பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, February 25, 2021

பண்டித வித்வான் தி.சங்குப்புலவர்

 

பண்டித வித்வான் தி.சங்குப்புலவர்

 

‘‘காதிலகுங் குண்டலமாக் குண்டலகே சியுமிடையே கலையாச் சாத்தன்

ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை யாவளையா பதியும் மார்பின்

மீதிணிசிந் தாமணியாச் சிந்தாம ணியுங்காலில் வியன்சி லம்பாத்

தீதில்சிலப் பதிகார மும்புனைந்த தமிழணங்கைச் சிந்தை செய்வாம்’’

-          தி.சங்குப்புலவர், தனிப்பாடல்

            செந்தமிழ்ச் செல்வம் வளம்கொளிக்க, புலமை எனும் அமுதநீர் ஊற்றி வளர்த்தோர் பலராவர். தொல்காப்பியன் தொடங்கி இன்றளவும் ஏன் தமிழ்மொழி தரணியில் உள்ளமட்டும் இப்புலவர் குழாம் தோன்றியவண்ணம் இருக்கும். அவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பது செந்தமிழின் செழுமையினை மீட்டெடுத்த நூற்றாண்டாகும். காரணம் தாமோதரனார், .வே.சா, பின்னத்தூரார் போன்ற அறிஞர்கள் தோன்றி தம் வாழ்வினைத் தமிழுக்காய் சமர்ப்பணம் செய்தனர். அவ்வகையில் புலமைசான்ற மரபில் தோன்றி, தமிழுக்காய் தன்னைத் தேய்த்துக்கொண்ட அரும்பெரும் புலவர் தான் பண்டித வித்வான் தி.சங்குப்புலவர். தமிழ் இலக்கிய உலகம் மறந்த இந்தப் பண்டிதரை அறிமுகம் செய்வதே ஈண்டு நோக்காகும்.

தமிழ்ப் பரம்பரை

            தமிழ் இலக்கிய மரபில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த புலவர்கள் பலர் இருந்துள்ளனர். இது சங்கம் தொடங்கி

இன்றளவும் இருந்து வருகின்றது. சங்கத்தார் செய்யுட்களைத் தணிக்கை செய்து பதர்களைப் போக்கி இலக்கிய மேன்மை காத்தனர். அவ்வாறு செய்தபோதும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதுவும் மூன்று தலைமுறையினரின் பாடல் இடம் பெற்றிருப்பது அவர்தம் புலமை நலத்தினைப் பறைசாற்றும். ஆம். மதுரைக்கணக்காயனார், அவரது மகனார் நக்கீரனார், அவரது மகன் கீரங்கொற்றனார் ஆகியோரே அவர்கள் ஆவர். இதைப்போன்று சங்குப் புலவர் குடும்பமும் மூன்று தலைமுறையாய்த் தமிழ்தொண்டு செய்துவந்துள்ளனர். தி.சங்குப்புலவரின் தாத்தாவை மலைசாயப் பாடிய சங்குப்புலவர் என்று வழங்குவர். இவரது தந்தை எட்டிச்சேரி .திருமலைவேற் கவிராயர் (1868 – 1944) திருக்கருவைத் தலபுராணம் பாடியவர். மேலும் திருக்கருவை சந்தப்பா, திருக்கருவை வெண் செந்துறைப் பாமாலை, திருக்கருவை பால்வண்ணநாதர் வண்ணம், கருவை மும்மணிமாலை, கோமதியம்பிகைப் பதிகம் போன்ற பல்வேறு இலக்கியங்களைச் செய்தவர்.

இளமையும் புலமையும்

தி.சங்குப் புலவர் கரிவலம்வந்தநல்லூர் அருகில் உள்ள எட்டிச்சேரியில் 1893 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 இல் (1068 கொல்லம் ஆண்டு, விஜய வருடம், ஆவணி திங்கள் 17 ஆம் நாள்) பிறந்தவர். எட்டிச்சேரி .திருமலைவேற் கவிராயருக்கும் வீரம்மாள் தம்பதியினருக்கு மகவாய்ப் பிறந்தவர். உரிய வயதில் பொன்னழகி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். பண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்தும் பாலபண்டிதர், பண்டிதர் போன்ற தேர்வுகளில் பங்கேற்று முதன்மை மாணவனாய்த் தேரியவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சென்று பண்டித போதனமுறை பயிற்சியும் பெற்றவர். பள்ளத்தூர், சோழவந்தான், மேலூர், உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர் ஆகிய ஊர்களில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இத்தனைக்கும் மேலாக சென்னைப் பல்கலைக்கழகம் நடத்தும் வித்துவான் தேர்வின் கலந்துகொண்டு மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். அப்பொழுது தமிழ்த்தாத்தா .வே.சாமிநாதையர் தலைமையில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் இலக்குமணசாமி முதலியாரால் பாராட்டையும் பணமுடிப்பினையும் பெறுவார் என தமிழ்ப்பொழில் இதழ் (1936 – 1937, துணர்: 12 – மலர் 6) தமிழ்ச்செய்திகள் பகுதியில் வெளியிட்டுள்ளது. ‘‘மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டித பரிட்சையில் முதல்வராகத் தேர்ச்சி பெற்றுத் தோடா பெற்றார் என்றும் அவர் ஓர் உயர்நிலைப் பள்ளியில் உபாத்தியாயராக இருக்கிறார்’’ என்று .வே.சா. குறிப்பிடுவதாகப் பிற்காலப் புலவர்கள் (. 146) என்னும் நூலில் அதன் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

அன்றைய குருமகா சன்னிதானம் ஸ்ரீசாமிநாத தம்பிரான் அவர்கள் சகலகலா வல்லிமாலை நூலை செப்பேட்டில் எழுதுவித்து பட்டாடையும் அணிவித்து ஆசியும் வழங்கியுள்ளார். அப்பொழுது,

 

‘‘பல்லான்ற கேள்வியெனும் நாலடியு மிருவேறென் பாவுமான

நல்லான்ற முதுமொழிகள் பொய்த்திடப்பொன் னுடன்பனுவல் நங்கை சேர

வல்லானம் ஒருவித்து வானுக்கோ ராயிரம்பொன் வழங்கி யன்னோன்

இல்லாமை தவிர்த்தளிக்குஞ் சாமிநாதப் பெருமாற் இணையார் மன்னோ’’

என்ற பாடல்வழி (களா ஈசனை வாழ்த்தவே, . 71) குருமகா சன்னிதானத்தைப் புகழ்ந்துள்ளார். பின்னர் மதுரை தமிழ்ச்சங்கம் தனது கல்லூரிக்கு தி.சங்குப்புலவரையே தேர்ந்தெடுத்து தமிழ்ப்பணியாற்றப் பணித்தது.

இவர் விநாயகமூர்த்தி ஒருபா ஒருஃபது, சரஸ்வதி நாற்பா மூவினமாலை, கலைமகள் ஒருபா ஒருஃபது மற்றும் பாரதி பதிகம் போன்ற இலக்கியங்களை இயற்றியுள்ளார். கழக சிறுவர் இலக்கணம், கழக பூந்தமிழ் இலக்கணம் போன்ற இலக்கண நூல்களைப் படைத்துள்ளார். காஞ்சிப்புராணம், குலோத்துங்கசோழனுலா, இராசராசசோழன் உலா, விக்கிரமசோழனுலா, அழகர் கிள்ளைவிடு தூது, தமிழ்விடுதூது, கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடு தூது, தக்கய பரணி காளிக்கு கூறிய பகுதிகள் மற்றும் பன்னூல் பாடல் திரட்டு போன்றவற்றிகு விளக்க உரைகளும், குறிப்புரைகளும் எழுதியவர்.

மதுரை தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் ‘‘செந்தமிழ்ச் செல்வி’’ இதழில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். தென்னிந்திய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழத்தில் கழகப்புலவராகத் திறம்படப் பணியாற்றியவர். கழக ஆட்சியாளர் திரு .சுப்பையாபிள்ளை அவர்களின் நன்மதிப்பையும் பெற்றார். அறிஞர் அண்ணாவின் தலைமையில் மதுரையில் வைத்து நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டில் சிறப்புரையும் நிகழ்த்தியவர். 

இவரது மணிவிழா 1963 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 7 ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் குன்றக்குடி அடிகளார், முத்தமிழ் காவலர் கி..பெ.விஸ்வநாதம், தேவாரம், பாரதிநாராணயசுவாமி, மதுரை தண்டலாளர், துணைத்தலைவர் இலட்சுமணப் பெருமாள், உத்தமபாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் ஹாசிமுகம்மது இஸ்மாயில் போன்றோர் கலந்துகொண்டுள்ளர். மேலும், இதில் கலந்துகொண்ட கி..பெ.விஸ்வநாதன் ‘‘சங்குப்புலுவரின் மூளையே சிறந்த நூலகம். அதில் பதியப்படாத இலக்கிய, இலக்கணங்களே இராது’’ எனப் பாராட்டியுள்ளதும் ஈண்டு சிந்தைகொள்ளத்தக்கதாகும்.

            ‘‘பேராசிரியர்கள் திரு தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், டாக்டர் திரு .சிதம்பரநாதன் செட்டியர், டாக்டர் திரு. .இராசமாணிக்கனார், தமிழறிஞர் திரு .சிவலிங்கனார், திரு சங்குப்புலவர், சிலம்புச் செல்வர் திரு. .பொ.சிவஞானம், பன்மொழிப்புலவர் திரு.கா.அப்பாத்துரையார், திரு எம்.சண்முகம்பிள்ளை, பேராசிரியர் திரு. .சீனிவாசராகவன், திரு. ஜீவபந்து பால், பேராசிரியர் திரு கே.சி.வன்மீகநாதன், பேராசிரியை திருமதி .ரா.இந்திரா முதலியோர் அவ்வப்போது வெளியிட்டு வரும் தம் அரிய கட்டுரைகளாலும் நூல்களாலும் முத்தமிழ்க் காப்பியத்திற்குச் செய்துவரும் தொண்டைத் தமிழ் மக்கள் நன்றி உணர்ச்சியுடன் நாளும் போற்றுதல் திண்ணம்’’ என்று சிலம்புத்தேன் என்னும் நூலில் (. 59) .சஞ்சீவியின் பட்டியலில் சங்குப்புலவரும் இடம்பெற்றிருப்பது அவர்தம் ஆய்வுத் திறனைக் காட்டும். இதற்குச் சான்றாகச் செந்தமிழ் இதழ் தொகுதி 53 இல் இடம்பெற்றுள்ள சிலப்பதிகாரம் - கானல்வரி என்னும் கட்டுரையினைச் சுட்டலாம்.

            இவரது ஆக்கங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது கைந்நிலைக்கும் இன்னிலைக்கும் உரை வகுத்தது ஆகும். காரணம் இன்றுமட்டும் இவற்றில் எதைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பட்டியலில் இணைத்துக்கொள்வது என்பது அறுதியிட்டுசொல்ல இயலவில்லை என்பதாகும். ஆனால் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் பதினெண்கீழ்கணக்கு நூலில் இறுதியாக வரும் நூல் எது எனத் தெரிவுசெய்துகொள்வது தமிழ்ப் புலவர்களின் கடமை என்று விடைகாணாமல் நம்மிடமே விட்டுச்செல்கிறார். மேலும் ‘‘இவ்விரு நூல்களுக்கும் விளக்கவுரை வரைவித்து அச்சிற்பதித்து வெளியிடுவது நம் கடமையாம் எனக் கழகத்தார் கருதினர். இவ்விரு நூல்களுக்கும் உரையெழுதும் கடமை எனக்குரியதாயிற்று. கழகப் பணியாளர்களில் ஒருவனாதலின் மறுத்தற்கு வழியின்றி ஏற்று என் சிற்றறிவிற் கெட்டியவாறு உரைவரைந்து தந்தேன்’’ (முன்னுரை, . 10,) என்று குறிப்பிடுவதிலிருந்து இந்நூல்களுக்கு உரை எழுத மனமில்லாமலேயேதான் உரை எழுதியுள்ளார். அதனால்தான்  என்னவோ இரு நூல்களில் எதை ஏற்றுக்கொள்வது என்பதையும் அவர் இறுதி செய்யவில்லைபோலும். ஆனால் கைந்நிலையில் சில பாடல்கள் மட்டுமே பழைய உரை பெற்றுள்ளது. சங்குப்புலவரின் உரையே கைந்நிலைக்குத் தோன்றிய முதல் உரையாகும். தமிழ்விடுதூது நூலுக்கு உரை எழுதும் போது தூதுநூலின் இயல்பு தொடங்கி தூதின் இலக்கணம், தூது வந்துள்ள நூல்கள் என்று எழுதி .வே.சா தனது பதிப்பில் எழுதும் ஆய்வுரையைப் போன்று மிகச் சிறப்பானதொரு ஆய்வுரையை முன்னுரையாக எழுதியுள்ளது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். ஈண்டு சங்குப்புலவரின் குலோத்துங்கசோழன் உலாவிற்கு வித்வான் வரைந்த உரைநயத்தினை மட்டும் காணலாம்.

புலமை வீச்சு

            சங்கப் பாக்களுக்கு இணையாகக் கருதப்பெறும் சிற்றிலக்கியங்களுக்கு உரை வரைய முற்படும் போது சங்கம் தொடங்கி காப்பியம், புராணம், பிற சிற்றிலக்கியம் எனவும், இலக்கணப் பனுவல்கள் எனப் புலமை கொண்டிருந்தால் மட்டுமே உரை வளம் பெறும். அவ்வகையில் சங்குப்புலவரின் இலக்கண, இலக்கியப் புலமை தெற்றென விளங்குகின்றது. அடையாற்றுக் கல்லூரித் தமிழாசிரியர் .கோபாலையரவர் 1926 இல் மூவருலாவையும் ஒன்றாகச் சேர்த்துப் பதிப்பித்து வெளியிட்டார். பின்னர் .வே.சா பழைய உரை, குறிப்புரை, விசேடக் குறிப்பு, பாடவேறுபாடு என மூவருலாவையும் சேர்த்து 1946 இல் வெளியிட்டார். மூன்று உலாக்களையும் சேர்த்து வெளிவந்தேயன்றி தனித்தனியாக வந்தில. பின் 1966 இல் தான் கழகப் புலவரான சங்குப் புலவரின் விளக்கவுரையுடன் தனியாகக் குலோத்துங்க சோழன் உலா வெளிவரப்பெற்றது. எனவே தமிழில் இவ்வுலாவிற்கு எழுந்த முதல் விரிவுரை இதுவேயாம். ஒட்டக்கூத்தர் என்ற பெயரினை விளக்கவே மிக நீண்ட உரை வரைந்துள்ளார். இஃதொடு அமையாது கிபி 1118 முதல் 1173 வரையுள்ள ஆண்டுகளே ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலமென்று கால ஆராய்ச்சியும் செய்துள்ளார். இந்நூலினைப் பழுதறக் கற்றபின் அவருடைய எழுதுகோல் உரையினை வரைய முன்வந்துள்ளது. முதலில் பொழிப்புரை வழங்கியுள்ளார். விளக்க உரை என்ற பகுதியில் சொல்லுக்குச் சொல் பொருள் கூறி, விளக்கம் கூறி, இலக்கிய மேற்கோள் காட்டி, இலக்கண விளக்கம் தந்து, தனது கருத்துக்களையும் சேர்த்துக் கூறி, ஒரு அவ்விடம் ஏன் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பதனையும் விளக்கி உரையமைத்துள்ளார்.

ஆராய்ச்சியுரை

            387 கண்ணிகளைக் கொண்ட இந்நூலுக்கு 25 பாக்களில் மிகச் சிறப்பானதொரு ஆராய்ச்சியுரை வழங்கியுள்ளார். .வே.சாவின் குறுந்தொகை உரையின் முகப்பில் அமையும் ஆராய்ச்சியுரையினை எவ்வாறு சிறப்பாகக் கருதுகிறோமோ அஃதோடு ஒப்பத்தக்கதாக இவ்வுரை அமைகின்றது. இதில் ஆசிரியர் வரலாறு, ஊர், மரபு, காலம், சமயம் போன்றவற்றை விளக்குகிறார்.  உலா இலக்கணம் சுட்டி, உலா இலக்கியங்களைத் தொகுத்துக் கூறுகிறார். குலோத்துங்க சோழனின் வரலாறு, கல்வெட்டு, மெய்கீர்த்தி செய்திகள், பட்டப் பெயர்கள், மனைவியர் செயல் என்று முற்பகுதி ஒரு வரலாற்றுக் கருவூலமாக அமைகின்றது. பின்னர் இலக்கியத்தின் அமைப்பு முறையினை விளக்குகிறார். இந்நூல் ‘‘தேர்மேவும்’’ என்று தொடங்குவதில் அமையும் பத்துப்பொருத்தங்களையும் விளக்கி ஆய்வுரை பகர்கின்றார். பத்துப்பொருத்தமும் கூறி அதனைப் பொருத்தியும் காட்டுகிறார்.

            குறிப்பாக ‘‘பாட்டுடைத் தலைவன் பெயர் முதலெழுத்துகுஎன்பது. அதற்குதிய நாள் திருவோணம் ஆம். முதற்சீரின் முதலெழுத்துதேஎன்பது. அதற்குரிய நாள் விசாகம் ஆம். திருவோணம் முதல் விசாகம் வரை யெண்ணில் இருபத்திரண்டாம் நாளாம் அது. மூன்றாம் ஒன்பதில் நாலாம் நாளாதலின் நாட்பொருத்தமும் நன்கமைந்தது’’ என்று நாட்பொருத்தத்தினை விளக்கும் போது அவரின் ஜோதிட அறிவு மிளிர்கின்றது. பின்னர் இந்நூலில் அமைந்துள்ள தொடை, அணி போன்ற பல்வேறு பகுதிகளை விளக்குகிறார்.

இலக்கணஞ்சார் பகுதி

            இவரது உரையில் அதிகப் பெரும் இடத்தைப் பெறுவது இலக்கணஞ்சார் பகுதியாகவே அமைகின்றது. காரணம் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் கூறி, புணரும் முறை பகன்று, இலக்கணக் குறிப்பு இயம்பி, விரித்துரைக்கும் இடத்தில் விரித்தும், தொகுத்துரைக்கும் இடத்தில் தொகுத்தும் உரை செய்துள்ளார். சான்று : தொன்மை ஆர்கலிதொல்லார்கலிபழமையான கடல் (. 62), கொலையேற என்பது அகரங் குறைந்து நின்றது ; தொகுத்தல் விகாரம். உடம்பு கொலையேற அடையக் கொய்தலும் என மாற்றுக (. 62), புரவியால் என மூன்றனுருபு விரித்துப் பொருத்து. புரவி ஆகுபெயராய் அவற்றின் ஒளியை யுணர்த்தியது (. 55) என்று சொல்லுக்குச் சொல் இடம்பெறும் விதத்தினை விதந்தோதுகின்றார். இவையேயன்றி ஆராய்ச்சியினுல் கொடை குறித்துக் கூறுங்கால் ‘‘இயைபுத்தொடையும் அளபெடையும் அமையத்தக்க விடமில்லையென விடுத்தனர் போலும்’’ என்று இந்நூலின்கண் இஃது அமையாததனையும் சுட்டிச் செல்கின்றார்.

உரையின் பல்நோக்கு

            உலகில் தனது படைப்பே சிறந்தது என்று வாதிடும் சமூகத்தின் மத்தியில் ‘‘இந்நூலில் இருக்கும் அரிய கருத்துக்களும் நுண்பொருளும் சொல்லின்பமும் பொருளின்பமும் என்போன்றோர் எடுத்துக்காட்டற்கியலா. எம்கருத்துக்கு எட்டியவாறு உரைவரைந்தனம். நுண்ணிய புலமையும் எண்ணிய பொருள்களையெடுத்து விளக்கும் உரை வலமையும் உடைய புலவர் உரை இதற்கு வாய்த்தால் தமிழ்மொழியும், நாடும் பெறுமைபெரும்’’ என்று கூறி தனது அவையடக்கத்தினை வெளிக்காட்டிச் செல்கின்றார்.

            செய்யுளின் ஓர் இடத்தில் அமைந்துள்ள சொல்லை ஏன் நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார் என்பதனையும் தனது உரைவழி உணர்த்துகிறார். சான்றாக: ‘‘குளிர்ச்சி தருவது நிறைநிலாவின் ஒளியாகும்; இளம்பிறை அத்தகைய குளிர்ச்சி தராது; அதுபோல இவரும் ஆடவர்க்கு இன்பந்தரும் இயல்புடையவள் என்பது தோன்ற ‘‘குளிராத திங்கட்குழவி’’ என்றார் (. 95).

            தன் உரையில் விரித்துப் பொருள் கூற வேண்டிய இடத்தில் விரித்துரைத்துள்ளார். சான்றாக : சிலம்புகள் - மலைகள். ஏழுமலைகள் என்பவை திக்கிலுள்ள மலைகள். கயிலை, இமயம், விந்தம், ஏமகூடம், நீலகிரி, நிடதம், மந்தரம் (. 153). ஏழுகடல், ஏழு பண், நதியேழு, பொழில் ஏழு, மலையேழு, கோள் ஏழு, முகில் ஏழு என்று அனைத்தையும் விரித்துரைக்கின்றார்.

            ஒரு செய்தி குறித்துப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிகழும் போது அதை உரையாசிரியர் கற்பவரின் நோக்கத்திற்கே விட்டுவிடுகிறார். ‘‘எண்கொள் பணம் - எண்ணிக்கொள்ளப்பட்ட படங்கள் எனக் கொள்ளினும் பொருந்தும் டங்கள் சேர்ந்த முடியுடைய பாம்பரசன் (நாகராசன்) என்று பொருள்தரும். இது குறித்துப் பல்வேறு கருத்துமாறுபாடு இருப்பதைச் சுட்டி ஆய்ந்து கொள்க’’ என்று உரையினை முடிக்கிறார்.

            தனது உரைக்கு முன்னர் தோன்றிய பழைய உரையினையும் .வே.சா உரையினையும் ஏற்றும், மறுத்தும், வேறு ஒன்றை அதனுடன் சேர்த்தும் உரை செய்துள்ளார். தமது உரையில் பக்கம் 57, 60, 62 ஆகிய பக்கங்களில் .வே.சாவழனட உரையினை அப்படியே குறிப்பிடுகிறார். ஆனால், பக்கம் 63 இல் .வே.சா. ‘‘ஈழத்துப் பிடாரி’’ என்று கூறியதைக் கூறி அஃதொடு இவர் வேறு சில பொருளும் கூறுகின்றார். பக்கம் 69 இல் .வே.சா உரையினை மறுத்தும் உரைவரைந்துள்ளார்.

            தொல்காப்பியம், நன்னூல், வெண்பாப்பாட்டியல், பன்னிரு பாட்டியல் முதலிய இலக்கண நூல்களும், மதுரைக்காஞ்சி, பொருணராற்றுப்படை, புறநானூறு போன்ற சங்க இலக்கிய நூல்களும் பின்னர் தோன்றி பல்வேறு புராணம், சிற்றிலக்கிய நூல்கள, உரைநூல்கள் என மொத்தம் 46 நூல்களில் இருந்து மேற்கோட்டி காட்டி தனது உரையினை மெருகேற்றியுள்ளார்.

 

பயன்பட்ட நூல்கள்

1.   சிலம்புத்தேன், .சஞ்சீவி, பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை – 1, 1959

2. களா ஈசனை வாழ்த்தவே, சிறப்பு மலர், ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் அடியார்கள் திருக்குழாம், கரிவலம்வந்தநல்லூர்.

3. தமிழ்ப்பொழில் (1936 – 1937), துணர் 12, மலர் 6

4. செந்தமிழ், 19571, தொகுதி 53

5. பதினெண்கீழ்க் கணக்கு இன்னிலை, கைந்நிலை, தி.சங்குப்புலவர் (..,) கழக வெளியீடு, 1964, இரண்டாம் பதிப்பு

6. மதுரை சொக்கநாதர் தமிழ்விடுதூது, தி.சங்குப்புலவர் (..,), கழக வெளியீடு, 2002, இரண்டாம் பதிப்பு

 

முனைவர் .கந்தசாமி பாண்டியன்,

தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதிப்பிரிவு),

இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி,

இராஜபாளையம்.