பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Monday, May 28, 2012

கலித்தொகை மடல்

கலித்தொகை மடல்

        மடல் என்பது புறக்காழுடையனவாகிய தாவரங்களுக்கு வரும் பெயர் என்பார் தொல்காப்பியர். ஆனால், தமிழ் இலக்கிய உலகில் மடல் என்றால் மடல் என்னும் இலக்கிய வகையையே குறிக்கும். இது தமிழில் வழங்கும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. திருமங்கையாழ்வாரின் காலத்திலே (பெரிய திருமடல், சிறிய திருமடல்) தனி இலக்கிய வடிவங்கள் தோன்றினாலும் இதுகுறித்த கருத்து தொல்காப்பியார் காலத்தில் இருந்தே இருந்து விருகின்றது. நற்றிறணை (பா.எண்- 342, 146, 152, 387), குறுந்தொகை (பா.எண் – 14, 17, 32, 173, 182), திருக்குறள் (நாணுத்துறவு உரைத்தல்) போன்றவற்றில் மடல் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. அவை போலவே கலித்தொகையிலும் (பா.எண்- 58, 61, 138 – 141, 147) மடல் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளது.

          மடல் என்பது பெருந்திணைக்குரியது. அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளில் இன்பமே சிறந்தது எனச் செப்புகின்றது. இதனைத் தொல்காப்பியர்,
                 ‘‘ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
                 தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
                 மிக்க காமத்து மிடலோடு தொகைஇச்
                செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே’’
                                                                        -        தொல்காப்பியம், 997

என்பார். அதுபோல மடல் மகடூஉக்கில்லை என்பார். இதனை,

                 ‘‘எத்தினை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
                  பொற்புடை நெறிமை இன்மைனயானே’’
                                                                       -  தொல்காப்பியம், 981

என்று கூறுவார். இக்கருத்தினைத் தெய்வப்புலவரும்,

               ‘‘கடலென்ன காமம் உழந்தும் மடலேறாப்
                பெண்ணின் பெருந்தக்கது இல்’’
                                                                             -        திருக்குறள்

என்று வழிமொழிவார். ஆனால், பன்னிருபாட்டியலோ,
                 
                      ‘‘மடன்மாப் பெண்டிர் ஏறார் ஏறுவர்
                       கடவுளர் தலைவராய் வருங்காலே’’
                                                                     -  பன்னிருபாட்டியல், 63

என்று கடவுளைத் தலைவனாகக் கொண்டால் பெண் மடல் ஏறலாம் என்கின்றது. இதற்குத் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமடலும், சிறிய திருமடலும் அடிகோலியது எனலாம். மொத்தத்தில் தலைவியை அடையத் தலைவன் பயன்படுத்தும் இறுதி ஆயுதம் மடல் எனலாம்.

          ‘‘மடலேற்றம் என்பது ஒத்த காமம் உடையார் மாட்டே நிகழ்வது’’ என்பார் வ.சுப.மாணிக்கம். அவ்வாறு அமையின் அது ஐந்திணையின்பாற்படும். அப்போது தலைவன் மடல் ஏறுவேன் என்று கூறுவான். ஆனால், தலைவன் மடல் ஏறினால் அது பெருந்திணையின்பாற்படும். கலித்தொகையில் இவ்விரண்டும் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது. சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள மடல் குறித்த பாடல்கள் அனைத்தும் மடலேறுவேன் என்று கூறுவதாகவே அமைந்துள்ளது. ஆனால், கலித்தொகையில் மட்டுமே மடலேறிய தலைவனைக் (பா.எண்- 138 – 140) காணமுடிகின்றது. மேலும், தலைவன் மடல் ஏறுவேன் (பா.எண்- 58, 61) என்று கூறுவதாகவும் தலைவன் மடல் ஏறிவற வேண்டும் என்று காமனைத் தலைவி ( பா.எண்- 147) வணங்குவதாகவும் அமைந்துள்ளது.

          மடல் என்பது பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையாகும். ஆனால், தலைவன் இதனை உண்மைக் குதிரையாக கருக்கொள்கிறான்.

                 ‘‘மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை
                    அணிப்புளை ஆவிரை எருக்கொடு பிணித்துயாத்து’’
                                                                                        -  கலி, 138 (8 – 9)

என்று மயில் இறகுகளை நூலில் கட்டி பூளைப்பு, ஆவிரம்பூ, எருக்கம்பூ இவற்றைத் தொடுத்து மடல் குதிரையின் கழுத்தில் கட்டி இருப்பதாகக் கலித்தொகை பகர்கின்றது. ஆனால், கலித்தொகை 139 வது பாடல் ஆவிரம்பு மாலையை மார்பில் அணிந்து எருக்கம் பூக் கணிணியைத் தலையில் சூடி, பனங்கருக்குக் குதிரைக்கு மணிக்கட்டி, அதன் மேல் தலைவன் ஏறுவதாக முரணாகக் கூறப்பட்டுள்ளது ஈண்டு நோக்கத்தக்கது. ஆனால், பின்னர் தோன்றிய மடல் இலக்கியங்களில் எருக்கம் மாலை, எலும்பு மாலை போன்றவற்றைத் தலைவன் சூடியதாகக் கூறப்பட்டுச் சிவனை உவமையாகக் கூறுவதாகவே அமைந்திருக்கின்றன (பெரிய திருமடல், சிறிய திருமடல் தவிர).

          கலித்தொகையில் மடல் குறித்து விரிவாகப் பேசும் (138 – 141) நான்கு பாடல்களும் வெவ்வேறு நிலையில் அமைந்துள்ளது.

Ø                       முதலில் இணைந்த தலைவி பின்பு வேறுபட்டு நிற்கின்றாள். தன் அன்புக்கு அவள் பரிசாகக் கொடுத்தது கருக்கு நிறைந்த மடல் நான் தந்த மணமலர்க்கு அவள் தந்த பூக்கள் பூளையும் எருக்கும். பின் யான் பெற்ற துன்பத்தைக் கண்டு வருந்தித் தன்னுடன் இணைந்ததாகப் பாங்கர்க்குத் தலைவன் தெரிவிப்பதாக ஒருபாடல் (138) அமைந்துள்ளது.

Ø                       அன்பின் ஏமாற்றத்தால் தலைவி தந்த காதல்நோய் தலைவனின்  மனஉறுதியை உரைக்கின்றது. அத்துன்பக்கடலை நீந்துவதற்கு இம்மடலையே கலமாகக் கொண்டு பயணிக்கின்றான். தலைவியை அடைவதற்காகவே தான் இப்பயணம் மேற்கொண்டிருப்பதாகச் சான்றோர்களிடம் செப்புகின்றான். பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதும் சான்றோரே என் துன்பத்தை நீக்குங்கள் என்று முறையிடுகிறான்.

Ø                       தலைவியின் மீது கொண்ட அன்பின் மிகுதியால் தான் மடல் ஏறினேன். எனவே எனது துயரினைத் துடையுங்கள் என்று கண்டோருக்குக் கூறியதாக ஒருபாடல் அமைந்துள்ளது.

Ø                       தலைவன் மடல் ஏறி வருவதால் தமராகி ஊரில் தலைகாட்ட முடியாது என்ற நிலையில் தலைவியை சுற்றத்தாரே தலைவியைக் கொடுப்பதாக ஒரு பாடல் அமைந்துள்ளது.

Ø                       தலைவியின் அழகில் மயங்கிய தலைவன் தான் தலைவியை விரும்புகிறான். அவளின் அழகிற்குக் காரணம் அவளின் வீட்டார் தான். எனவே அவர்களைத் தண்டிக்கவும் தனது அன்பின் மிகுதியாலும் தான் மடலூர்வதாக ஒரு பாடல் (58) அமைந்துள்ளது.

Ø     தலைவன் தலைவியுடன் கூட தோழியை
நாடுகிறான். அப்பொழுது தோழி குறை நவில்கிறாள். தலைவன் தான் தலைவியை அடைய மடலூறவும் தயாராக இருப்பதாகக் கூறும்படியாக ஒரு பாடல் (61) அமைந்துள்ளது.

Ø     தலைவனுடன் கூடிய தலைவி தலைவனைப்
பிரிகிறாள். பிரிவுத்துயர் தாங்காத தலைவி தலைவனை நினைத்துப் புலம்புகிறாள். அப்பொழுது தலைவன் தன் மேல் அன்பு மிகுதியாக மடல் ஏற வேண்டும் எனக் காமனை வேண்டுவதாக ஒரு பாடல் (147) அமைந்துள்ளது.

          இவ்வாறு கலித்தொகையில் அமைந்துள்ள மடல் குறித்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது. மேலும், மடல் என்பது களவின் இறுதி நிலை. அதிலும் தலைவன் தலைவியை அடைவதற்குப் பல வழிமுறைகளையும் ஆசிரியர் சுட்டியுள்ளார். இலக்கியம் என்பது காலந்தோறும் மாறும் தன்மையுடைத்து. அதன் அடிப்படையில் இலக்கணங்களும் மாறியமையைக் கலித்தொகைப் பாடல்கள் உணர்த்துகின்றது. எனவே, கலித்தொகையின் மடல் குறித்த செய்திகள் மடல் இலக்கிய வகையின் துளிர் நிலை எனக்கொள்ளல் தகும். மடலேறுதல் மேம்போக்கில் காதல் மிகுதிப்பாட்டைக் காட்டுகின்றது என்பதை விட உடன்போக்கு நிகழ்வு பிழையெனக் கொள்ளாத காலத்தே பெற்றோர் விருப்பதிற்கு மதிப்பு கொடுக்கும் பண்பட்ட காதலரைக் காட்டுகிறது. இது, தமிழர் தம் அறப்பண்பாட்டின் முக்கியக்கூறாகும்.

Thursday, May 24, 2012

ஐங்குறுநூற்று மருதத் திணையில் நீர்நிலைகள்

ஐங்குறுநூற்று மருதத் திணையில் நீர்நிலைகள்

முன்னுரை

          சங்க இலக்கியங்களின் வனப்பிற்கும் செல்வாக்கிற்கும் அடிப்படை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையே ஆகும். இயற்கைச் சமூகத்தின் அங்கமாக வாழ்ந்த பண்டைய மனிதனின் ஒவ்வொரு செயலிலும் இயற்கை பரிணமித்தது. அவற்றுள் மருதத் திணை மனிதர்கள் இயற்கையோடு மிகவும் இணக்கமுற வாழ்ந்துள்ளனர். அவர்தம் வாழ்வியல் வளமும் காதலும் அழகுணர்வும் பொதிந்த தன்மையதாய் காணப்பெற்றது. அவ்வகையில் இயற்கை வளங்களுள் ஒன்றான நீர்நிலை ஐங்குறுநூற்று மருதத் திணை மாந்தரிடையே பெற்ற இடம் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மருதத்திணைச் சமூகம்

          திணைச் சமூகம் என்பது இயற்கை வளங்களுடன் பின்னிப்பிணைந்து காதலையும் வீரத்தையும் பேணிய சமூகம். வாழும் பகுதியில் நிறைந்திருந்த இயற்கைக் கூறுகள் மனிதர்களின் வாழ்வியலை வெகுவாகப் பாதித்தன. ஏறக்குறைய இயற்கைக் கூறுகளின் கட்டளைப் படி மனிதன் வாழ்ந்தான் எனலாம். அவ்வடிப்படையில் மருதம் நீங்கலான நான்கு நிலத்தோர்கள் இயற்கையை அதன் நிலையிலேயே எதிர்கொண்டு வாழ்ந்தார்கள். மருத நிலத்தவர் மாத்திரம் இவர்களிலிருந்து விலகி நின்று காடு கொன்று கழனி சமைத்து பயிர் விளைவித்து நிலம் புதுக்கினர். இதிலிருந்தே மருத நிலமக்களின் தனித்துவத்தினை அறியலாம். மருதத்திணையின் நீர் வளமே அத்திணையில் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். அவ்வகையில் நீர்நிலை குறித்த செய்திகள் மருதப் பாடல்களில் மிகுதியாக உள்ளன.

மருதத்திணையில் நீர்நிலைகள் பெறுமிடம்

          மருதத்திணையில் முப்பத்திரண்டு இடங்களில் நீர்நிலைகள் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. புனலாடல் குறித்ததாக பதினைந்து இடங்களிலும் (பாடல்: 15, 16, 32, 64, 69, 71, 72, ……. 80), தலைவனை அடையாளப்படுத்த பன்னிரண்டு இடங்களிலும் (பாடல்: 2, 6, 7, 9 – 13, 70, 83, 88, 97), ஊரிற்கு அணிகலனாகத் திகழ்ந்த மாற்றை மூன்று இடங்களிலும் (பாடல்: 14, 45, 81), நம்பிக்கை மரபினை உணர்த்தும் விதமாக ஓர் இடத்திலும் (பாடல்: 84),  குடிநீருக்காகப் பயன்படுத்தப் பட்ட மாற்றினை ஓர் இடத்திலும் (பாடல் எண்: 28) நீர்நிலைப் பதிவுகள் இடம்பெறுகின்றன.

புனலாடலில் நீர்நிலைகள் பெறுமிடம்

          மக்கள் களிப்புடன் வாழ்ந்த மருதத்திணையில் புனலாடல் நிகழ்வு காதல்களிடையே மிகுந்திருந்தது. களவுக்காலப் புணர்ச்சி வகைகளுள் புனல்தரு புணர்ச்சியும் ஒரு வகையாகும். மருதத் திணையில் எட்டாவது பத்தாகப் ‘புனலாட்டுப் பத்து’ என்ற ஒரு பத்தும் உள்ளது. அதனின்று மருத நில மக்கள் நீராடலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அறியலாம்.

          பெரும்பாலும் பரத்தையுடன் தலைவன் புனலாடுவதாகவே மருதத் திணைப் பாடல்கள் பதிவு செய்கின்றன. பாடல்கள் 72, 74 மட்டும் தலைவியோடு நீராடிய தலைவனைக் காட்டுகிறது. புனலாடல் மருத மருங்கள் நிறைந்த நீர்த்துறையில் நிகழ்ந்துள்ளது. புனலாடலின் போது தழையாடையும் அணிகலனும் அணிந்தவர்களாகப் பெண்டிர் இருந்துள்ளனர். அதனை,

          ‘‘மருது உயர்ந்து ஓங்கிய விரிபும் பெருந்துறைப்
                             பெண்டிரோடு ஆடும்……’’
                                                          - ஐங் 33 (2-3)
என்ற வரிகளாலும்

          ‘‘பசும்பொன் அவிர்இழை பைய நிழற்ற
          கரைசேர்மருதம் ஏறிப் பண்ண பாய்வோள்’’
                                                          - ஐங் 74 (2-4)
என்ற வரிகளாலும் அறியலாம். மேலும், வேழம் என்னும் தெப்பம் கொண்டு மனம் மகிழ்வுறும் படி காதலர் புனலாடியுள்ளனர்.

          பரத்தையோடு தலைவன் புனலாடுங்கால் தலைவியால் ஒறுக்கப்படுகிறான். புனலாடல் அனைவருக்கும் பொதுவான நீர்த்துறையில் நிகழ்ந்துள்ளது. தலைவனைப் பரத்தையோடு அவ்விடத்தே கண்டோர் தலைவியிடம் அவன் செய்த செயல் கூற ஊடலும் பிறக்கின்றது. புனலாடுதலுக்குப் பொதுலவான நீர்நிலை இருந்தமாற்றை,

          ‘‘பலர்ஆடு பொருந்துறைஇ மலரொடு வந்த
                             தண்புனல் வண்டல் உய்த்தென’’
                                                          - ஐங் 68 (2-3)

என்ற அடிகளால் அறியமுடிகின்றது. பரத்தையோடு புனலாடிய தலைவனைப் பற்றி

          ‘‘……….. மகிழ்நன்
          கடன்அன்று என்னும் கொல்லோ நம்ஊh;
          முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
          உடன்ஆடு ஆயமோடு உற்ற சூளே?’’
                                                          - ஐங் 31 (1-4)

என்று வெறுக்கும் தலைவி அவன் சூளிட்டதை நினைவுபடுத்துகிறாள்.

          தலைவன் பரத்தையோடு நீராடியதை ஊரார் கண்டு தலைவிக்குத் தரிவிக்க அலர் ஏற்படுகிறது. தலைவியும் அவனுக்கு வாயில் மறுக்கிறாள். இதனை,

          ‘‘பலர் இவண் ஒவ்வாய்இ மகிழ்ந! அதனால்
          அலர் தொடங் கின்றால் ஊரே மலர
          தொல்நிலை மருதத்துப் பெருந்துறை
          நின்னோடு ஆடினள் தண்புனல் அதுவே’’
                                                          - ஐங் 75 (1-4)

என்னும் வரிகளாலும் அறியலாம். இது போன்ற தன்மையிலேயே பல இடங்களில் புனலாடல் நிகழ்வில் நீர்நிலைகள் சுட்டப் பெறுகின்றன. தலைவன் தலைவியோடு நீராடிய செய்தியும் பதிவுசெய்யப் பெற்றுள்ளன. தலைவனுடன் தலைவி ஊடிய பொழுது அவர்களது ஊடல் தீர்க்கும் முகமாகத் தலைவனால் அவர்கள் நீராடிய நிகழ்வு நினைவுறுத்தப் பெறுகின்றது. பின்னர் ஊடலும் தணிகின்றது. மருதத்திணையில் 72, 73, 74 மூன்று பாடல்களும் இப்போக்கில் அமைந்துள்ளன.

          ‘‘ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி
          வாடினும் பாடு பெறும்’’
                                                          - திருக்குறள் 1322

என்பார் வள்ளுவர். அக்கருத்தியலே,

          ‘‘வண்ண ஒண்தழை நுடங்க வால்இழை
          ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்தெனக்
          தண்ணென்று இசினே பெருந்துறைப்புனலே’’
                                                          - ஐங் 73 (41-4)

என்ற பாடலிலும் இடம்பெறுகின்றது. தலைவியானவள் அரிவைப் பருவத்தில் தலைவயொடு புனலாடியுள்ளாள். இப்போது அவள் ஒளிபொருந்திய தழையாடையும் அணிகலன்களும் அணிந்திருந்தாள். நீராடிய துறையில் குவளை மலர்ந்து மணம் வீசியது என்றும் தலைவன் நினைவு கூர ஒருவகையில் தலைவியை அது ஆற்றியது. நீரிற்குக் குளிர்விக்கும் தன்மை அடிப்படையாகும். இவ்விடத்தே நீராடுதல் குறித்த நிகழ்விற்குக் கூட உள்ளத்தைக் குளிர்விக்கும் ஆற்றல் இருந்ததனை அறியமுடிகின்றது.

அடையாளம் உணர்த்துதல்

          மருதத்திணையில் தலைவனை அடையாளப்படுத்த நீர்நிலை பயன்படுகின்றது. நீரின் தன்மையான குளிர்ச்சி என்ற பண்போடு நிலத்தின் பொதுவான ஆடவரின் பெயரையும் தாங்கித் ‘தண்துறை ஊரன்’ என்ற பெயரின் மருத நிலத்தலைவன் எட்டு இடங்களில் குறிப்பிடப்படுகிறான். மேலும், துறைகேழ் ஊரன், மாநீர்ப் பொய்கை ஊர என்றெல்லாம் நீர்நிலை மனிதனை அடையாளப்படுத்த உதவியது. அகத்திணையில்,

          ‘‘மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
          சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’’
                                                          - தொல்காப்பியம் 994

என்பது விதியாகும். அம்மரபுப் படியே மருத நிலத்தலைவன் மேற்கண்டவாரெல்லாம் குறிப்பிடப் பெறுகிறான். தலைவன் கருப்பொருள் வழியே அடையாளப்படுத்தப்படும் போதும் நீர்நிலையே அதில் முதலிடம் பெறுகின்றது. மேலும், தலைவியையும் அடையாளப்படுத்த ஓரிடத்தில் நீர்நிலை சுட்டப்பெறுகின்றது.

          ‘‘கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
          தன்துறை ஊரன் கேண்மை
          அம்பல் அகற்க!......’’
                                                - ஐங் 9 (4-6)

என்ற வரிகளாலும்,

          ‘‘மனைநடு வயலை வேழம் சுற்றும்
          துறைகேழ் ஊரன் கொடுமைநாணி’’
                                                          - ஐங் 11 (1-2)

எனும் வரிகளாலும் நீர்நிலையை வைத்து தலைவன் அடையாளப்படுத்தப் பட்டமையை அறியலாம். நீர்நிலையை வைத்துத் தலைவியும் அடையாளப்படுத்தப்படுகிறாள். அதனை,

          ‘‘பகன்றை வால்மலர் மிடைந்த கோட்டைக்
          கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்
          பொய்கைஇ ஊரன் மகள் இவள்’’
                                                          - ஐங் 97 (1-3)

என்ற வரிகளின் வழியும் அறியலாம்.

ஊரிற்கு அணிகலன்

          ‘‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’’ என்பது முதுமொழி. இவ்விடத்தே நீர்நிலைக்குச் சமுதாயம் கொடுத்த முக்கியத்துவம் விளங்கும். ஊரை ஒரு உடலாக எண்ணின் அதற்கு அணிகலன்களாக நீர்நிலைகள் கருதப்பெற்றன. இதனை,

          ‘‘வடிகொள் மாஅத்து வண்தளிர் நுடங்கும்
          அணித்துறை ஊரன் மார்பே’’
                                                          - ஐங் 14 (1-2)
மேலும்,

          ‘‘கூதிர் ஆயின் தண்கலிழ் தந்து
          வேனில் ஆயின் மணிநிறம் கொள்ளும்
          யாறுஅணிந் தன்றுநின் ஊரே’’
                                                          - ஐங் 45 (1-3)

என்ற வரிகளால் அறியலாம்.

நம்பிக்கை, மரபு உணர்த்துமிடம்

          புதுப்புனலாடுதல் குறித்துப் பரிபாடல் விரிவாகப் பேசும். நீர்த்துறைகளில் சென்று நீராடின் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. மகளிர் பலர் கூடித் தைத் திங்களில் அவ்வாறு நீராடிய மரபு இருந்துள்ளது. அதனை,

          ‘‘நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
          தைஇத் தண்கயம் போல’’
                                                          - ஐங் 84 (2-3)

என்ற வரிகளால் அறியலாம்.

குடிநீர்ப்பயன்பாடு

          குளிப்பதற்கு, நீராடுவதற்கு என இரு நிலைகளில் நீர்நிலைகள் பகுக்கப்பட்டிருந்தன. குடிநீருக்காகப் பயன்படுத்தப்பெற்ற நீர்நிலைகள் ‘உண்துறை’ என்று அழைக்கப்பெற்றன. அதனை,

‘‘உண்துறை அணங்கு இவள் உறைநோய்ஆயின்’’
                                                - ஐங் 27 (1)

என்ற வரிகளால் அறியலாம்.

நிறைவுரை

          கருப்பொருள்களுள் ஒன்றான நீர்நிலைகள் மருதத்திணை மக்களோடு பிரிக்க இயலாத நிலையில் இருந்ததையும் நீர்நிலைகள்  அவர்களின் வாழ்வியலோடு ஒன்றியிருந்தமாற்றையும் இக்கட்டுரை வழியே தெள்ளிதின் அறியமுடிகின்றது.


நன்றி.
ம.பிரசன்னா,
ஆய்வாளர்.