பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Saturday, June 2, 2012

அகநானூற்றில் நீர்த் தேவைகளும் தீர்வுகளும்

அகநானூற்றில் நீர்த் தேவைகளும் தீர்வுகளும்

முன்னுரை

          அகநானூறு தமிழர் தம் வாழ்வியல் கருவூலம் ஆகும். பல்வேறு விதமான குறுநில மன்னார் வரலாறும் ஊர்ப் பெயர்களும் மானிட இயங்கியலும் அகநானூற்றினைச் செறிவுபடுத்தியுள்ளன. சங்க கால மனிதர்களில் பிற்காலத்தோரின் வாழ்வியல் குறித்த பல்வேறு செய்திகள் அகநானூற்றில் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர்த் தேவையில் ஏற்பட்ட சிக்கல்களையூம் பழந்தமிழர் அதனைத் தீர்த்தமாற்றையும் குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது.
நீரும் மனிதனும்

          பஞ்ச பூதங்களுள் நீரும் காற்றும் மனிதனுள் நேரடியாக அடங்கியுள்ளன. காற்றும் நீரும் உட்கொள்ளப்படுவதால் மனிதனின் உயிர்ப்புக் காக்கப்படுகின்றது. இவை இரண்டில் காற்றினை நாம் தனியே சிரத்தையுடன் எடுக்கத் தேவையில்லை. அனிச்சையாகக் காற்று நம்முள் வருவதும் போவதுமாய் உள்ளது. நீர் அவ்வகைப்பட்டதன்று உணவுப் பொருட்களுடனும் தனியாகவும் நாமே அதனை உடலுள் சேர்த்துக் கொள்கின்றோம். மனித உடலில் ஏறத்தாழ அறுபது சதவீதம் நீருள்ளதாக அறிவியலார் கூறுகின்றனர்.

சங்க காலத்தில் நீர்

          சங்க காலச் சமுதாயம் நீர்நிலைகள் மிகுந்து செழிப்புடன் காணப்பட்ட சமுதாயம் ஆகும். பல இடங்களில் தலைவனை, ‘தண்துறை ஊரன்’, ‘துறைகேழ் ஊரன்’ என்னும் பெயரால் அடையாளப்படுத்தும் அளவிற்கு நீர் நிலைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. எனினும் வறண்ட நிலமான பாலை நிலத்தில் பண்டைக் காலத்திலே நீர்ப் பற்றாக்குறை நிலவியுள்ளது. இது உயிர்களுக்கான வாழ்வியல் சிக்கலாகும். அச்சிக்கலை மனிதன் அறிவால் எதிர்கொண்டு வென்றிருக்கின்றான் பல்லுயிர்ச் சமுதாயத்திற்கும் அது பயன்படுமாறு செய்துள்ளான்.

அகநானூற்றில் நீர்ப் பற்றாக்குறைச் சிக்கல்கள்

          பாலை நில வருணனையில் பெரும்பாலும் இடம்பெறுவது நீர்ல்லாச் சூழலும் மிகுவெப்பநிலையும் அறவுணர்வற்ற மாந்தர் செயல்களுமே ஆகும். சிக்கல்களை மட்டும் பேசுவது இலக்கியம் அன்று. அவற்றுள்ளே சிக்கல்களுக்கான தீர்வுகளையும் விதைத்திருப்பதே இலக்கியம் ஆகும். அவ்வழியே அகநானூறும் குடிநீர்த் தேவைகளைக் கூறுவதோடு அத்தேவைகளை மனிதன் எவ்வாறு போக்கினான் என்று பாடலடிகளால் தெளிவுறப் பதிவு செய்துள்ளது.

நீராதார நிலைப்பாடுகள்

          உலகத் தண்ணீர்ப் பேரவை, 1997 ஆம் ஆண்டில் இருந்தே மூன்றாண்டுகட்கு ஒருமுறை தண்ணீர்ப் பிரச்சனைகள் குறித்துக் கலந்தாய்கின்றது. ஆறாவது முறையாக அவ்வமைப்பானது கூடி நீர்வளத்தின் நிலைப்பாடு, உலக சமுதாய நுகர்வுப்போக்குகள், வளப்படுத்துவதற்கான செயலாக்கம் குறித்து விவாதிக்கின்றது. இப்பற்றாக்குறை சங்ககாலத்தில் இருந்தே இருந்துவருகின்றது. எனினும் சிறிய அளவில் நிலவியதாகப் பாலைநிலப் பாடல்கள் வழியே அறியமுடிகின்றது. அதற்கான மீட்பு நடவடிக்கைகள் அக்காலத்தில் செயற்கை நீர்நிலை ஆக்கங்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ‘‘Necessity is the mother of invention’’ என்பார். நீர்த்தேவைகளே அக்காலத்தில் கூவல், படு என்னுமாறு செயற்கை நீர்நிலைகள் பிறக்கவும் அடிப்படையாய் அமைந்துள்ளது.

பாலை நிலச் சிக்கல்களும் தீர்வுகளும்

          பாலை என்பது தனி நிலமா? அல்லது கோடை காலக் குறிஞ்சி, முல்லை நிலங்களின் மாற்றமா? என்பது பெரும் ஆய்வூக்குரிய ஒன்றாகும். ஆனால், சராசரியாக வரக்கூடிய மூன்று மாத காலக் கோடையில் நிலவளம் அவ்வளவு கெட்டுவிடுமா என்பது கேள்வியாகும். பாலை நிலைத்தை, வளம் ஒரு காலத்தில் இருந்து பின்னர் குன்றிய பகுதியாகவும் எடுத்துக் கொள்ளலாம். அன்றி இயல்பிலே வளங்குன்றிய பகுதியாகவும் கொள்ளலாம். கருப்பொருள் கூற்றில் கூறப்படும் பாலை நிலத்திற்கான நீர்நிலையில் வறண்ட சுனை இடம்பெறுகின்றது. இதனைக் கருத்தில் கொள்ளும் போது மேற்கூறியவற்றுள் முதலாம் வகையானது பொருந்தும். இத்தகு பாலை நிலம் மேய்ச்சல் நிலமாக இருந்துள்ளது. ஆநிரைகள் உணவெடுத்ததும் அவற்றிற்கான குடிநீர்த் தேவைகளுக்குப் பெரும் சிக்கல் நிகழ்ந்துள்ளது. ஆநிரைகளை அப்பகுதிகளுக்குக் கொண்டு செல்லாமல் இருத்தல் சரியான தீர்வாகாது. பழந்தமிழர் அவ்வாறு செய்யவும் இல்லை. புதிதாக நீர்நிலைகளைத் தம் உடல் முயற்சியால் ஏற்படுத்தியுள்ளனர். அவை, படு, கூவல் என்னுமாறு பெயர்பெற்றுள்ளன. அவை குறித்த செய்திகள் (பாடல் 21, 79, 155, 207) ஆகியவற்றுள் பாலைத்திணையில் பதிவுபெற்றுள்ளன. இவை, மனிதனின் அறிவியல் திறத்தினையும் பல்லுயிர் ஓம்பும் பாங்கினையும் உணர்த்துகின்றன.

             கூவல் என்னும் சொல்லிற்கு, ‘‘கிணறு’’ ‘‘பள்ளம்’’ என்னுமாறு நீர்நிலை சார்ந்த பெயர்களைத் தமிழ்மொழி அகராதி கூறுகின்றது.

          ‘படு’ என்னும் சொல்லிற்கு ‘நீர்நிலை’ எனப் பொதுவான பெயரினையும் தமிழ்மொழி அகராதி தருகின்றது.

தீர்வுகள்

படு சமைத்தல்

          மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற ஆநிரைகட்குக் குடிநீர்த் தேவை ஏற்பட்ட போது கொங்கு நிலத்தார் தீப்பொறி பறக்க, பாறைகளைத் தகர்த்து மிக்க உவர்த்தன்மை உடையதாயினும் ஆநிரைகட்கு பயன்படுமாற்றை ‘படு’ எனும் பெயரில் செயற்கை நீர்நிலையான கிணற்றினை ஏற்படுத்தியுள்ளனர். இதனை மேற்கூறியவாறு தமிழரின் அறிவியல் அறிவையும் பல்லுயிர் ஓம்பும் பாங்கையும் உணர்த்தும் வகைத்தாகும்.  இதனை,
            ‘‘தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
             கனைபொறி பிறப்ப நூறிஇ வினைப்படர்ந்து
            கல்லுறுத்து இயற்றிய வல்உயர்ப் படுவில்
              பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
              வன்புலம் துமியப் போகிக் கொங்கர்’’
                                                                    -        அகம், 79: (1 – 5)
என்னும் வரிகளால் அறியலாம்.

கூவல் படைத்தல்

          பாலை நிலத்தில், கோவலர் தம் ஆநிரைகளில் குடிநீர்த் தேவைக்காகக் கூவல் படைத்துள்ளனர். ‘கணிச்சி’ என்னும் கருவி கொண்டு அதனை ஆக்கியுள்ளனர். இக்கருத்தினை,

            ‘‘பரல்மண் சுவல முரண்நிலம் உடைத்த
             வல்வாய்க் கணிச்சிஇ கூழார் கோவலர்
             ஊறாது இட்ட உவலைக் கூவல்’’
                                                   -        அகம், 21: (21 – 23)

என்னும் அடிகள் பதிவு செய்கின்றன. கோவலர் செய்த கூவலிலிருந்து யானை மற்றும் புலிகட்கும் நீர் கிடைத்தமையை,

             ‘‘………………… கோவலர் கூவல் தோண்டிய
             கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி
              நீர்காய் வருத்தமொடு சோர்விடம் பெறாது
              பெருங்களிறு மிதித்த அடியகத்து இரும்புலி’’
                                                              -        அகம், 155: (8 – 11)

எனும் அடிகளால் அறியலாம். மேலும்,

                  ‘‘…………….. நீடு மருப்பு ஒருத்தல்
                  பிணரழி பெருங்கை புரண்ட கூவல்
                    தெண்கண் உவர்க் குறைக்குட முகவை’’
                                                                  -        அகம், 207: (9 – 11)

எனும் அடிகள் கூவலானது விலங்குகட்கு மட்டுமன்றிப் பாலை நில மாந்தர்களுக்கான நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இருந்த மாற்றைப் பதிவு செய்கின்றது.

நிறைவுரை

          பழந்தமிழர் தம் வாழ்வியலில் எதிர்கொண்ட குடிநீர்த் தேவைகளுக்கான சிக்கல், அதனை எதிர் கொண்டு புதிய நீர்நிலைகள் அமைத்த விதம், பண்டைத் தமிழர்தம் பல்லுயிர் ஓம்பல் திறம் குறித்து அகநானூறு இயம்பிய செய்திகளை இக்கட்டுரையானது பதிவு செய்துள்ளது.

நன்றி.

ம.பிரசன்னா,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,
சிவகாசி.

Friday, June 1, 2012

கண் கொடுத்த திருக்கண்ணீசுவரர்

கண் கொடுத்த திருக்கண்ணீசுவரர்

              சைவக் குரவர்கள் அறுபத்து மூவர் பாடிய பாடல்கள் பன்னிரெண்டாம் திருமுறை என்று அழைக்கப்படுகின்றது. இப்பன்னிரு திருமுறைகளில் முதல் பதினொரு திருமுறைகள் இறைவனை அடைவதற்கான வழிவகைகளையும் இறைப்போற்றுதல்களையும் நமக்குப் பகர்கின்றன. ஆனால், பன்னிரண்டாம் திருமுறையோ இறைவனை அடைந்தவர்களின் வாழ்வியலையும் அவர்களின் இறை அனுபவத்தையும் நமக்குத் தெற்றென விளக்குகின்றது. பதினொரு திருமுறைகளும் சம்மிதா மந்திரங்கள் பதினொன்றையூம் இப்பெரியபுராணம் சிவமூலமந்திரமாகிய பஞ்சாட்சரத்தையும் ஒத்தது. இதற்கும் மற்ற திருமுறைகளுக்கும் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு இடைவெளி இருக்கின்றது. இருப்பினும் இதுவே முதன்மையானதாகக் கொள்ளத்தக்கது. ஆனால், அதன்பின் தோன்றிய புராணங்களும் இறையனுபவத்தையும் திருவிளையாடல்களையும் நமக்குத் தெரிவுறுத்துகின்றது. இது மாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் காலத்தில் தான் (18 ஆம் நூற்றாண்டு) அதிகம் தோன்றியது. 1893 ல் சேறைச் சமஸ்தானத்தில் சமஸ்தான வித்துவான் இராமசாமிக்கவிராயர் அவர்களால் சேறைத்தலபுராணமும் வெளியிடப்பெற்றது. இதில் இறைவனே மன்னனுக்குச் சேவகம் செய்து கண்கொடுத்த வரலாறும் இடம்பெறுகின்றது.

                 ‘‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
                 ஆகுல நீர பிற’’
                                                                              -        குறள்

என்பது வள்ளுவர் வாக்கு. மனத்துன்கண் மாசு இலன் ஆதல் அறம் ஆகும். அத்தகைய அறத்தோடு வாழ்ந்தவன் வீரபாகு என்னும் பாண்டிய வேந்தன். இவன் அந்தணனைக் கொன்றதனால் பிரம்மகத்தி பாவத்திற்கு ஆளாகின்றான். பின்பு சேறைச் சமஸ்தானத்துத் தேவதானம் பெரிய கோவிலை வழிபட்டுப் பாவம் போக்கினான். அன்றிலிருந்து சிவனேசச் செல்வனாய் வாழ்ந்தான். இவன் மீது விக்கிமசோழன் எனும் சோழ மன்னன் படைமேற்சென்றான். தோல்வியடைந்த பாண்டியன் பரமனைச் சரணடைந்தான். அப்போது இறைவனே பாண்டிய மன்னனின் படைத்தளபதியாகிச் சோழனை வெற்றி கொண்டான். இதனை,

          ‘‘சென்று நேரியன் சேனை புகுந்துநீ
            யொன்று பூசலுடற் றுமவ் வேளையிற்
           குன்று போலுங் குறட்டை யேவிநாம்
          வென்று நல்குவம் வெற்றியுகை கென்றான்’’
                                                                  -        சேறைத்தலபுராணம்

என்று இறைவன் சேவகம் செய்த செய்தியைப் பகர்கின்றது. பாண்டியனின் பக்தித் திறத்தால் இறைவனே படை நடத்தி வெற்றி கண்டமையால் இவ்விறைவனுக்குச் ‘‘சேவகத்தேவர்’’ என்ற பெயர் உண்டாயிற்று. ஆனால், சோழ மன்னனோ கண் இழந்தான். இதனை,

       ‘‘விழிமறைத்தது கண்டஞ்சி வேந்தனு மீண்டபோதில்
      இழிவுறச்சிவி கைதோளிலேந் துவோர்சுமை போகாமல்
     வழியினிற் காறள்ளாடிமன் விழவளவன் வீழ்ந்தான்
     அழிவுறச்சுமந் தான்வீழ வன்சுமைக் குடம் வீழ்ந்தென்ன’
                                                         -        சேறைத்தலபுராணம்

எனும் அடிகள்  இயம்புகின்றன. சோழன் தன்கொடுஞ்செயலை எண்ணி மனம் வருந்தி இறைவனை இறைஞ்சி அன்பு செலுத்தினன். இதே போன்று தான் கண்ணப்பனாரும் அன்பு பூண்டார். அவருடைய அன்பினை என்புருகி மணிவாசகம் புகன்றவரான மாணிக்கவாசகப் பெருமானார்,
          
           ‘‘கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்ட பின்
           என்னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி
          வண்ணப்ப பணித்தென்ன வாவென்ற வான்கருணைச்
          சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பி’’

என்று தனது திருக்கோத்தும்பியில் பகன்றுள்ளது ஈண்டு நோக்கத்தக்கது. ‘‘அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே’’ என்ற மந்திரத்திற்கொப்ப அன்பைச் சிவமாகக் கொண்டதனால் இறைவனானவன் அன்பு வலையில் அகப்பட்டுச் சோழனுக்குக் கண் கொடுத்தார். இதனைச் சேறைத்தலபுராணம்,

        ‘‘நாதனருட்படி கோயினாடி முறைப்படி தேவும்
        வேதவிதிப்படி யாகமேவ விருந்தின போது
        பாதம் வழுத்திட வேயோர் பார்வைவரக் கனிவோரு
        தீதற வூத்தர கீழ்பாற்சேர் திசையிற்றனியோகி’’
                                                   -        சேறைத்தலபுராணம்

என்ற செய்யுள் வழி தெற்றென விளக்கி நிற்கின்றது. திண்ணப்பனென்பதோர் கண்ணப்பனார் இறைவனுக்குக் கண் கொடுத்தார். இதனை,

            ‘‘செங்கண்வெள் விடையின் பாகர்
                      திண்ணனார் தம்மை யாண்ட
            அங்கணர் திருக்கா ளத்தி
                     அற்புதர் திருக்கை அம்பால்
             தங்கண்முன் இடக்கும் கையைத்
                      தடுக்கமுன் றடுக்கு நாக
             கங்கணர் அழும வாக்குக்
                          கண்ணப்ப நிற்க என்ற’’

என்ற பாடல் பறைசாற்றி நிற்கின்றது. அதுபோலவ, திருமால் திருவீழிமிழலையில் ஆயிரம் தாமரை மலர்களால் நாள்தோறும் சிவநாமம் கூறிப் பெருமானைப் பூசித்தார். ஒருநாள் இறைவன் விளையாட்டால் ஒருமலர் குறைய திருமாலோ தனது கண்மலரைக் கொடுத்தார். அவருடைய அன்பிற்கு மகிழ்ந்து திருமாலுக்குக் கண் கொடுத்து ‘கண்ணன்’ எனும் திருநாமம் சூட்டிச் சக்கரத்தையும் கொடுத்தார். இத்திருவிளையாடலை,

                 ‘‘நக்குலா மலர்பன் னூறு
                             கொண்டுநன் ஞானத் தோடு
                  மிக்கபு சனைகள் செய்வான்
                              மென்மலர் ஒன்று காணா
                  தொக்குமென் மலர்க்கண் என்றால்
                               கொருகணை யிடந்தும் அப்பச்
                  சங்கரங் கொடுப்பார் போலுஞ்
                                      சாய்க்காடு மேவி னாரே’’

என்று அப்பரின் அடிகளால் அறிமுடிகின்றது. இவற்றையெல்லாம் ஒருங்கே நோக்குங்கால் இறைவனுக்குக் கண் கொடுத்தோர் இருவர்.  ஆனால், இறைவனே தன் பக்தனுக்குக் கண்கொடுத்த நற்பேறு பெற்றவன் விக்கிரமச் சோழன். இவன் அன்பால் தான் இவன் இறைவனுக்கு இல் கட்டி வழிபட்டான். அந்த இல்லின் தலைவனுக்குத் ‘‘திருக்கண்ணீசுவரர்’’ என்னும் திருப்பெயர் பொறித்தான். இதனைச் சேறைத்தலபுராணம்,

           ‘‘ஆலயமொன்று புதுக்கியாள் சிவலிங்க நிறுத்தி
           யேல்வழியொன்று பெறக்கண் ணீசரெனும் பெயரிட்டு
            ஞாலம் விரும்பழகுக்கு நாயகியும் புவை வைத்துச்
            சோலை வளந்தனை யுற்றுஞ் சோழனிந்தன் னிப்பால்’’
                                                               -        சேறைத்தலபுராணம்

எனும் பாடல் செப்பி நிற்கின்றது. இறைவனுக்குக் கண்கொடுத்துத் திண்ணன் கண்ணப்பனானர். திருமால் கண்ணனானார். ஆனால், இறைவன் விழி கொடுத்துத் திருக்கண்ணீசர் ஆனார். சோழ பாண்டிய மன்னர்களின் இறை பக்திக்காகவே சோழபுரத்தில் ‘‘விக்கிரம பாண்டீஸ்வரர்’’ ஆலயம் அமைந்துள்ளமையை ஈண்டு அறியக் கிடைக்கின்றது. இவ்வாறு அன்பால் விழி கொடுத்தால் நாமும் இறைவன் ஆகலாம்.

அகநானூற்றில் கண் புலப்பாடு

அகநானூற்றில் கண் புலப்பாடு
முன்னுரை

          தமிழ்கூறு நல்லுலகில் தோன்றி பழந்தமிழ் இலக்கியங்களின் வர்ணனைகளுக்கு நிகரான வர்ணனைகள் வேறு எவ்விலக்கியங்களிலும் இல்லை எனலாம். நுணுகிப்பார்க்கும் திறனும் உற்று நோக்கலும் சங்கப் பாக்களைச் செம்மாந்து நிற்கச் செய்கின்றன. அப்புலவர்களின் பார்வையில் பார்வை உறுப்பான கண்கள் எவ்வாறு புலப்படுத்தப்படுகின்றன என விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கண்

          கடவுள் படைத்த உடல் உறுப்புகளுள் உணர்ச்சி மிகுந்த உறுப்பு கண் ஆகும். உடலின் எந்த உறுப்பிற்கு நோவு ஏற்ப்பட்டாலும் பொதுவாகக் கண்கள் கலங்கும். இதனையே அதற்குச் சான்றாகக் கூறலாம். பொதுவாக, வழக்கில் நகத்தின் நுனிப்பகுதியை நகக்கண் என்றும் தேங்காய், நுங்கு முதலிய பொருட்களின் பயனுறு பகுதியின் தலைப்பகுதி கண் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும். அவ்வகையில் உலகியலைக் கண்டு உள்ளத்தால் பயனுறச் செய்யும் பார்வை உறுப்பையும் கண் எனல் தகும். இதனை இடுகுறிப் பெயராகக் கருதாமல் இனி காரணப்பெயராய் மொழியும் சிறப்பாகும். கண்ணின் பயனாலே நாம் இறக்கும் வரை பயணிக்கின்றோம். பல இடங்களில் கேள்விக்காகவும் சில இடங்களில் விடைக்காகவும் விழி மொழியையே பயன்படுத்துகின்றௌம்.

          ஐம்பொறிகளும் தமக்கென ஒவ்வொரு தனித்தன்மையுடைய செயல்பாடுடன் இயங்கினாலும் ‘கண்’ மட்டும் ஏனைய நான்கு பொறிகளையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. எடுத்துக்காட்டாக கண் ஒரு தீயவரைக் காணின் அவர் பக்கம் கால்கள் செல்லாது. வாய் அவருடன் பேசாது. இது போன்று கண் ஐம்பொறிகட்கும் தலையாயதாய் விளங்குகின்றது.

          கண்களின் சிறப்பினை விரிப்பின் அகலும். சுருங்கக் கூறின் மொழியின்றி கூட வாழலாம். ஆனால், விழி இன்றி வாழல் கடினமே. அத்தகு கண்ணானது அகநானூற்றில் அடையாளப்படுத்தவும் உவமைப் பொருளிலும் உரிச்சொல் அடையுடனும் புலப்படுத்தப்படுகின்றது.

அடையாளப்படுத்துதல்

          கண் எனும் சினைப்பெயரானது அடையாளப்படுத்தும் விதமாய் ஆகுபெயரால் அமையும். அகநானூற்றில் உற்றுநோக்கல் சார்ந்த பண்பில் யானையைக் குறிப்பிடும் இடங்கள் கண் கொண்டு குறிப்பிடப்படுகின்றது. இதனை,

                        ‘‘………………..சிறுகண் யானை
                        இரும்பிடித் தடக்கை…………..’’
                                                                                  -        அகம், 117
எனும் இடத்தும்
                         ‘‘சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
                        வான்வாய் திறந்தும்…………..’’
                                                                                -        அகம், 179

எனுமிடத்தும் யானையானது சிறிய கண்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

          யானைக்குப் பெரிய உருவமும் நீண்ட தந்தமும் வலிய துதிக்கையும் உள்ளவிடத்துக் கண்ணைக் கொண்டு அடையாளப்படுத்துவதற்குக் காரணம் பெரிய உடலும் வலிய துதிக்கையும் சிறிய கண்களாலே வழி நடக்கும். அத்தனை பெரிய உடலில் கண்கள் இன்றேல் உடலின் ஆற்றலும் தோற்றமும் வீணே போய்விடும். அத்தகுத் திறத்தாலே மாற்றிமை மிக்க யானையானது சிறிய கண்களால் ‘சிறுகண் யானை’ எனும் பெயரில் அடை, சினை, முதலாய் இலக்கண வரம்பினின்று சிறப்பாகக் கூறப்படுகின்றது. இதனின்று புலப்பாடும் அதைப்புலப்படுத்தும் பாங்கும் தௌ்ளிதின் விளங்கும்.

உவமைப் பொருள்

          காதலைப் பாடாத கவிஞன் எவனும் இல்லை என்பது போல் கண்ணினைப் படாதா கவிஞர் எவரும் இல்லை. கண்கள் காந்தத்திற்கு நிகரானவை. சில இடங்களில் கவரும். அதனினும் வலிமையான சிலவற்றால் கவரவும் படும். கவரும் தன்மையாலே கண்ணிற்கு உவமைகளும் மிகுதியாகும்.

          முன்பு கூறியவாறு, ஒன்றன் நுழைவுப் பகுதி கண் எனப் பொதுவாகப் பெயர் பெரும். குறிஞ்சிப் பகுதியில் ஒரு பாறையில் ஒழுகும் நீர் நிறை சுனையில் பன்றியானது நீர் பருகுகின்றது. அச்செயலினைப் புலப்படுத்தும் பரணர் சுனையினை பாறைக்குக் கண் என்கிறார். கண்ணினின்று வழியும் கண்ணீராக இவ்விடத்தே நம் சுனையைக் கருதுதல் தவறாகும். சுனையானது வெளிப்படும் இடம். அப்பாறைக்கு அணிகலனாகப் பொருள்படும்படி சுனையை பாறைக்கும் கண் என்கிறார் பரணர். இக்காட்சியை,

                     ‘‘…………….பரூஉமயிர்ப் பன்றி
                      பாறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி’’
                                                                      -        அகம், 178
எனும் அடிகளால் அறியலாம்.

கண்ணின் நிறம் கருமையும் வெண்மையும் கலந்த நிறமாயினும் கண் புலப்பாட்டில் கருமை முதலிடம் பெறுகின்றது. கண்ணைப் போன்று கருமை நிறத்திற்கும் கவரும் தன்மை நிறைவே ஆகும். எனவே, கருநிற மலர்களுக்குக் கண் உவமையாகின்றது. சில இடங்களில் கண்களுக்கு மலர் உவமையாகின்றது. அவ்வகையில் கண்களானது கருமை நிறமுடைய குவளை மலர் மற்றும் நெய்தல் மலருக்கும் உவமையாக உவமிக்கப்படுகின்றன. அவை,

                        ‘‘கண்என மலர்ந்த மாஇதழ்க் குவளைக்
                          கல்முகை நெடுஞ்சுனை நம்மொடுஆடி’’
                                                                        -        அகம், 228

                          ‘‘சிறுகரு நெய்தற் கண்மேல் மாமலர்ப்
                            பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்’’
                                                                          -        அகம், 230

எனுமிடங்களே ஆகும். சிறப்பாக வற்றிய சுனையானது வறட்சிக் குறிப்பாய் யானையின் கண்ணிற்கு உவமையானதாய் வருகின்றது. இதனை,

                   ‘‘பசித்த யானைப் பழங்கண் அன்ன
                   வறுஞ்சுனை………………….’’
                                                               -        அகம், 321

எனும் அடிகள் உணர்த்தியமைகின்றன.

உரிப்பொருள் அடையுடன் வரல்

          நலம்புனைந்துரைத்தலில் மீன் போன்ற கண்ணுடையாள் எனப் பெண்களை வர்ணிப்பர். அகநானூற்றில் அம்மீனும் கண்களால் உரிப்பொருள் அடையுடன் குறிக்கப்படுகின்றது. ‘கடுமை’ எனும் உரிப்பொருளுடன் மீனின் கண்கள் கூறப்பட்டு அதனைக் கடலினின்று நெய்தலும் பிடித்து வந்த செய்தியும் பதிவாகியுள்ளது. அதனை,

                        ‘‘திமிலோன் தந்த கடுங்கண்வயமீன்’’
                                                           -        அகம், 320
எனும் அடியால் அறியலாம்.

நிறைவுரை

          பார்வை உறுப்பிற்குக் கண் என்ற பெயர் வந்த மாற்றையும் அக்கண்ணினை அகநானூற்றில் புலவர்கள் பல்வேறு வகைகளில் எடுத்தாண்ட மாற்றையும் இக்கட்டுரையானது விளக்கி அமைகின்றது.



நன்றி.

ம.பிரசன்னா,