பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, May 24, 2012

ஐங்குறுநூற்று மருதத் திணையில் நீர்நிலைகள்

ஐங்குறுநூற்று மருதத் திணையில் நீர்நிலைகள்

முன்னுரை

          சங்க இலக்கியங்களின் வனப்பிற்கும் செல்வாக்கிற்கும் அடிப்படை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையே ஆகும். இயற்கைச் சமூகத்தின் அங்கமாக வாழ்ந்த பண்டைய மனிதனின் ஒவ்வொரு செயலிலும் இயற்கை பரிணமித்தது. அவற்றுள் மருதத் திணை மனிதர்கள் இயற்கையோடு மிகவும் இணக்கமுற வாழ்ந்துள்ளனர். அவர்தம் வாழ்வியல் வளமும் காதலும் அழகுணர்வும் பொதிந்த தன்மையதாய் காணப்பெற்றது. அவ்வகையில் இயற்கை வளங்களுள் ஒன்றான நீர்நிலை ஐங்குறுநூற்று மருதத் திணை மாந்தரிடையே பெற்ற இடம் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மருதத்திணைச் சமூகம்

          திணைச் சமூகம் என்பது இயற்கை வளங்களுடன் பின்னிப்பிணைந்து காதலையும் வீரத்தையும் பேணிய சமூகம். வாழும் பகுதியில் நிறைந்திருந்த இயற்கைக் கூறுகள் மனிதர்களின் வாழ்வியலை வெகுவாகப் பாதித்தன. ஏறக்குறைய இயற்கைக் கூறுகளின் கட்டளைப் படி மனிதன் வாழ்ந்தான் எனலாம். அவ்வடிப்படையில் மருதம் நீங்கலான நான்கு நிலத்தோர்கள் இயற்கையை அதன் நிலையிலேயே எதிர்கொண்டு வாழ்ந்தார்கள். மருத நிலத்தவர் மாத்திரம் இவர்களிலிருந்து விலகி நின்று காடு கொன்று கழனி சமைத்து பயிர் விளைவித்து நிலம் புதுக்கினர். இதிலிருந்தே மருத நிலமக்களின் தனித்துவத்தினை அறியலாம். மருதத்திணையின் நீர் வளமே அத்திணையில் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். அவ்வகையில் நீர்நிலை குறித்த செய்திகள் மருதப் பாடல்களில் மிகுதியாக உள்ளன.

மருதத்திணையில் நீர்நிலைகள் பெறுமிடம்

          மருதத்திணையில் முப்பத்திரண்டு இடங்களில் நீர்நிலைகள் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. புனலாடல் குறித்ததாக பதினைந்து இடங்களிலும் (பாடல்: 15, 16, 32, 64, 69, 71, 72, ……. 80), தலைவனை அடையாளப்படுத்த பன்னிரண்டு இடங்களிலும் (பாடல்: 2, 6, 7, 9 – 13, 70, 83, 88, 97), ஊரிற்கு அணிகலனாகத் திகழ்ந்த மாற்றை மூன்று இடங்களிலும் (பாடல்: 14, 45, 81), நம்பிக்கை மரபினை உணர்த்தும் விதமாக ஓர் இடத்திலும் (பாடல்: 84),  குடிநீருக்காகப் பயன்படுத்தப் பட்ட மாற்றினை ஓர் இடத்திலும் (பாடல் எண்: 28) நீர்நிலைப் பதிவுகள் இடம்பெறுகின்றன.

புனலாடலில் நீர்நிலைகள் பெறுமிடம்

          மக்கள் களிப்புடன் வாழ்ந்த மருதத்திணையில் புனலாடல் நிகழ்வு காதல்களிடையே மிகுந்திருந்தது. களவுக்காலப் புணர்ச்சி வகைகளுள் புனல்தரு புணர்ச்சியும் ஒரு வகையாகும். மருதத் திணையில் எட்டாவது பத்தாகப் ‘புனலாட்டுப் பத்து’ என்ற ஒரு பத்தும் உள்ளது. அதனின்று மருத நில மக்கள் நீராடலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அறியலாம்.

          பெரும்பாலும் பரத்தையுடன் தலைவன் புனலாடுவதாகவே மருதத் திணைப் பாடல்கள் பதிவு செய்கின்றன. பாடல்கள் 72, 74 மட்டும் தலைவியோடு நீராடிய தலைவனைக் காட்டுகிறது. புனலாடல் மருத மருங்கள் நிறைந்த நீர்த்துறையில் நிகழ்ந்துள்ளது. புனலாடலின் போது தழையாடையும் அணிகலனும் அணிந்தவர்களாகப் பெண்டிர் இருந்துள்ளனர். அதனை,

          ‘‘மருது உயர்ந்து ஓங்கிய விரிபும் பெருந்துறைப்
                             பெண்டிரோடு ஆடும்……’’
                                                          - ஐங் 33 (2-3)
என்ற வரிகளாலும்

          ‘‘பசும்பொன் அவிர்இழை பைய நிழற்ற
          கரைசேர்மருதம் ஏறிப் பண்ண பாய்வோள்’’
                                                          - ஐங் 74 (2-4)
என்ற வரிகளாலும் அறியலாம். மேலும், வேழம் என்னும் தெப்பம் கொண்டு மனம் மகிழ்வுறும் படி காதலர் புனலாடியுள்ளனர்.

          பரத்தையோடு தலைவன் புனலாடுங்கால் தலைவியால் ஒறுக்கப்படுகிறான். புனலாடல் அனைவருக்கும் பொதுவான நீர்த்துறையில் நிகழ்ந்துள்ளது. தலைவனைப் பரத்தையோடு அவ்விடத்தே கண்டோர் தலைவியிடம் அவன் செய்த செயல் கூற ஊடலும் பிறக்கின்றது. புனலாடுதலுக்குப் பொதுலவான நீர்நிலை இருந்தமாற்றை,

          ‘‘பலர்ஆடு பொருந்துறைஇ மலரொடு வந்த
                             தண்புனல் வண்டல் உய்த்தென’’
                                                          - ஐங் 68 (2-3)

என்ற அடிகளால் அறியமுடிகின்றது. பரத்தையோடு புனலாடிய தலைவனைப் பற்றி

          ‘‘……….. மகிழ்நன்
          கடன்அன்று என்னும் கொல்லோ நம்ஊh;
          முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
          உடன்ஆடு ஆயமோடு உற்ற சூளே?’’
                                                          - ஐங் 31 (1-4)

என்று வெறுக்கும் தலைவி அவன் சூளிட்டதை நினைவுபடுத்துகிறாள்.

          தலைவன் பரத்தையோடு நீராடியதை ஊரார் கண்டு தலைவிக்குத் தரிவிக்க அலர் ஏற்படுகிறது. தலைவியும் அவனுக்கு வாயில் மறுக்கிறாள். இதனை,

          ‘‘பலர் இவண் ஒவ்வாய்இ மகிழ்ந! அதனால்
          அலர் தொடங் கின்றால் ஊரே மலர
          தொல்நிலை மருதத்துப் பெருந்துறை
          நின்னோடு ஆடினள் தண்புனல் அதுவே’’
                                                          - ஐங் 75 (1-4)

என்னும் வரிகளாலும் அறியலாம். இது போன்ற தன்மையிலேயே பல இடங்களில் புனலாடல் நிகழ்வில் நீர்நிலைகள் சுட்டப் பெறுகின்றன. தலைவன் தலைவியோடு நீராடிய செய்தியும் பதிவுசெய்யப் பெற்றுள்ளன. தலைவனுடன் தலைவி ஊடிய பொழுது அவர்களது ஊடல் தீர்க்கும் முகமாகத் தலைவனால் அவர்கள் நீராடிய நிகழ்வு நினைவுறுத்தப் பெறுகின்றது. பின்னர் ஊடலும் தணிகின்றது. மருதத்திணையில் 72, 73, 74 மூன்று பாடல்களும் இப்போக்கில் அமைந்துள்ளன.

          ‘‘ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி
          வாடினும் பாடு பெறும்’’
                                                          - திருக்குறள் 1322

என்பார் வள்ளுவர். அக்கருத்தியலே,

          ‘‘வண்ண ஒண்தழை நுடங்க வால்இழை
          ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்தெனக்
          தண்ணென்று இசினே பெருந்துறைப்புனலே’’
                                                          - ஐங் 73 (41-4)

என்ற பாடலிலும் இடம்பெறுகின்றது. தலைவியானவள் அரிவைப் பருவத்தில் தலைவயொடு புனலாடியுள்ளாள். இப்போது அவள் ஒளிபொருந்திய தழையாடையும் அணிகலன்களும் அணிந்திருந்தாள். நீராடிய துறையில் குவளை மலர்ந்து மணம் வீசியது என்றும் தலைவன் நினைவு கூர ஒருவகையில் தலைவியை அது ஆற்றியது. நீரிற்குக் குளிர்விக்கும் தன்மை அடிப்படையாகும். இவ்விடத்தே நீராடுதல் குறித்த நிகழ்விற்குக் கூட உள்ளத்தைக் குளிர்விக்கும் ஆற்றல் இருந்ததனை அறியமுடிகின்றது.

அடையாளம் உணர்த்துதல்

          மருதத்திணையில் தலைவனை அடையாளப்படுத்த நீர்நிலை பயன்படுகின்றது. நீரின் தன்மையான குளிர்ச்சி என்ற பண்போடு நிலத்தின் பொதுவான ஆடவரின் பெயரையும் தாங்கித் ‘தண்துறை ஊரன்’ என்ற பெயரின் மருத நிலத்தலைவன் எட்டு இடங்களில் குறிப்பிடப்படுகிறான். மேலும், துறைகேழ் ஊரன், மாநீர்ப் பொய்கை ஊர என்றெல்லாம் நீர்நிலை மனிதனை அடையாளப்படுத்த உதவியது. அகத்திணையில்,

          ‘‘மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
          சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’’
                                                          - தொல்காப்பியம் 994

என்பது விதியாகும். அம்மரபுப் படியே மருத நிலத்தலைவன் மேற்கண்டவாரெல்லாம் குறிப்பிடப் பெறுகிறான். தலைவன் கருப்பொருள் வழியே அடையாளப்படுத்தப்படும் போதும் நீர்நிலையே அதில் முதலிடம் பெறுகின்றது. மேலும், தலைவியையும் அடையாளப்படுத்த ஓரிடத்தில் நீர்நிலை சுட்டப்பெறுகின்றது.

          ‘‘கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
          தன்துறை ஊரன் கேண்மை
          அம்பல் அகற்க!......’’
                                                - ஐங் 9 (4-6)

என்ற வரிகளாலும்,

          ‘‘மனைநடு வயலை வேழம் சுற்றும்
          துறைகேழ் ஊரன் கொடுமைநாணி’’
                                                          - ஐங் 11 (1-2)

எனும் வரிகளாலும் நீர்நிலையை வைத்து தலைவன் அடையாளப்படுத்தப் பட்டமையை அறியலாம். நீர்நிலையை வைத்துத் தலைவியும் அடையாளப்படுத்தப்படுகிறாள். அதனை,

          ‘‘பகன்றை வால்மலர் மிடைந்த கோட்டைக்
          கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்
          பொய்கைஇ ஊரன் மகள் இவள்’’
                                                          - ஐங் 97 (1-3)

என்ற வரிகளின் வழியும் அறியலாம்.

ஊரிற்கு அணிகலன்

          ‘‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’’ என்பது முதுமொழி. இவ்விடத்தே நீர்நிலைக்குச் சமுதாயம் கொடுத்த முக்கியத்துவம் விளங்கும். ஊரை ஒரு உடலாக எண்ணின் அதற்கு அணிகலன்களாக நீர்நிலைகள் கருதப்பெற்றன. இதனை,

          ‘‘வடிகொள் மாஅத்து வண்தளிர் நுடங்கும்
          அணித்துறை ஊரன் மார்பே’’
                                                          - ஐங் 14 (1-2)
மேலும்,

          ‘‘கூதிர் ஆயின் தண்கலிழ் தந்து
          வேனில் ஆயின் மணிநிறம் கொள்ளும்
          யாறுஅணிந் தன்றுநின் ஊரே’’
                                                          - ஐங் 45 (1-3)

என்ற வரிகளால் அறியலாம்.

நம்பிக்கை, மரபு உணர்த்துமிடம்

          புதுப்புனலாடுதல் குறித்துப் பரிபாடல் விரிவாகப் பேசும். நீர்த்துறைகளில் சென்று நீராடின் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. மகளிர் பலர் கூடித் தைத் திங்களில் அவ்வாறு நீராடிய மரபு இருந்துள்ளது. அதனை,

          ‘‘நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
          தைஇத் தண்கயம் போல’’
                                                          - ஐங் 84 (2-3)

என்ற வரிகளால் அறியலாம்.

குடிநீர்ப்பயன்பாடு

          குளிப்பதற்கு, நீராடுவதற்கு என இரு நிலைகளில் நீர்நிலைகள் பகுக்கப்பட்டிருந்தன. குடிநீருக்காகப் பயன்படுத்தப்பெற்ற நீர்நிலைகள் ‘உண்துறை’ என்று அழைக்கப்பெற்றன. அதனை,

‘‘உண்துறை அணங்கு இவள் உறைநோய்ஆயின்’’
                                                - ஐங் 27 (1)

என்ற வரிகளால் அறியலாம்.

நிறைவுரை

          கருப்பொருள்களுள் ஒன்றான நீர்நிலைகள் மருதத்திணை மக்களோடு பிரிக்க இயலாத நிலையில் இருந்ததையும் நீர்நிலைகள்  அவர்களின் வாழ்வியலோடு ஒன்றியிருந்தமாற்றையும் இக்கட்டுரை வழியே தெள்ளிதின் அறியமுடிகின்றது.


நன்றி.
ம.பிரசன்னா,
ஆய்வாளர்.
         

திருவாசகச் சிற்றிலக்கியங்கள்

திருவாசகச் சிற்றிலக்கியங்கள்

முன்னுரை

          சிற்றிலக்கியங்கள் தொல்காப்பியர் காலத்திலேயே தோன்றிவிட்டன. இருப்பினும்,  அவற்றின் அபரிமிதமான வளர்ச்சி பக்தி இயக்க காலத்தில் தான் நடைபெற்றது. பல்வேறு புதுவகையான இலக்கியங்களையும் புகுத்தியது. அதிலும் மாணிக்கவாசகரின் பணி அளப்பரியது. காரணம் பல்வேறு புது இலக்கிய வகைகளைத் தமிழுக்கு அளித்த பெருமை இவரையே சாரும். அவரது ஆக்கமான திருவாசகத்தில் அமைந்துள்ள சிற்றிலக்கியங்களை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

திருவாசகம்

          இறைவனைப் போற்றுவதும் அவனைத் வேண்டி இரங்குவதுமே பொருண்மையாக அமைந்துள்ளது. திருவாசகம் ஐம்பத்தொரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 658 பாடல்கள் உள்ளன. மொத்தம் 3382 அடிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்த 51 பகுதிகளில் ஏறத்தாழ இருபத்தொரு சிற்றிலக்கிய வகைகள் காணப்படுகின்றன. இதில் தமிழ் இலக்கியம் கண்டிராத பல புதுமையான வகைகளும் அமைந்துள்ளன.

பழைய இலக்கிய வகைகள்

          புராணம், பதிகம் (பத்து), அகவல், சதகம், தசாங்கம், பள்ளியெழுச்சி, ஊசல், அம்மானை, பாவை, மாலை, வெண்பா போன்ற பதினோரு வகையான இலக்கியங்கள் பழைய மரபுகளைக் கொண்டு அமைந்துள்ளது.
        புராணம் என்பது காப்பியத்தைப் போன்றது. இதன் இலக்கணத்தை வெண்பாப் பாட்டியல்,
      ‘‘கருது சில குன்றினும் அக்காப்பியம் ஆம்என்பர்
      பெரிது அறமே ஆதி பிழைத்து - வருவதுதான்
       காப்பியம் ஆகும் குலவரவு காரிகை
        யாப்பிற் புராணமே யாம்’’
                                                                    - வெண்பாப் பாட்டியல் 43

என்று வகுக்கிறது. இவ்வகையில் அமைந்த சிவபுராணத்தைக் கலிவெண்பாவால் மாணிக்கவாசகர் யாத்துள்ளார். கலித்தொகைக்கும் சிலப்பதிகாரத்திற்கும் அடுத்து இப்பாவகையை இவரே பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பொருள் குறித்த பாடல்களைப் பத்துப் பத்தாகச் சேர்ப்பது சங்க காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது (ஐங்குறுநூறு, திருக்குறள் போன்றவை). அதன் பின்பு நாயன்மார்களின் காலத்தில் இது சிறப்புற்று வளர்ந்தது. அவ்வகையில் இருபத்தைந்து பதிகங்களைப் (பத்து) பாடியுள்ளார். ‘கோயில் மூத்த திருப்பதிகம்’ இவ்வகையில் சிறப்புற்று விளங்குகிறது.

அகவல் என்பது ஆசிhpயப்பாவைக் குறிக்கும். அதன் இலக்கணத்தைத் தொல்காப்பியர் நூற்பா 1338 இல் சுட்டியுள்ளார். இவ்வகையில் அமைந்த ‘கீர்த்தித் திருவகவல்,  ‘போற்றித் திருவகவல்’ எனும் இரு இலக்கியங்கள் அமைந்துள்ளன. ‘கீர்த்தித் திருவகவல்’ இறைவன் அடியார்க்குப் புரிந்த அருளிளையம் ‘போற்றித்திருவகவல்’ இறைவனைப் போற்றும் பொருண்மையிலும் அமைந்துள்ளது.
         
                   சதம் 100,  நூறு செய்யுள்களின் தொகுப்பு. சத்+அகம் - சதகம்.உண்மைப் பொருளாகிய இறைவனைப் பாடுவது சதகம் ஆகும். ‘திருச்சதகம்’ தெய்வத் தன்மை வாய்ந்த நூறு பாடல்களால் ஆனது. மேலும், ஒவ்வொரு பத்துச் செய்யுள்களுக்கும் ஒரு வகை யாப்பு வீதம் பத்துவகை யாப்புகளைப் பயன்படுத்தியுள்ளார“.

          மன்னனின் பத்து வகையான உறுப்புகளைப் பாடுவது தசாங்கம் ஆகும்.

           ‘‘பத்து இயல் வெண்பாவின் மலைநதி நாடூர்தார்
             பரிகளிறு கொடிமுரசு செங்கோல் பாடின்
                மெத்து தசாங்கப் பத்தாம்’’
                                                                - சிதம்பரப் பாட்டியல், 5

என்று இதனைத் தசாங்கப்பத்து என்று சிதம்பரப்பாட்டியல் அழைக்கின்றது. இவ்வகை பெயர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, பறை, தார், கொடி என்ற அடிப்படையில் அமைத்துப் பத்து உறுப்புகளுக்கு ஒரு பாடல் வீதம் பத்துப் பாடல்களை அமைத்துள்ளார். இது தலைவி, இறைவனின் தசாங்கங்களைக் கிளி கூறக் கேட்பதாக அமைத்துள்ளார்.

          உறங்கும் ஒருவரை விழித்தெழச் செய்வதற்குப் பாடுவது பள்ளியெழுச்சி. இதனைத் தொல்காப்பியர் துயிலெடைநிலை என்பார். ஆனால், துயிலெடைநிலை என நூல்கள் தோன்றாமல் பள்ளியெழுச்சி என்ற பெயரிலே தோன்றியுள்ளன. இவ்விலக்கியத்தைப் பத்துப் பாடல்களில் பாடியுள்ளார்.

          சங்க காலப் பெண்கள் விளையாட்டே ஊசல். இது ஊஞ்சல், பொன்னூசல் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விலக்கியவகை ஊசல் விளையாட்டாகத் தோன்றி, கலம்பக உறுப்புகளுள் ஒன்றாகி, பிள்ளைத் தமிழ்ப் பருவமாகி, பின் தனி இலக்கிய நிலையினை அடைந்துள்ளது. சிலம்பில் வஞ்சிக்காண்டத்தில் அமைந்துள்ள மூன்று ஊசல் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இவ்விலக்கியம் படைக்கப்பட்டுள்ளது. ‘ஆடோமோ ஊசல்’’, ‘ஆடீர் ஊசல்’ போன்ற பதங்களில் ஒன்றினைக் கொண்டு இவ்வகைக் இலக்கியப் பாக்கள் முடிவடையும்.

          ‘‘சொல் கலித்தாழிசை அகவல்விருத்தம் ஆதல்
            சுற்றமுடன் தாழிசையாய்ச் சொல்வது ஊசல்’’
                                                                    - சிதம்பரப் பாட்டியல், 32

என்று சிதம்பரப் பாட்டியல் இதற்கு இலக்கணம் வகுக்கின்றது.

‘அம்மானை’ என்பது பெண்கள் விளையாடும் விளையாட்டாகும். மூன்று போ; கூடி மூன்று அம்மானைக் காய்களைக் கொண்டு இது விளையாடப்பெறுகின்றது. முதலில் ஆடும் மங்கை தலைவனின் சிறப்பைக் கூறுவாள். இரண்டாமானவள் அதை ஐயுற்று வினாக் கேட்பாள். மூன்றாமானவள் ஐயத்தைப் போக்கும் விதமாகப் பதில் கூறுவது போல் அமையும். இது பெண்பாற்பிள்ளைத் தமிழ்ப் பருவங்களில் ஒன்றாகும்.
         
              கன்னிப் பெண்கள் நோற்ற நோன்புகளுள் பாவைநோன்பு மிகப்பழமையானது. தை நீராடல், பாவை நோன்பு நோற்றல் போன்ற செய்திகள் ஐங்குறுநூறு மற்றும் பரிபாடலிலும் காணப்படுகின்றது. இவ்வகையில் அமைந்ததே ‘திருவெம்பாவை’ ஆகும்.

          சிற்றிலக்கிய வகைகளுள் மாலையும் ஒன்றாகும். ‘ஆனந்த மாலை’ என்னும் பெயரில் மாணிக்கவாசகர் மாலை இலக்கியத்தைத் திருவாசகத்தில் கையாண்டுள்ளார். சிவானுபவத்தைப் பாடியதால் இது ‘ஆனந்த மாலை’ எனப்பட்டது.

          வெண்பா என்பது பாவகைகளுள் ஒன்றாகும். இவ்விலக்கியம் பாவகையால் பெயர் பெற்றது. இது தொல்காப்பியர் காலத்தில் இருந்து பின்பற்றப்படுகிறது. சிவத்தை அடைந்தவர்களின் தன்மையை விளக்குவதாகத் ‘திருவெண்பா’ அமைந்துள்ளது.

புதுமரபு


          தமிழ் இலக்கிய உலகு கண்டிராத பல புது இலக்கிய வகைகளைப் புதுக்கிய பெருமை திருவாதவூராரையே சாரும். கோத்தும்பி, சாழல், தெள்ளேணம், தோணோக்கம், படையெழுச்சி, புலம்பல், பூவல்லி, சுண்ணம், உந்தியார், விண்ணப்பம் போன்ற பத்து வகை இலக்கியங்களை இவர் தம் திருவாசகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
         
            தும்பி பறத்தல் என்பது பெண்கள் விளையாட்டாகும். இறைவனின் பிரிவை ஆற்றாது அவரிடத்தே தும்பியைத் தூது அனுப்புதல் என்னும் பொருண்மையில் அமைந்ததே ‘திருக்கோத்தும்பி’ என்ற இலக்கியம் ஆகும். இது ‘கோத்தும்பி’ என்ற சொல்லோடு இதன் பாடல்கள் முடிவடையும்.

          சாழல் என்பது மகளிர் விளையாட்டுக்களுள் ஒன்றாகும். பெண்கள் இரு பிரிவினராய்ப் பிரிந்து ஒரு பிரிவினரின் கேள்விக்கு மற்றொரு பிரிவினர் பதில் கூறும் வண்ணம் விளையாடுவதே சாழல் விளையாட்டு ஆகும். இதன், பாக்கள் ‘சாழலே’ என்ற சொல்லோடு முடிவடையும்.

          தெள்ளேணம் என்பதும் மகளிர் விளையாட்டு ஆகும். தெளிந்த ஓசையோடு ‘படகம்’ என்னும் இசைக்கருவியை இசைத்துப்பாடுவதாகும். இதில் வரும் பாடல்கள் அனைத்தும் ‘நாம் தெள்ளேணம் கொட்டோமோ’ எனும் பதத்தோடு முடியும்.

          தோணோக்கம் என்பதும் மகளிர் விளையாட்டு ஆகும். தோள் நோக்கம் என்பதே தோணோக்கம் என்று அழைக்கப்படுகிறது. இது மகளிர் ஒருவார் தோளை ஒருவர் தட்டி அன்போடு அகமகிழ்ந்து ஆடும் விளையாட்டு ஆகும். இதன் பாடல்கள் ‘தோணோக்கம் ஆடோமே’ என்றே முடியும்.

          படையெழுச்சி என்பது போருக்குச் செல்லும் படையினைக் குறித்துப்பாடுவது. ஆனால் திருவாசகம் தொண்டர்களாகிய படைகள், மாயையாகிய பகையை வெல்லுவதற்கு எழுந்து செல்லுவதை ‘திருப்படையெழுச்சி’ எனக் கூறப்படுகிறது. மாயையை வெல்வதற்கான பிரபஞ்சப் போர் இதுவாகும்.

          தனிமையில் ஆற்றுதலே புலம்பல் ஆகும். இதனை மெய்ப்பாட்டு வகைகளுள் அடக்குவார் தொல்காப்பியர். அன்பின் மிகுதியால் இறைவனை நினைத்து உருகின் புலம்புவதாக இவ்விலக்கியம் அமைந்துள்ளது.

          வல்லி கொடி, பெண்கள் பூக்களைக் கொடியிலிருந்து கொய்தலைக் குறிக்கும். அவ்வாறு கொய்யும் போது அவர்கள் பாடும் பாட்டே ‘பூவல்லி’ என்பதாகும். இதன் பாடலின் இறுதியடிகள் ‘பூவல்லி கொய்யாமே’ என்று முடியும்.

          சுண்ணம் என்பது நீராடும் போது உடலில் பூசும் வாசனைப் பொடி ஆகும். தலைவனுக்குத் தேவையான சுண்ணப்பொடி இடிக்கும் போது தலைவனின் பெருமைகளைப் பாட்டாகப் பாடுவர். அவ்வாறு பாடும் போது ஒவ்வொரு பாடலின் இறுதியடியூம் ‘சுண்ணம் இடித்து நாமே’ என்றே முடியும். திருவாசகத்தில் இறைவனின் பெருமைகளைக் கூறி சுண்ணம் இடிப்பதாக அமைந்துள்ளது. இது வள்ளைப்பாட்டு, உரற்பாட்டு, உலக்கைப்பாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது பாட்டியல்கள் சுட்டும் மங்கல வெள்ளை, கொற்ற வள்ளை போன்ற இலக்கிய வகைகளோடு ஒப்பத்தக்கது. இதுவும் பெண்களின் செயலிலிருந்து தோன்றிய இலக்கியம் ஆகும்.

          உந்தி பறத்தல் என்பதும் பெண்கள் விளையாடும் விளயாட்டாகும். பெண்கள் இரு கைகளையும் இறகுகள் போல வைத்துக் குதித்துக் குதித்து ஆடும் விளையாட்டே இதுவாகும். அவ்வாடலில் ‘உந்தி பற’ என்ற சொல்லை இறுதியடியாகக் கொண்டு முடியும் பாடல்களைப் பாடுவர்.

          விண்ணப்பம் என்பது ஒருவரிடம் ஏதேனும் ஒன்று குறித்து வேண்டுதல் ஆகும். இறைவனிடத்தில் நீத்துவிடாதே என்று முறையிடுவதே ‘நீத்தல் விண்ணப்பம்’ ஆகும். தனக்கு ஞானாசிரியன் வடிவம் காட்ட வேண்டும் என்பதை வாசகர் இறைவனிடத்தில் விண்ணப்பிக்கின்றார்.

முதலும் முற்றும்

          51 பகுதிகளைக் கொண்ட திருவாசகத்தில் 21 வகையான சிற்றிலக்கிய வகைகள் அமைந்துள்ளன. இதில் நாற்பத்து ஆறு பகுதிகள் அடங்குகின்றன. புதுமரபில் கூறப்பட்டுள்ள பதினோரு இலக்கிய வகைகளுக்கும் முதல் இலக்கியம் திருவாசகத்தில் தான் அமைந்துள்ளது. மேலும், மாலை இலக்கியமான ‘ஆனந்த மாலை’யும் முதல் நூலாகக் கருதப்படுகிறது. கோத்தும்பி, சாழல், தெள்ளேணம், தோணோக்கம், படையெழுச்சி, பொற்சுண்ணம் ஆகிய இலக்கிய வகைகளுக்கான இலக்கிய வடிவங்கள் திருவாசகத்தில் மட்டுமே காணப்படுகிறது. வேறெந்த இலக்கியங்களும் தோன்றியதாக அறியமுடியவில்லை. இதில் வரும் சிற்றிலக்கிய வகைகளில் பத்து வகைகள் பெண்களைச் சார்ந்த (விளையாட்டு, நோன்பு, செயல்) ஒன்றாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

          சிற்றிலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வானில் தனிப் பெரும் பரப்பைக் கொண்டது. இந்தப் பரப்பில் மிகுதியான  புதிய இலக்கிய வகைகளைப் புகுத்தி மேலும் மெருகூட்டியவர் மாணிக்கவாசகர். மகளிர் விளையாட்டுக்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் இலக்கிய வகைகளாக்கிய பெருமை இவரையே சாரும். யாரும் தொடத் தயங்கிய இலக்கிய வகைகளைத் தொட்டுத் தூக்கி, யாரும் தொடாதா இலக்கிய வகைகளை தொட்டு அதில் வெற்றியும் கணடவர் மாணிக்கவாசகர் ஆவார். எனவே திருவாசம் என்பது பக்திப்பாமாலை மட்டுமன்று சிற்றிலக்கியச் சுரங்கமும் ஆகும்.