பற்பல புதுமைகள் செய்பவனே! கற்பனையின் கடலே! பாவத்தை அழிப்பவனே! உலகை ஆளும் மன்னனே! பேரொளியே! இன்ப வடிவாய் ஆனவனே! இதனை,


``ஓடி நான் உனைத் தேடி வந்தேன் - எனக்கு

உதவி செய்தருள் ஐயனே!''

எனவரும் பல்லவி அறிவுறுத்துகின்றன.

மன இருளைப் போக்குபவன்

                            வீணாய்ப் பொழுதைப் போக்கிய நான் ஒரு சிறு புல்லாகவும், நான் செய்த வினை அந்தப் புல்லை அரிக்கும் கரையானாகவும் ஆகிவிட்டோமே! உன்னை நினையாத என் மனம் கல் தானே? நித்தம் மனத்துடன் யுத்தம் செய்யவேண்டியுள்ளதே! எப்போதும் வற்றாத நல்லறிவு படைத்தவனே! நல்லோர்களின் பாராட்டுக்குரியவனே! தீயோர்களைத் திருத்துபவனே! இவ்வுலக வாழ்வில் நான் காணும் தொல்லை துயரங்களுக்கு எல்லையே கிடையாது. நான் யாரிடத்தில் சென்று முறையிடுவேன்? தெய்வமே! என் வார்த்தைகளைக் கேட்டு எனக்கு நீ உதவ வேண்டும். அடியேனாகிய நான் வினை வசத்தால் இவ்வாறு தொல்லைகளுக்கு ஆளாகிவிட்டேன். என்பால் கருணை கொண்டு அருள் பாலித்து இவ்வுலகத் துன்பங்களிலிருந்து என்னைப் பாதுகாக்க வேண்டும். பக்தர்களின் அன்பனே! சுத்த மனங்களில் வாசம் செய்பவனே! எண்ணத்தில் அமைந்த குற்றங்களைப் போக்குபவனே! அறிவின் ஒளியாகத் திகழ்பவனே! இத்தகையவனை,

``என்னை ஆதரிப்பாயே – என்மன இருள்

தனையே பிரிப்பாயே''

என்ற பல்லவி வழியுறுத்துகின்றன.

வெயிலுக்கு நிழலாய் இருப்பவனே

                              நல்லோருக்கு இன்பம் நல்கும் இறைவனே! பொன்னாசையால் நான் இவ்வுலகத்தில் பெருந்துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். வயிற்றுப் பசியால் துடிக்கும் குழந்தை பசியைத் தீர்த்துக் கொள்ள தன் தாயிடம் தான் செல்லும். இக்குழந்தை வேறு யாரிடமும் செல்லாது. நாளும் துன்பம் தரும் பெருநோய் மருந்தால் அன்றி வேறு வகையில் குணம் ஆவதில்லை. அவ்வகையில் தாயாகவும் பெரு நோய்க்கு மருந்தாகவும் விளங்குபவனே! உயிர்ப் பயிரை வளர்க்கும் மழையே! உன்னை அல்லாமல் எம்மைக் காப்பார் வேறு யாருமில்லை. சல்லடை போன்ற பல ஓட்டைகளை உடைய துன்புறும் வெறும் புழுவும் மலமும் நிறைந்த கூடான இவ்வுடம்பை நிலையெனக் கருதி மனம் என்னும் குரங்கு பல செயல்களைச் செய்கின்றது. அதனால் தினம்தினம் பாடாத பாடு படுகின்றேன். இறைவனே! நான் பிழை எது செய்தாலும் நீ வந்து காப்பாய் என்று நம்பினேன். என் மேல் உனக்கு இன்னும் கோபமோ? இந்த உலகத்தில் சொல்ல முடியாத துன்பத்தைத் தரும் ஐம்புலப் பகைவர்கள் மென்மேலும் துன்புறுத்துகின்றனர். என் பார்வை மங்கையர் மேல் செல்கின்றது. வாயோ தீய வார்த்தைகளையே பேசுகின்றது. என் காதுகளோ தீய வார்த்தைகளையே கேட்டு மகிழ்கி;ன்றன. என் உடம்போ சிற்றின்பத்தையே நாடுகின்றது. இவ்வாறு நான்படும்பாடு நாய்படும் பாடாக உள்ளது. ஆதலால், என் தந்தையே! தினமும் மகிழ்ச்சியைத் தருபவனே! வேநாயகனே! என்னுடைய குறைகளை உன்னிடத்தில் சொல்லுகின்றேன். உன்னையன்றி எனக்கு வேறு யார் உளர். நீ எனக்கு மனமிரங்கி நல்வழி காட்ட வேண்டும் எனக் கூறுகின்றார். இதனை,



``உன்னிடத்தில் சொல்லாமல் யாரிடத்தில் சொல்லுவேன்

ஓஓ ஜெகதீசா''

எனவரும் பல்லவி வழி அறியமுடிகின்றது.

என்பிழைகள் பொறுத்தருள்வாய்

                      இறைவனே! நான் உன் பக்தனைப் போல விவரித்துப் பேசுவேன். உன்னைத் துதி செய்து ஆயிரம் கவிகள் விரிவாகப் பாடுவேன். நான் இவ்வாறு பேசுவதெல்லாம் வாய் வார்த்தையோடு முடிந்து போகின்றது. என் மனத்தில் தோய்ந்து வெளிப்படும் அன்பு இதில் சிறிதும் இல்லை. சிறு நாயேன் அன்புகூட உன்மேல் இல்லாமல் தீயவனாய்த் திரிகின்றேன். நான் செய்திருக்கும் பாவங்களை எண்ணிப் பார்க்க இயலாதவை. இந்த மண்ணில் நான் பிறந்து ஒரு பயனுமில்லை. தினந் தினம் உண்ணுவதும் உறங்குவதும் பெரும் பாவங்களைச் செய்வதுமாகத் திரிகின்றேன். உன் பாதத்தைச் சிறிதும் சிந்திக்காது காலத்தைக் கழிக்கின்றேன். மனிதத் தன்மைகள் அற்ற குணங்கள் என்னிடம் மென்மேலும் குடிகொண்டுள்ளன. என் மனம் பஞ்சமா பாதகங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயமாய் உள்ளது. இந்த உலகத்தில் உன்னை நொக்கித் தவம் புரிகின்றவர்களுக்குக் குற்றங்குறைகள் நீங்கும். அவ்வகையில் இந்த உலகத்தில் நன்மை கிடைக்கச் செய்தருளும் இறைவனான வேத நாயகனே! நீ மனம் இரங்கி என் பிழைகளைப் பொறுத்து என்னை வருத்தும் தீவினைகளைப் பொறுத்து, என்னை வருத்தும் தீவினைகளைப் போக்கி அருளுதல் வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறார். இதனை,


``என்பிழைகள் பொறுத்தருள்வாய் எனை – அலைக்கும்

துன்பவினை அறுத்தருள்வாய்''

என்ற பல்லவியின் வழி உணரமுடிகின்றது.

                     இவ்வாறாக, வேதநாயகம் பிள்ளை தனது சர்வ சமய சமரசக் கீர்த்தனையில், இறைவனிடம் தம் குறைகளைச் சொல்லி, தமக்கு அருள்புரியுமாறு வேண்டுகிறார். எச்சமயமும் சார்ந்து பாடாமல் இறைவனின் பெருமைகளைக் கூறி, எச்சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மனம் உருகிப் பாடுகின்றார். இறைவனுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தைச் சில கீர்த்தனைகளில் பாடுகின்றார். மொத்தத்தில் மன அழுக்குகளை எல்லாம் களைந்து இறைவனைத் தரிசிக்கத் தயாராக இருக்கும் ஓர் ஆன்மாவை இனம் கண்டு கொள்ளும் வகையில் இக்கீத்தனைகள் அமைந்துள்ளன எனக் கூறுதல் முற்றிலும் பொருத்தமுடையதாகும்.

 
 
நன்றி.
 
முனைவர். சோ.முத்தமிழ்ச்செல்வன்.

Monday, March 19, 2012

பாரதியின் சிற்றிலக்கியங்கள்

``சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது
சொற்புதிது சோதிமிக்க
நவகவிதை``

என்று புத்திலக்கிய வகைக்கு முண்டாசுக்கவி பாரதி விதை போட்டார். பழமையினைப் பாதுகாக்கும் தமிழினத்தின் தவப்புதல்வனான பாரதி தம் முன்னோர்கள் போற்றிய மரபையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டவர். அதனால் தான் அவர்கள் வடிவமைத்த பாவகைகளையும் இலக்கிய வகைகளையும் போற்றி அதனூடே புதுமையைப் புதுக்கியும் புதுமை செய்தார். படித்தவனுக்குச் சொந்தமான இலக்கியத்தைப் பாமரனின் இல்லத்திற்குள்ளும் செலுத்தியவன். இத்தகைய பாரதியின் படைப்பாக்கத்தில் கருக்கொண்ட பிரபந்தங்களைக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் எண்ணம்.

பாரதியின் இலக்கியவகைகள்

            தமிழிலக்கிய உலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகள் சுட்டப்பெற்றுள்ளன. அவற்றில் பலவற்றைத் தன்னுடைய படைப்பில் பாரதி புகுத்தியுள்ளார். நான்மணிமாலை, தூது, அகவல், பஞ்சகம், பள்ளியெழுச்சி, நவரத்தினமாலை, தசாங்கம், பள்ளு, கும்மி போன்ற பல்வேறு வகைகளைக் கையாண்டுள்ளார்.

நான்மணிமாலை

            வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் ஆகிய நான்கு பாவகைகளால் நாற்பது பாடல்களை எப்பொருளிலேனும் பாடுவது நான்மணிமாலையாகும். இதனை,


``வெண்பா கலித்துறை விருத்தம் அகவல்
பின்பேசும் அந்தாதியின் நாற்பது பெரின்
நான்மணிமாலையாம் என நவில்வர்``
-           இலக்கண விளக்கம் 81

என்ற இலக்கண விளக்க நூற்பா நவில்கிறது. இவ்வகை இலக்கியத்தினை மகாகவி அவர்கள் விநாயகரின் மேல் துதிப்பொருண்மையில் பாடியுள்ளார். 15 ஆம் நூற்றாண்டில் ``கோயில் நான்மணிமாலை`` யின் வாயிலாகப் பட்டினத்தார் தொடங்கி இவ்வகை பாரதியின் கைபட்டு மேலும் மிளிர்கிறது.

தூது

            ஒருவருடைய கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்கும் பொருட்டு பறிதொருவரை அனுப்புவது தூது. தொல்காப்பியத்திலேயே சுட்டப்படும் இத்தூது இலக்கியம் சங்க இலக்கியத்திலும் தொடர்கிறது. அதனை, இருபதாம் நூற்றாண்டிற்கும் கடத்திய பெருமை பாரதிக்கும் உண்டு.

``செல்ல வல்லாயோ? – கிளியே!
செல்ல நீவல்லாயோ.
வல்ல வேலமுரு கன்தனை - இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று``

என்று தனது எண்ணத்தைக் கிள்ளையின் வாயிலாகத் தெரிவிக்கிறார்.

பஞ்சகம்

            ஒரு பொருளைப் பற்றி பாடும் ஐந்து பாடல்களின் தொகுதியே பஞ்சகம் ஆகும். இது பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றிய பாடல் தொகுதியாக இருக்கும். சிறுபான்மை மக்களைப் பற்றியும் மேம்பட்டவர்களைப் பற்றியும் அமையும். இது வெவ்வேறு பாவும் பாவினமாகவும் வரும். இவ்வகையில் பாரதி இரண்டு பஞ்சகம் படைத்திருக்கிறார். ஒன்று மஹாசக்தி பஞ்சகம். மற்றொன்று  மஹாத்மா காந்தி பஞ்சகம்.


பள்ளியெழுச்சி

            அரசன் விழித்தெழப் பாடுவது துயிலெடை எனும் இலக்கிய வகையாகும். இதனையே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பள்ளியெழுச்சி என்று கூறுகின்றனர். அதுபோல அரசன் துயில்கொள்ளப் பாடுவது கண்படை எனும் இலக்கிய வகையாகும். இதனைத் தொல்காப்பியம்,

``தாவில் நல்லிசை கருதி கிடந்தோர்க்கும்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்``
-தொல்காப்பியம் 1037
           
என்கிறது. இவ்வகையில் இதுவரை சுமார் பதினொரு இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இந்தப் பதினொரு இலக்கியங்களில் பத்து இலக்கியங்கள் இறைவனுக்கும் இறைவனைப் போற்றுபவர்களுக்கும் மட்டும் படைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாரதியின் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி மட்டும் தான் மாறுபட்டுள்ளது. கவிதை வடிவில் புதுமை புகுத்திய பாரதி இலக்கிய வகையிலும் புதுமையைப் புகுத்தி,

``பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் போயின யாவும்
...........................................
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
வியப்பது காண்! பள்ளியெழுந்தருளாயே``

என்று தூங்கிய பாரதத் தாயைத் தட்டி எழுப்புகிறார்.

நவரத்தினமாலை

            நவம் - ஒன்பது. நவரத்தினமாலை என்பது ஒன்பது செய்யுள்களின் தொகுப்பாகும். இவ்வகை இலக்கியத்தையும் பாரதி படைத்துள்ளார். இவருடைய பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள், இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப்பெற்றிருக்கின்றன.


தசாங்கம்
           
            அரசச் சின்னங்கள் பத்தினைப் பத்து வெண்பாக்களால் புகழ்ந்து பாடுவது தசாங்கம் ஆகும். இவ்வகை இலக்கியம் ‘ஷதசாங்கப் பத்து என்றும் அழைக்ப்படுகிறது.

``புல்லும் மலையாறு நாடுஊர் புனைதர்மா
கொல்லும் களிறு கொடிமுரசம் - வல்லகோல்
என்றிவை நஞ்செழுத்தோடு ஏலா வகைஉரைப்ப
நின்ற தசாங்கம் எனநேர்``
-           வெண்பாப் பாட்டியல் 19

என்று வெண்பாப் பாட்டியல் இதற்குரிய இலக்கணத்தை இயம்புகிறது. இவ்வகை இலக்கியத்தையும் இயற்றி பாரததேவியின் புகழைப் பார்முழுதும் பறைசாற்றியிருக்கிறார். நாமம், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்ற பாரத தேவியின் பத்து உறுப்புகளை காம்போதி, வசந்தா, மணிராங்கு, சுருட்டி, கானடா, தன்யோசி, முகாரி, செஞ்சுருட்டி, பிலகரி, கேதாரம் என்ற பத்து இராகங்களில் பாடியிருக்கிறார்.

கும்மி

            இன்றும் கிராமங்களில் வழக்கில் இருந்து வரும் கும்மி இலக்கிய வகையும் பாரதியின் படைப்பில் அடக்கம். பெண்கள் விடுதலைக் கும்மி என்ற பெயரில் இது அமைந்துள்ளது.

``கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
            குலுங்கிடக் கைகொட்டி கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
            நன்மை கண்டோ மென்று கும்மியடி!

என்று பெண்களின் விடுதலைக்கும்மி பாடி பெண்கள் விடுதலைக்கு விளக்கேற்றியவர் பாரதியார் ஆவார்.



காதல்

            காதல் எனும் இலக்கியவகையும் பாரதி கைபட்டு மிளிர்கிறது. தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் விரும்பிக் கூடுகின்ற நிலையே இயற்கைப் புணர்ச்சி ஆகும். இந்த இயற்கைப் புணர்ச்சிப் பொருளில் வந்த தனி இலக்கிய வகையே காதல் ஆகும்.

``கொண்ட மயல் இரடிக் கண்ணியில்; இசை காதலுக்கே``
-           சுவாமிநாதம் 171

என்று இதனைச் சுவாமிநாதம் கூறுகின்றனது. தன் மனைவியுடனான காதலைக் ஷஷகண்ணம்மாவின் காதல்|| என்ற பெயரில் பாரதி இலக்கியம் படைத்துள்ளார்.

``காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்
            காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் நில
            வூறித் ததும்பும் விழிகளும்...``

என்று தன் காதலைக் கவியாக்கி கரைந்திருக்கிறார்.

            ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலிப்பா, கண்ணி, கலித்துறை, கலிவிருத்தம், கீர்த்தனை, குறள் வெண்பா, செந்துறை, சிந்து, தாழிசை, வஞ்சித்துறை, வெண்பா போன்ற பா வடிவங்களும் இன்ன பா என்று வகுக்கவியலாப் பாடல்கள் சிலவும் இவரது படைப்பில் காணப்படுகின்றன. ‘‘இலக்கிய வடிவம் என்பதைப் பொறுத்தவரையில் பாரதி முற்காலக் கவிஞர்களின் நிழலில் மறைந்து நின்று பாடியதைப் பார்க்கிறோம்’’ என்ற தமிழவன் (இருபதில் கவிதை) கருத்து இங்கு நம் சிந்தைக்குரியது.

நிறைவுரை

            பாரதியின் காலத்தில் தான் பல்வேறு பிரபந்த வகைகளும் பா வகைகளும் மறுமலர்ச்சி அடைந்தன என்பதை இக்கட்டுரை தெளிவுற விளக்குகிறது. பாரதியின் படைப்புகளைப் படித்து இரசித்தால் மட்டும் போதாது. அவரது ஆசைகளையும் கனவுகளையும் கவியில் மட்டும் பாராது நினைவிலும் இருத்திக் கொள்ள வேண்டும்.

Wednesday, March 7, 2012



சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற (2 மற்றும் 3 மார்ச் 2012)  ‘‘தமிழ்ப் புனைகதை இலக்கியங்களின் தற்காலப் போக்குகள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கள் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களுடன் எடுத்துக்கொண்ட படம்.

Thursday, March 1, 2012

சேத்தூர் (சேறை)

செழுமை + பழமை = சேறை




தொடக்கம்

            தொப்புள் கொடி உறவுகள் கூட திசைமாறிப் போகலாம். ஆனால் தான் பிறந்த புண்ணிய பூமியின் அன்பு என்றும் அகலாது. காரணம் தாய் தன்னை ஈன்றாலும் தான் மடியும் வரையும் மக்கும் வரையும் தாங்கி நிற்பது மண் மட்டும் தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த மண்ணின் பெயரைத் தன் மார்பு தட்டி கூறி ஒவ்வொரு மனிதனும் பெருமைப் பட்டுக் கொள்கிறான். இது சங்க காலம் முதல் தொடர்கின்ற ஒன்று. எத்தனையோ அறிஞர்கள் தன் பெயருக்கு முன்னால் பிறந்த மண்ணின் பெயரைச் சேர்த்துக்கொள்கின்றனர். காரணம் பெயர் எடுப்பதற்கு மட்டும் அன்று தன் மண்ணின் பெயரை நிலைநாட்டவும் தான். அத்தகைய அறிஞர் பலர் தனது மண்ணின் பெருமையை இலக்கியமாக வடித்தனர். அம்மண்ணின் வரலாற்றை அதன் வழி அறிய முடியும்.



சேறை(சேத்தூர்) = செழுமை



‘‘ஆண்மறை நாடு'' என்று அன்போடு இது அழைக்கப்படுகிறது. தேவியாறு, நகரையாறு, கோறையாறு, புறவடியாறு, மனமாக்கியாறு என்று பஞ்ச நதிகளின் மூலம் பசுமையாகக் காட்சியளிக்கின்றது. இதனைச் சேறைத் தலபுராணத்தில் நாட்டுப் படலம்



                        ``கொண்டன் மேதி கொழுங்கு வடேமடி
 
                          மண்டலத்தில் வருநதி நீண் முலை


                         கண்ட நீண்முலைக் காம்பின் வடிந்தபா


                        லுண்ட கன்றுகளொக்குங் குளங்களே''


                                                                                     - சேறைத் தலபுராணம்.



என்று கருமுகில் பசுவாகவும் மலைக் குன்றுகள் பசுவின் மடுக்களாகவும் ஆறுகள் மடுக்களின் காம்புகளாகவும் குளங்கள் பாலைக் குடிக்கும் கன்றுகளாகவும் உருவகப்படுத்திக் கூறுகின்றது. ‘‘சோழ நாடு சோறுடைத்து'' என்று தமிழறிஞர்கள் கூறுவது பழமை. ஆனால் ``சோற்றுக்கு அலைந்தவர்கள் சேற்றூருக்குச் செல்லுங்கள்'' என்று கூறுவது தான் புதுமை. இதிலிருந்து இத்தேசத்தின் செழுமை நன்கு புலப்படும்.



``மணிவயல் வாளைபாய வளரிளங் கதலி தூங்கும்


இணையின் மென்பழஞ் சிந்துந் தேனிடை விடா தொழுகச் செந்நெற்


பனையெலா மோங்குஞ் சேறைப் பதிவளர் நாட்டுப் பண்ணைக்


கணைநிகர் கருங்கட்பண் மங்கையர் வரவுரைக்கின்றேன்.''


                                                                                         - சேறைபட் பிரபந்தம்



என்று சேறையின் செழுமையை சேறைப்பட் பிரபந்தம் செப்புகிறது.



சேறை = பழமை

             `சேற்றூர்', என்றும் `போற்றூர்' என்றும் இலக்கியங்கள் பாராட்டுகின்றன. சேறை, சேரூர், சேம்மரம், குலசேகர புரம் என்னும் பெயர்களைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சேற்றூர் என்பது மருவி இன்று சேத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ஏகாம்பரத்தேவரின் மரபில் தோன்றியதே சேறை சமஸ்தானம் என்று ‘நதிவிலாசம்' கூறுகிறது.

                இராமன் இராமேசுவரத்தில் மணலைக் குவித்து சிவலிங்கத்தை வழிபட்டார். திருவாடனைக்கு அருகில் உள்ள உப்பூரில் உப்பைக் கவித்து விநாயகரை வழிபட்டார். அதுபோல சேத்தூரில் அகத்தியர் மணலைக் குவித்து வழிபட்டதாகப் புராணங்கள் பகர்கின்றன.


                      கிபி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிலையும் சமண முனிவர்கள் வாழ்ந்த குகையும் இங்கு அமைந்துள்ளது.

                 சுந்தரபாண்டியன், ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியன், அதிவீரராமன் ஸ்ரீவல்லபதேவன், தர்மப்பெருமாள் குலசேகரப்பாண்டியன், செண்பக பராக்கிரம பாண்டியன் ஆகிய மன்னர்களின் காலத்துக் கல்வெட்டுக்கள் சுமார் 14 இத்தேசத்தில் இருக்கின்றன.

                 ``சென்று நேரியன் சேனை புகுந்துநீ

                   யொன்றும் பூசலுடற் றுமவ் வேளையிற்


                   குன்று போலுற் குறட்டை யேவிநாம்


                    வென்று நல்குவம் வெற்றியுனக் கொன்றான்''


                                                                                           - சேறைத் தலபுராணம்

என்று இறைவனே பாண்டிய மன்னனுக்குச் சேவகம் செய்ததைச் சேறைத் தலபுராணம் சிவபெருமான் சேவகஞ் செய்த படலம் கூறுகின்றது. மூவேந்தரும் வழிபட்ட தலம் என்று பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிலங்குகிறது.

                 தோல்வியே கண்டிராத மருதநாயகத்தை எதிர்த்துச் சமமாக 1756 ல் போரிட்டுள்ளது. 1800 க்குப் பிறகு சேத்தூர் பாளையம் என்ற தகுதியினைப் பெற்றது. 1803 ம் ஆண்டுக்கு முன்பு வரை இது மதுரை மாவட்டத்திலும் அதன் பின்பு சீர்மிகு திருநெல்வேலி மாவட்டத்திலும் இருந்தது. 1910 முதல் இராமநாதபுரம் மாவட்டத்திலும் 1984 முதல் விருதுநகர் மாவட்டத்திலும் இருந்து வருகின்றது.


சேறையும் செந்தமிழும்


                    சேறையில் முத்தமிழும் முகிழ்த்தது. முத்தமிழ் வித்தகர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தது. சேறைமன்னர் சுந்தரராசுத் தேவர் `துறைக்கோவை', `பதிகப்பாமாலை', `தனிப்பாடற்திரட்டு' போன்ற அற்புதக் கவிகள் புனைந்துள்ளார். வடமொழில் இருந்த சேறைத் தலபுராணத்தை 1574 ல் சிந்தாமணிப்பிள்ளை என்ற பொன்னாயிரங்கவிராயர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதனை 1893 ல் இராமசாமிக்கவிராயர் வெனியிட்டுள்ளார். ‘குறவஞ்சிப் பிரபந்தம்', ‘தாய்மகளெசல்' போன்ற பல இலக்கியங்களை இராமசாமிக்கவிராயர் படைத்துள்ளார். சங்கரமூர்த்திக் கவிராயர் ‘சேறைப்பட் பிரபந்தம்' பாடியிருக்கிறார். மன்னர் பரம்பரையின் 14 வது பாட்டனார் சுந்தரராசுத் தேவர் ‘அன்னம்விடு தூது' பாடியிருக்கிறார். மு.ரா.கந்தசாமிக் கவிராயர் ‘குமணவள்ளல் சரித்திரம்' பாடித் தமிழ் வளர்த்துள்ளார். இத்தனைக்கும் மேலாக பாவேந்தன் பாரதி தனது இளமையில் சிறிது காலத்தை சேறையில் செலவழித்துள்ளார் என்பதும் சிறப்பு. ‘‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது முந்தைய மொழி. ஆனால் இன்றைய திருமொழி என்னவெனில் சேறைச் செந்நிலமும் செந்தமிழ் செப்பும்'' என்ற வரலாற்று ஆய்வாளர் ந.இராசையாவின் வாக்கு முற்றிலும் உண்மையே.


தொகுப்புரை

                சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தப் பாண்டிய தேசத்தின் குறுநிலமே சேறை. இச்சேறையம்பதியும் முத்தமிழ் வளர்த்தது. செழுமை பழமையும் மிக்க இம்மண்ணின் பெருமைகளை இங்கு தோன்றிய இலக்கியங்கள் பறைசாற்றி நிற்கின்றன.