பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, May 24, 2012

திருவாசகச் சிற்றிலக்கியங்கள்

திருவாசகச் சிற்றிலக்கியங்கள்

முன்னுரை

          சிற்றிலக்கியங்கள் தொல்காப்பியர் காலத்திலேயே தோன்றிவிட்டன. இருப்பினும்,  அவற்றின் அபரிமிதமான வளர்ச்சி பக்தி இயக்க காலத்தில் தான் நடைபெற்றது. பல்வேறு புதுவகையான இலக்கியங்களையும் புகுத்தியது. அதிலும் மாணிக்கவாசகரின் பணி அளப்பரியது. காரணம் பல்வேறு புது இலக்கிய வகைகளைத் தமிழுக்கு அளித்த பெருமை இவரையே சாரும். அவரது ஆக்கமான திருவாசகத்தில் அமைந்துள்ள சிற்றிலக்கியங்களை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

திருவாசகம்

          இறைவனைப் போற்றுவதும் அவனைத் வேண்டி இரங்குவதுமே பொருண்மையாக அமைந்துள்ளது. திருவாசகம் ஐம்பத்தொரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 658 பாடல்கள் உள்ளன. மொத்தம் 3382 அடிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்த 51 பகுதிகளில் ஏறத்தாழ இருபத்தொரு சிற்றிலக்கிய வகைகள் காணப்படுகின்றன. இதில் தமிழ் இலக்கியம் கண்டிராத பல புதுமையான வகைகளும் அமைந்துள்ளன.

பழைய இலக்கிய வகைகள்

          புராணம், பதிகம் (பத்து), அகவல், சதகம், தசாங்கம், பள்ளியெழுச்சி, ஊசல், அம்மானை, பாவை, மாலை, வெண்பா போன்ற பதினோரு வகையான இலக்கியங்கள் பழைய மரபுகளைக் கொண்டு அமைந்துள்ளது.
        புராணம் என்பது காப்பியத்தைப் போன்றது. இதன் இலக்கணத்தை வெண்பாப் பாட்டியல்,
      ‘‘கருது சில குன்றினும் அக்காப்பியம் ஆம்என்பர்
      பெரிது அறமே ஆதி பிழைத்து - வருவதுதான்
       காப்பியம் ஆகும் குலவரவு காரிகை
        யாப்பிற் புராணமே யாம்’’
                                                                    - வெண்பாப் பாட்டியல் 43

என்று வகுக்கிறது. இவ்வகையில் அமைந்த சிவபுராணத்தைக் கலிவெண்பாவால் மாணிக்கவாசகர் யாத்துள்ளார். கலித்தொகைக்கும் சிலப்பதிகாரத்திற்கும் அடுத்து இப்பாவகையை இவரே பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பொருள் குறித்த பாடல்களைப் பத்துப் பத்தாகச் சேர்ப்பது சங்க காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது (ஐங்குறுநூறு, திருக்குறள் போன்றவை). அதன் பின்பு நாயன்மார்களின் காலத்தில் இது சிறப்புற்று வளர்ந்தது. அவ்வகையில் இருபத்தைந்து பதிகங்களைப் (பத்து) பாடியுள்ளார். ‘கோயில் மூத்த திருப்பதிகம்’ இவ்வகையில் சிறப்புற்று விளங்குகிறது.

அகவல் என்பது ஆசிhpயப்பாவைக் குறிக்கும். அதன் இலக்கணத்தைத் தொல்காப்பியர் நூற்பா 1338 இல் சுட்டியுள்ளார். இவ்வகையில் அமைந்த ‘கீர்த்தித் திருவகவல்,  ‘போற்றித் திருவகவல்’ எனும் இரு இலக்கியங்கள் அமைந்துள்ளன. ‘கீர்த்தித் திருவகவல்’ இறைவன் அடியார்க்குப் புரிந்த அருளிளையம் ‘போற்றித்திருவகவல்’ இறைவனைப் போற்றும் பொருண்மையிலும் அமைந்துள்ளது.
         
                   சதம் 100,  நூறு செய்யுள்களின் தொகுப்பு. சத்+அகம் - சதகம்.உண்மைப் பொருளாகிய இறைவனைப் பாடுவது சதகம் ஆகும். ‘திருச்சதகம்’ தெய்வத் தன்மை வாய்ந்த நூறு பாடல்களால் ஆனது. மேலும், ஒவ்வொரு பத்துச் செய்யுள்களுக்கும் ஒரு வகை யாப்பு வீதம் பத்துவகை யாப்புகளைப் பயன்படுத்தியுள்ளார“.

          மன்னனின் பத்து வகையான உறுப்புகளைப் பாடுவது தசாங்கம் ஆகும்.

           ‘‘பத்து இயல் வெண்பாவின் மலைநதி நாடூர்தார்
             பரிகளிறு கொடிமுரசு செங்கோல் பாடின்
                மெத்து தசாங்கப் பத்தாம்’’
                                                                - சிதம்பரப் பாட்டியல், 5

என்று இதனைத் தசாங்கப்பத்து என்று சிதம்பரப்பாட்டியல் அழைக்கின்றது. இவ்வகை பெயர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, பறை, தார், கொடி என்ற அடிப்படையில் அமைத்துப் பத்து உறுப்புகளுக்கு ஒரு பாடல் வீதம் பத்துப் பாடல்களை அமைத்துள்ளார். இது தலைவி, இறைவனின் தசாங்கங்களைக் கிளி கூறக் கேட்பதாக அமைத்துள்ளார்.

          உறங்கும் ஒருவரை விழித்தெழச் செய்வதற்குப் பாடுவது பள்ளியெழுச்சி. இதனைத் தொல்காப்பியர் துயிலெடைநிலை என்பார். ஆனால், துயிலெடைநிலை என நூல்கள் தோன்றாமல் பள்ளியெழுச்சி என்ற பெயரிலே தோன்றியுள்ளன. இவ்விலக்கியத்தைப் பத்துப் பாடல்களில் பாடியுள்ளார்.

          சங்க காலப் பெண்கள் விளையாட்டே ஊசல். இது ஊஞ்சல், பொன்னூசல் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விலக்கியவகை ஊசல் விளையாட்டாகத் தோன்றி, கலம்பக உறுப்புகளுள் ஒன்றாகி, பிள்ளைத் தமிழ்ப் பருவமாகி, பின் தனி இலக்கிய நிலையினை அடைந்துள்ளது. சிலம்பில் வஞ்சிக்காண்டத்தில் அமைந்துள்ள மூன்று ஊசல் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இவ்விலக்கியம் படைக்கப்பட்டுள்ளது. ‘ஆடோமோ ஊசல்’’, ‘ஆடீர் ஊசல்’ போன்ற பதங்களில் ஒன்றினைக் கொண்டு இவ்வகைக் இலக்கியப் பாக்கள் முடிவடையும்.

          ‘‘சொல் கலித்தாழிசை அகவல்விருத்தம் ஆதல்
            சுற்றமுடன் தாழிசையாய்ச் சொல்வது ஊசல்’’
                                                                    - சிதம்பரப் பாட்டியல், 32

என்று சிதம்பரப் பாட்டியல் இதற்கு இலக்கணம் வகுக்கின்றது.

‘அம்மானை’ என்பது பெண்கள் விளையாடும் விளையாட்டாகும். மூன்று போ; கூடி மூன்று அம்மானைக் காய்களைக் கொண்டு இது விளையாடப்பெறுகின்றது. முதலில் ஆடும் மங்கை தலைவனின் சிறப்பைக் கூறுவாள். இரண்டாமானவள் அதை ஐயுற்று வினாக் கேட்பாள். மூன்றாமானவள் ஐயத்தைப் போக்கும் விதமாகப் பதில் கூறுவது போல் அமையும். இது பெண்பாற்பிள்ளைத் தமிழ்ப் பருவங்களில் ஒன்றாகும்.
         
              கன்னிப் பெண்கள் நோற்ற நோன்புகளுள் பாவைநோன்பு மிகப்பழமையானது. தை நீராடல், பாவை நோன்பு நோற்றல் போன்ற செய்திகள் ஐங்குறுநூறு மற்றும் பரிபாடலிலும் காணப்படுகின்றது. இவ்வகையில் அமைந்ததே ‘திருவெம்பாவை’ ஆகும்.

          சிற்றிலக்கிய வகைகளுள் மாலையும் ஒன்றாகும். ‘ஆனந்த மாலை’ என்னும் பெயரில் மாணிக்கவாசகர் மாலை இலக்கியத்தைத் திருவாசகத்தில் கையாண்டுள்ளார். சிவானுபவத்தைப் பாடியதால் இது ‘ஆனந்த மாலை’ எனப்பட்டது.

          வெண்பா என்பது பாவகைகளுள் ஒன்றாகும். இவ்விலக்கியம் பாவகையால் பெயர் பெற்றது. இது தொல்காப்பியர் காலத்தில் இருந்து பின்பற்றப்படுகிறது. சிவத்தை அடைந்தவர்களின் தன்மையை விளக்குவதாகத் ‘திருவெண்பா’ அமைந்துள்ளது.

புதுமரபு


          தமிழ் இலக்கிய உலகு கண்டிராத பல புது இலக்கிய வகைகளைப் புதுக்கிய பெருமை திருவாதவூராரையே சாரும். கோத்தும்பி, சாழல், தெள்ளேணம், தோணோக்கம், படையெழுச்சி, புலம்பல், பூவல்லி, சுண்ணம், உந்தியார், விண்ணப்பம் போன்ற பத்து வகை இலக்கியங்களை இவர் தம் திருவாசகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
         
            தும்பி பறத்தல் என்பது பெண்கள் விளையாட்டாகும். இறைவனின் பிரிவை ஆற்றாது அவரிடத்தே தும்பியைத் தூது அனுப்புதல் என்னும் பொருண்மையில் அமைந்ததே ‘திருக்கோத்தும்பி’ என்ற இலக்கியம் ஆகும். இது ‘கோத்தும்பி’ என்ற சொல்லோடு இதன் பாடல்கள் முடிவடையும்.

          சாழல் என்பது மகளிர் விளையாட்டுக்களுள் ஒன்றாகும். பெண்கள் இரு பிரிவினராய்ப் பிரிந்து ஒரு பிரிவினரின் கேள்விக்கு மற்றொரு பிரிவினர் பதில் கூறும் வண்ணம் விளையாடுவதே சாழல் விளையாட்டு ஆகும். இதன், பாக்கள் ‘சாழலே’ என்ற சொல்லோடு முடிவடையும்.

          தெள்ளேணம் என்பதும் மகளிர் விளையாட்டு ஆகும். தெளிந்த ஓசையோடு ‘படகம்’ என்னும் இசைக்கருவியை இசைத்துப்பாடுவதாகும். இதில் வரும் பாடல்கள் அனைத்தும் ‘நாம் தெள்ளேணம் கொட்டோமோ’ எனும் பதத்தோடு முடியும்.

          தோணோக்கம் என்பதும் மகளிர் விளையாட்டு ஆகும். தோள் நோக்கம் என்பதே தோணோக்கம் என்று அழைக்கப்படுகிறது. இது மகளிர் ஒருவார் தோளை ஒருவர் தட்டி அன்போடு அகமகிழ்ந்து ஆடும் விளையாட்டு ஆகும். இதன் பாடல்கள் ‘தோணோக்கம் ஆடோமே’ என்றே முடியும்.

          படையெழுச்சி என்பது போருக்குச் செல்லும் படையினைக் குறித்துப்பாடுவது. ஆனால் திருவாசகம் தொண்டர்களாகிய படைகள், மாயையாகிய பகையை வெல்லுவதற்கு எழுந்து செல்லுவதை ‘திருப்படையெழுச்சி’ எனக் கூறப்படுகிறது. மாயையை வெல்வதற்கான பிரபஞ்சப் போர் இதுவாகும்.

          தனிமையில் ஆற்றுதலே புலம்பல் ஆகும். இதனை மெய்ப்பாட்டு வகைகளுள் அடக்குவார் தொல்காப்பியர். அன்பின் மிகுதியால் இறைவனை நினைத்து உருகின் புலம்புவதாக இவ்விலக்கியம் அமைந்துள்ளது.

          வல்லி கொடி, பெண்கள் பூக்களைக் கொடியிலிருந்து கொய்தலைக் குறிக்கும். அவ்வாறு கொய்யும் போது அவர்கள் பாடும் பாட்டே ‘பூவல்லி’ என்பதாகும். இதன் பாடலின் இறுதியடிகள் ‘பூவல்லி கொய்யாமே’ என்று முடியும்.

          சுண்ணம் என்பது நீராடும் போது உடலில் பூசும் வாசனைப் பொடி ஆகும். தலைவனுக்குத் தேவையான சுண்ணப்பொடி இடிக்கும் போது தலைவனின் பெருமைகளைப் பாட்டாகப் பாடுவர். அவ்வாறு பாடும் போது ஒவ்வொரு பாடலின் இறுதியடியூம் ‘சுண்ணம் இடித்து நாமே’ என்றே முடியும். திருவாசகத்தில் இறைவனின் பெருமைகளைக் கூறி சுண்ணம் இடிப்பதாக அமைந்துள்ளது. இது வள்ளைப்பாட்டு, உரற்பாட்டு, உலக்கைப்பாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது பாட்டியல்கள் சுட்டும் மங்கல வெள்ளை, கொற்ற வள்ளை போன்ற இலக்கிய வகைகளோடு ஒப்பத்தக்கது. இதுவும் பெண்களின் செயலிலிருந்து தோன்றிய இலக்கியம் ஆகும்.

          உந்தி பறத்தல் என்பதும் பெண்கள் விளையாடும் விளயாட்டாகும். பெண்கள் இரு கைகளையும் இறகுகள் போல வைத்துக் குதித்துக் குதித்து ஆடும் விளையாட்டே இதுவாகும். அவ்வாடலில் ‘உந்தி பற’ என்ற சொல்லை இறுதியடியாகக் கொண்டு முடியும் பாடல்களைப் பாடுவர்.

          விண்ணப்பம் என்பது ஒருவரிடம் ஏதேனும் ஒன்று குறித்து வேண்டுதல் ஆகும். இறைவனிடத்தில் நீத்துவிடாதே என்று முறையிடுவதே ‘நீத்தல் விண்ணப்பம்’ ஆகும். தனக்கு ஞானாசிரியன் வடிவம் காட்ட வேண்டும் என்பதை வாசகர் இறைவனிடத்தில் விண்ணப்பிக்கின்றார்.

முதலும் முற்றும்

          51 பகுதிகளைக் கொண்ட திருவாசகத்தில் 21 வகையான சிற்றிலக்கிய வகைகள் அமைந்துள்ளன. இதில் நாற்பத்து ஆறு பகுதிகள் அடங்குகின்றன. புதுமரபில் கூறப்பட்டுள்ள பதினோரு இலக்கிய வகைகளுக்கும் முதல் இலக்கியம் திருவாசகத்தில் தான் அமைந்துள்ளது. மேலும், மாலை இலக்கியமான ‘ஆனந்த மாலை’யும் முதல் நூலாகக் கருதப்படுகிறது. கோத்தும்பி, சாழல், தெள்ளேணம், தோணோக்கம், படையெழுச்சி, பொற்சுண்ணம் ஆகிய இலக்கிய வகைகளுக்கான இலக்கிய வடிவங்கள் திருவாசகத்தில் மட்டுமே காணப்படுகிறது. வேறெந்த இலக்கியங்களும் தோன்றியதாக அறியமுடியவில்லை. இதில் வரும் சிற்றிலக்கிய வகைகளில் பத்து வகைகள் பெண்களைச் சார்ந்த (விளையாட்டு, நோன்பு, செயல்) ஒன்றாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

          சிற்றிலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வானில் தனிப் பெரும் பரப்பைக் கொண்டது. இந்தப் பரப்பில் மிகுதியான  புதிய இலக்கிய வகைகளைப் புகுத்தி மேலும் மெருகூட்டியவர் மாணிக்கவாசகர். மகளிர் விளையாட்டுக்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் இலக்கிய வகைகளாக்கிய பெருமை இவரையே சாரும். யாரும் தொடத் தயங்கிய இலக்கிய வகைகளைத் தொட்டுத் தூக்கி, யாரும் தொடாதா இலக்கிய வகைகளை தொட்டு அதில் வெற்றியும் கணடவர் மாணிக்கவாசகர் ஆவார். எனவே திருவாசம் என்பது பக்திப்பாமாலை மட்டுமன்று சிற்றிலக்கியச் சுரங்கமும் ஆகும்.

Thursday, April 5, 2012

அகநானூற்றில் சுனைகள்

முன்னுரை

                தமிழர்களின் வாழ்வு இயற்கையோடியைந்தவை. இயற்கை நெறிக் காலத்து இலக்கியங்களும் அவை, பாடப்பட்ட காலத்தை ஆடி போல எதிரொளிக்கின்றன. தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களுள் காணப்படும் கூறுபாடுகள் முழுமையையும் ஆய்வதற்கு எத்தனிப்பின் இன்னும் பல்லாயிரம் சங்கம் கூட்டப்பட வேண்டும். அத்தகு சங்கக் கவிகளைச் சுவைத்தல் நமக்குக் கிடைத்த பேறு ஆகும். அவற்றுள் அகநானூறு களிற்றுயானை நிரை புலப்படுத்தும் சுனைகள் குறித்து ஆய்வதாக அமைகின்றது.

சுனைகள்

          இயற்கை நீர் நிலைகளுள் சுனையும் ஒரு வகையாகும். சுனைகள் மலைகளில் காணப்படும் நீர்நிலை வகையாகும். சுனைகள் மலைப்பகுதியில் வாழ்ந்த விலங்கினங்கட்கு நீராதாரமாக விளங்கி வந்துள்ளன. மலைநாட்டு மக்கள் அவற்றை குடிநீருக்காகப் பயன்படுத்தியதாக அகநானூற்றில் குறிப்பு இல்லை. அகநானூற்றில் களிற்றுயானை நிரையில் 8 இடங்களில் சுனைகள் பற்றிய செய்திகள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் அவைஇ வளமுணர்த்தவும் வறுமையுணர்த்தவும் கூறப்பட்டுள்ளன.

அமைவிடம்

          சுனைகள் குறிஞ்சி நிலத்து நீர்நிலைகளுள் ஒன்றாகும். இவை உருவாகும் சிறிய நீர்நிலை ஆகும். இதனை,

                     ‘‘ பாறை நெடுஞ்சுனை …………….’’
                                                                                       -        அகம் 2:4

எனும் அடியின் வழி அறியலாம்.

சுனை நீரின் தன்மை

          சுனை நீர் உண்ணத் தகுந்த நீர் ஆகும். இது சுவை மிக்க நீராகக் காட்டப்பட்டுள்ளது. இன்தீம் பைஞ்சுனை (59) என்றும் தீம்பெரும் பைஞ்சுனை (78) என்றும் குறிக்கப்கடுகின்றது.

சுனைகள் இலக்கியத்தில் பெரும் பங்கு

          நீருடைய சுனைகள் வளத்தினைக் குறிக்கவூம் (2, 38) நீரற்ற சுனைகள் நிலத்தின் கொடுமையை உணர்த்தவூம் (1, 119) எடுத்தாளப்பட்டுள்ளது. சுனையில் ‘சூர்எனும் பெயராலான வருத்தும் தெய்வம் உள்ளதாகவும் (91) வந்துள்ளன.

வளமுணர்த்தல்

          அகநானூற்றுப் பாடல்கள் (2,38,59) ஆகியவற்றில் வளமுணர்த்தும் விதமாகச் சுனைகள் வந்துள்ளன.
          பாறைகளிடையில் சுனைகள் அமைந்துள்ளன. அதன் நீரையும் பலாப்பழத்தின் சுனையையும் தேனையூம் சேர மாந்திய ஆண் குரங்குகானது களிப்புடன் கிடந்து உறங்கும். இதனை,

        ‘‘ஊழுறு தீங்கனி உண்ணுநார்த் தடுத்த
         சுராற் பலவின் சுளையொடு ஊழ்படு
          பாறை நெடுஞ்சுனை …………..
              ……………………………..
        நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்’’
                                                                                  -        அகம் 2: 2-7

எனும் பாடலடிகள் வழி அறியலாம்.

                    தலைவி ஒருத்தித் தன்னுடைய கண்ணைச் சுனையில் பூத்த மலருக்கு நிகராகச் சொல்கிறான். அதனை,

              ‘‘நீடு இதழ் தலைஇய கவின்பெறு நீலம்
              கண் என மலர்ந்த சுனையும்’’
                                                                   -        அகம் 38: 10-11

எனும் வரிகளால் அறியலாம்.

வறுமையுணர்த்தலில் சுனை

          பாலை நிலத்திற்கான புனைவுகளில் நீர் நிலைகளே முதலிடம் பெறுகின்றன. நீர் வறண்ட சுனையானது பாலை நிலக்கொடுமைகளை உணர்த்துகின்றன. மேலும், பாலை நிலத்துச் சுனைகளின் தன்மைகளை,

                 ‘‘……………………. ஆறை காய்பு
                 அறுநீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்’’
                                                                                 -        அகம் 1 - 11-12

எனும் அடிகள் உணர்த்துகின்றன.
         
          பாலைநிலத்துச் சுனைகள் காய்ந்த தன்மையில் இருக்கும். அந்நிலத்துப் பாறைகள் வெப்ப மிகுதியால் காய்ந்து கிடக்கின்றன அவ்வடிகள் உணர்த்துகின்றன. மேலும், நீரில்லாமல் யானை படும் துன்பத்தை,

                ‘‘…………….. வருத்தமொடு உணீஇய மண்டி
                 படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
               கைதோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை’’
                                                                         -        அகம் 119 -  17-19

எனும் அடிகள் விளக்குகின்றன. யானை ஒன்று நீர் வேட்கை மிகுந்து நீர் உண்ண வேண்டி காலை மடித்துக் கொண்டு வற்றிய சுனையைத் தன் துதிக் கையால் துழாவ அங்கு நீரில்லாமல் போனதைப் பார்த்து பெருமூச்சு விட்டது.

சுனையின் வனப்பும் மக்கட் பயன்பாடும்

          சுனையில் நீலம், செங்கழுநீர் போன்ற பூக்கள் மலர்ந்திருந்தன. இவற்றில் தேன் உண்ண வண்டுகளும் வந்து சுனையை வனப்புறந் செய்துள்ளன. இதனை,

                        ‘‘…………………… வண்டினம்
                         சுனைப்பூ நீத்து, சினைப்பூப் படர’’
                                                                                   -        அகம் 71 - 4 – 5
எனும் அடிகளின் வழி அறியலாம்.

          மகளிர் தம் கூந்தலில் சுனையில் பூத்த மலர்களைச் சூடி மகிழ்ந்துள்ளனர் எனும் செய்தியை,

‘‘இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த துண்நறுங்
 கழுநீர்ச் செண்இயல் சிறுபுறம்’’
                                                                   -        அகம் 59 -  13 – 14

எனும் அடிகளால் அறியலாம்.

சுனையும் அணங்கும்

          சுனையில் ‘சூர்எனும் தெய்வம் இருந்ததாக சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்புகள் வருகின்றன. ‘சூர்என்பது தீண்டி வருத்தும் தெய்வம் ஆகும். இது பெண்டிரைத் தீண்டும் தன்மையது. சூர் தங்கியிருக்கும் சுனைனயினைச் சூர்ச்சுனை என்றே குறிப்பிட்டுள்ளனர். அதனை,

                  ‘‘அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
                  சூர்ச்சுனை துழைஇ…………….’’
                                                                          -        அகம் 91 -  3 – 4
எனும் அடிகளால் அறியலாம்.

முடிவுரை

          இதுகாறும் சுனையின் தன்மை, அதுதன் பயன்பாடு, அகவியல் இலக்கியங்களுள் பெறும் பங்கு குறித்து இக்கட்டுரை வழி விரிவாக அறியப்பட்டது.


நன்றி.
ம.பிரசன்னா

Wednesday, April 4, 2012

தமிழ் ஊர்ப் பெயர்கள் சமஸ்கிருதமாக மொழிமாற்றம் செய்யப்பட்டமை

            சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் எனும் சைவ நாயன்மார்களும் பெரியாழ்வார் முதலான பன்னிரண்டு ஆழ்வார்களும் முறையே தமிழக சிவத்தலங்களும் வைணவத் தலங்களும் நெடுந்தொலைவு நடந்தும் பல்லக்கிலும் பயணம் செய்து ஆங்காங்கு கோயில் உறையும் கடவுளரைப் பாடினர்.அவர் தம் பாடல்கள் பிற்காலத்துத் தேவாரங்களாகவும், திருவாசகமாகவும், திவ்வியப்பிரபந்தமாகவும் தொகுக்கப்பட்டன. அக்காலச் சூழலில் இஃது அரும்பணியாகும். இவ்வாறு தொகுக்கப்பட்டத் தேவாரப் பாடல்கள் தில்லைச் சிற்றம்பலத்தில் பாதுகாக்கப்பட்டதாகவும், அவற்றை முதல் இராசராச சோழன் (கி.பி.11 ஆம் நூற்றாண்டு) மீட்டெடுக்க முயன்ற போது அவற்றுள் பெரும்பாலானவை கரையானால் அழிக்கப்பட்டிருந்ததாகவும் தமிழ் பக்தி இலக்கிய வரலாறு தெரிவிக்கிறது. ஓலைச்சுவடிகளில் நானூறு ஆண்டுகளுக்கு மேல் அவை இருப்பது என்பது அரிய செயல். தேவாரப் பாடல்களைக் கோயில் தோறும் ஓதுவார் பாடுவதற்கு முதல் இராசராசனும் இன்னபிற பிற்காலச் சோழ மன்னர்களும் தத்தம் காலத்தில் ஆக்கம் செய்துள்ளனர்.

                 
                           இவ்வாக்கம் பக்தி இலக்கியத்திற்குச் செய்யப் பெற்ற மிகப்பெரும் நன்றிச்செயல் என்பதில் ஐயமில்லை. இவ்வாக்கத்தின் ஊடே பாடல் பெற்ற தலங்களின் தனித்தமிழ்ப் பெயர்களும் அங்கிருந்த இறைவனின் தனித்தமிழ்ப்; பெயர்களும் இறைவியின் தமிழ்ப் பெயர்களும் தாம் பெற்றிருந்த தமிழ் வடிவத்தை இழந்து சமஸ்கிருத வடிவம் பெற்றன. இது தானே நிகழ்;ந்த நிகழ்வன்று. திருத்தலப் பெயர்களில் தமிழ் சமஸ்கிருத மாற்றத்திற்கு சோழர்காலத்தில் மிகுந்த ஆதிக்கம் பெற்றிருந்த உள்ளளுர்ப் பிராமணர்களும் வெளியூர்ப் பிராமணர்களுமே காரணம் ஆவர் என்பதை சோழர்கால அரசியல் வரலாறும் சமுதாய வரலாறும் உறுதிப்படுத்துகின்றன.


               சோழர், சமஸ்கிருதம் மட்டுமே அறிந்த பிராமணர்களை வட இந்தியாவில் இருந்தும் காஷ்மீரில் இருந்தும் தம் ஆட்சி இடமான தமிழகத்தில் குடியேறி உள்ளனர். அவ்வாறு குடியேற்றப்பட்ட பிராமணர்கள் மட்டும் அல்லாமல் தொடர்ந்து தானாக வந்த பிராமணர்களும் தமிழகத்தில் குடியேறினர். சோழர்காலத்தில் அவர் காலத்திற்கு முன்பிருந்த செங்கற்கோயில்களும் மண சுவர்க் கோயில்களும் கருங்கற்களால் செய்யப்பெற்ற கற்றளிகள் ஆக்கப்பெற்றன. சோழ அரசர்கள் மட்டுமின்றி அவர்தம் அரசியரும் அவர்தம் குடும்பத்தாரும் இவ்வாறு கற்றளிகள் ஆக்கிய தொண்டில் ஈடுபட்டனர். குறிப்பாக முதல் இராசராச சோழனின் வளர்ப்புத் தாயான அவனது தமக்கை குந்தவை தேவி, பின் வந்த செம்பியன்மாதேவி ஆகியோர் இத்தகு பணியில் முன்னின்றனர். கோயில்கள் மிகப்பெரிய அளவில் சோழர்காலத்தில் எடுப்பிக்கப்பட்டன. முன்பே நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடப் பெற்ற கோயில்கள் அனைத்தும் சோழர் காலத்தில் கற்றளிகள் ஆக்கப்பெற்றன. அக்கோயில்களில் கருவறையில் நுழைந்து பூசை முதலானவற்றைச் செய்வதற்கு சமஸ்கிருதம் மட்டுமே அறிந்த சிவ பிராமணர்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். சிவ பிராமணர்கள் சோழர்கள் காலத்தில் கருவறையில் நுழைந்து பூசை முதலானவற்றைச் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டார்கள் என்ற குறிப்பு கல்வெட்டுக்களில் பேசப்படுகிறது. சமஸ்கிரும் மட்டுமே அறிந்தவர்களும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் அறிந்தவர்களும் கோயிலுள் நுழைந்தமையால் இறைவனைப் பூசை செய்யும் மொழியாக சமஸ்கிருதம் சோழர்காலத்தில் எள்தாக இடம்பெற்றது. ஏனைய ஒடுக்கப்பட்ட சாதியார் கோயிலுல் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. கருவறை மூலவரை அருகு இருந்து வழிபட அனுமதிக்கப்பட வில்லை என்பதற்குத் தில்லை சிற்றம்பலக் கோயிலில் நடராசரை வணங்க நந்தன் என்ற ஒடுக்கப்பட்ட குலத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை சான்றாகும். நந்தனின் போராட்டத்தைப் பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் திரு நாளைப் போவார் நயினார் வரலாறு எனும் புராணத்தில் வருணித்துள்ளார். ஆக, சோழர்காலத்தில் சிவள் கோயில்களில் கருவறை பிராமணர்களுக்கு மட்டுமே பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது என்பதும் இறைவனை வழிபடும் மொழியாக சமஸ்கிருதம் ஆயிற்று என்பதும் தெளிவு.


                     சோழருக்கு முன்பு நாட்டை ஆண்ட பல்லவர், ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு குலத்தினர் எனினும் அவர் காலத்திலேயே வட இந்திய குப்தர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேதங்களும் வைதீக முறைகளும் தமிழ்க் கோயில்களில் நுழைந்துவிட்டன. இவை சோழர் காலத்தில் பேராதிக்கம் பெற்றன. சோழர் காலத்தில் வாழ்ந்த பிராமணர்கள் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேதங்களைக் கற்கவும் கோயில் பணி செய்யவும் அரசர்களால் நிலங்கள், மானியமாக வளங்கப்பெற்றன. பிரம்மதேயம் எனும் அருட்கொடைக்குப் பெயரிட்டு பல ஊர்கள் வரியிலி நிலமாக ஆக்கப்பட்டு பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன. பிரம்ம என்றால் பிராமணர். தேயம் என்றால் நாடு. பிராமணருக்கு உரிய நாடு என்பது பொருள். ஆரசன் தன் ஆட்சிக்கு உதவும் முகமாக நன்கு கற்ற பிராமணர்களைப் பிரம்மதேயத்திடம் கேட்டு பெற்றுக்கொள்ளவது உண்டு. எனவே அரசியலில் பிராமணர்களின் பங்கு மிகக் கணிசமாக இருந்தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலனை அமைச்சரவையில் பொறுப்பு வகித்த இரண்டு பிராமண அதிகாரிகள் கொன்று விட்டனர். அவர்களை அடையாளம் கண்டு பின்னாளில் அரசனாகப் பொறுப்பேற்ற முதல் இராசராச சோழன் மரண தண்டனை விதித்துள்ளான் என்பது வரலாறு. புpரம்மதேயங்களுக்கு அரசன் செய்யும் மிகக் கூடுதலான சலுகைகள் மக்களிடையே சீற்றத்தை உண்டாக்கி உள்ளன. மூன்றாம் இராசராசன் காலத்தில் (1223) தலைச்சங்காடு என்ற பிரம்மதேயக் கிராமத்தில் அவ்வூர் மக்களால் அங்கிருந்த நிலவுரிமைப் பத்திரங்களும் புத்தகங்களும் அழிக்கப்பட்டு கிளர்ச்சி செய்யப்பட்டது.

                            தமிழ்க் கல்விக்குத் தம் நானூறு ஆண்டுகால ஆட்சியில் எந்தச் சிறு முயற்சியும் செய்யாத சோழ மன்னர்கள் நூற்று எழுபத்தோரு பிரம்ம தேயங்களை மானியங்கள் கொடுத்து உதவி செய்ததோடு ஆங்காங்கே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ரிக் முதலான நான்கு வேதங்களையும் உபநிடதங்களையும் வியாகரணங்களையும் பிராமணப் பிள்ளைகள் குழந்தைப் பருவத்தில் இருந்து கற்க கடிகை எனும் கல்லூரி வசதி செய்து தந்திருந்தார்கள். தமிழருடைய பண்பாடடிற்குப் பொருந்தாத திரௌபதி கதையைக் கொண்டுள்ள மகாபாரதத்தைத் தமிழிலே மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தார்கள். அம்மட்டுமின்றி ஊர் நடுவே உள்ள அம்பலத்தில் மகாபாரதத்தை நன்கு கற்ற வேத பிராமணர் ஒருவர் சமஸ்கிருத மொழி வழியே எடுத்துச் சொல்ல மானியம் வழங்கிஅ து தொடர்ந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுதலையாகத் தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள், திருக்குறள், திழுமந்திரம், சிலப்பதிகாரம் முதலானவற்றைக் கதையாகச் சொல்லவோ, சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கவோ எவ்வித முயற்சியும் செய்யப்பெறவில்லை. காஞசிபுரத்தில் கடிகை என்ற பெயருடைய ஒரு சமஸ்கிருத பல்கலைக்கழகமே பல்லவர் காலத்தில் இருந்து நடத்தப்பட்டது.


                             ஆக, சோழஅரசியலும் சோழ அரசரிடமும் அருகு இருந்த பெரும் செல்வாக்கைப் பெற்று முன்பே கட்டப்பட்டிருந்த சைவக் கோயில்களுக்கு உள் பூசை செய்யும் உரிமையுடன் சென்ற சமஸ்கிருதம் மட்டும் அறிந்த பிராமணர்கள் அந்தக் கோயிலின் பெரையும் கோயில் மூலவர் பெயரையும் கோயில் இருந்த ஊரின் பெயரையும் மாற்றி இருக்க வேண்டும். தமிழகத்தில் உள் சமஸ்கிருதமாக்கப்பட்ட ஊர்கள் ஒரு காலத்தில் தனித் தமிழ்ப் பெயரைக் கொண்டிருந்தன என்பதும் இன்னும் சொல்லப் போனால் சைவ நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற அவ்வூர்ப் பெயர்கள் மூலவர்கள் பெயர்கள் தூய தமிழிலே இருந்தன என்பதும் அவை சோழர் காலத்தில் தான் மாற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் எளிதாக ஊகிக்கத்தகும். இவை இவ்வாறு மாற்றம் பெற்றன என்பதற்கு ஓரிரு சான்று: உலகப் புகழ்பெற்ற நடராசர் உருவத்தை மிகப் பழங்காலம் தொட்டுப் பெற்றிருக்கும் கோயில் திருநல்லம் என்ற பெயருடையதாகும். இந்த அழகான ஊர்ப்பெயர் பின்னர் கோனேரி ராஜபுரம் என்று மாற்றம் பெற்று இன்றுவரை தொடர்கிறது. காவிரி ஆற்றுத் தென்கரையில் உள்ள ஊர் திரு ஆவூர் என்பதாகும். இவ்வூர் பசுபதீஸ்வரம் என்று மாற்றப்பட்டு இறைவனின் பெயர் பசுபதீஸ்வரர் என்றும் இறைவி மங்கள நாயகி என்றும் மாற்றம் பெற்றன. தென்னார்க்காடு மாவட்டத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருமுதுகுன்றம் எனும் பெயர் விருத்தாசலம் என்று ஆயிற்று. இறைவனின் பெயர் விருத்தகிரீஸ்வரர் என்றும் இறைவியின் பெயர் விருத்தாம்பிகை என்றும் என்றும் மாற்றம் பெற்றன. காவேரிளூ தென்கரையில் உள்ள சேரி நாட்டுத் திருமறைக்காடு வேதாரண்யம் என்று மாற்றப்பட்டது. திருஞானசம்பந்தரின் தேவாரத்தில் மறைவனம் என்றே இவ்வூர் குறிக்கப்படுகிறது. இவ்வூரில் உள்ள இறைவனின் பெயர் வேதாரண்யீஸ்வரர். இறைவியின் பழந்தமிழ்ப் பெயர் யாழைப் பழித்த மொழியம்மை. அப்பெயர் வேதாரண்ய ஈஸ்வரி என்று மாற்றப்பெற்றது. ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பாண்டிய நாட்டு ஊர் திருப்புத்தூர். இவ்வூர் ஸ்ரீதலீஸ்வரர் என்றும் அம்மனின் பெயர் சிவகாமி அம்பாள் என்றும் மாற்றம் பெற்றன. சம்பந்தரின் தேவாரம் திருப்புத்தூர் இறையாரை (272) என்பதாகும். குhவிரித் தென்கரையில் உள்ள திரு சோற்றுத் துறை மாற்றம் பெற்று அவ்வூர் அம்மன் அன்னபுரணி என்று ஆக்கப்பெற்றார்.

‘‘ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண்ணீற்று

அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே''

என்பர் ஞானசம்பந்தர் (பா.294). புகழ் பெற்ற மயிலாடுதுறை இறைவன் மயூரநாதர் என்று மாற்றம் பெற்றார். அம்மனி;ன் பெயர் அபயாம்பிகை என்று மாற்றம் பெற்றது. சம்பந்தர் இவ்வூரில் உள்ள இறைவன் மேல் பாடிய தேவாரப்பா பல, மயிலாடுதுறை என்றே முடிகிறது. (பா. 404 – 413) சிதம்பரம் அண்ணாமலை நகரை அடுத்துள்ள திருவேட்களம் எனச் சம்பந்தரால் பாடப்பெற் திருத்தலம். சம்பந்தர் இங்குள்ள இறைவனை வேட்கள நன்னகராரே எனத் தேவார எண் 415 முதல் 424 வரை பாடுகிறார். வேட்கள நன்னகரார் என்ற திருப்பெயர் பாசுபதேஸ்வரர் என்றும் அம்மன் பெயர் சற்குணாம்பாள் என்றும் மாற்றப் பெற்றன. திருமுதுகுன்றம் எனும் பெயர் ஞானசம்பந்தரால் பாடல் தோறும் முதுகுன்றே முதுகுன்றே என்று (570 இல் இருந்து 578) பாடப்பெற்றது. இப்பெயர் விருத்தாசலம் என்று இறைவனின் பெயர் வேதகரீஸ்வரர் என்றும் மாற்றப்பெற்றன. தொண்டை நாட்டில் உள்ள திருவோத்தூர் எனும் திருத்தலக் கடவைள ஓத்தூர் சடையீர் (581), ஓத்தூர் நாட்டீர் (583) எனத் திருப்பித் திருப்பி சம்பந்தர் பாடியிருப்பார். இப்பெயர் வேதபுரீஸ்வரர் என்னும் அம்மையின் பெயர் பால குசலாம்பிகை என்றும் மாற்றம் பெற்றன. சென்னைக்கு அண்மையில் உள்ள திருவேற்காட்டு இறைவனை ஞானசம்பந்தர் ஷவேற்காடு உயர்ந்தார்' என்று பாடுவார். இப்பெயர் வேதபுரீஸ்வரர் என இறைவனுக்கும் பாலாம்பிகை என்று இறைவிக்கும் பிற்காலத்து மாற்றப்பெற்றன. சிவஞான போதம் எழுதிய மெய்கண்டதேவரின் ஊர் திருத்தூங்கானை மாடம் என்பதாகும். இப்பெயரை ஒவ்வொரு பாடலிலும் சொல்லி சம்பந்தர் பாடியுள்ளார் (634-644). திருத்தலத்தின் பெயர் பிரள காளேஸ்வரர் என்றும் அம்மனின் பெயர் கடந்தைநாயகி என்றும் மாற்றம் பெற்றன.


                   கிட்டத்தட்ட பெரும்பான்மைத் தலங்கள் தேவார காலத் தமிழ்ப் பெயரை இழந்து சமஸ்கிருத பெயரை எய்தவைக்கப் பெற்றன. ஊர்ப் பெயரையும் உள்ளுர் இறைவனின் பெயரையும் இறைவியின் பெயரையும் நூற்றாண்டுகளாகச் சொல்லிச் சொல்லி வழிபட்ட தமிழ் மக்கள் முற்றும் வேற்று மொழியில் சமஸ்கிருதத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட போது எப்படி பொறுத்துக் கொண்டார்கள்? என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழர்கள் தமக்கு இழைக்கப்படும் ஆதிக்கச் செயல்களையும், தம் மொழிக்கு இழைக்கப்படும் அழிவுச் செயலையும் எதிர்க்க ஆற்றல் அற்ற கோழைகளாக இருந்தனர் என்பதையே இச்செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இவர்கள் இத்தகு அஞ்சி அடங்கும் அடிமைகளையும் பிரம்மதேயமாகப் பெற்றுத் துய்த்தனர் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. ஒரு சமயம் அரசன் அறிவித்த பிரம்மதேய கிராமங்களின் எல்லையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருந்த உழுகுடிகளின் வீடும் நிலமும் இருந்தன. ஊரிமை பெற்ற அம்மக்களின் ஒப்புதல் பெறாமலே சோழ மன்னன் அவர்களது நிலத்தையும் வீட்டையும் பிரம்மதேய அந்தணருக்கு நன்கொடையாக வழங்கி ஊர்க்கோயில் கல்வெட்டிலும் வெட்டச் செய்துவிட்டான். ஆதனால் பாதிப்படைந்த அவ்வூர் மக்கள் வாய் திறக்கவே இல்லை. அப்படியே ஏற்றுக்கொண்டு அங்கு புதிய எஜமானர்களான பிராமணர்களின் நிலத்தில் உழுகுடியாக வேலை செய்தார்கள்.




நன்றி.

க.ப.அறவாணன்


முன்னாள் துணைவேந்தர்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.