பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Wednesday, April 4, 2012

தமிழ் ஊர்ப் பெயர்கள் சமஸ்கிருதமாக மொழிமாற்றம் செய்யப்பட்டமை

            சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் எனும் சைவ நாயன்மார்களும் பெரியாழ்வார் முதலான பன்னிரண்டு ஆழ்வார்களும் முறையே தமிழக சிவத்தலங்களும் வைணவத் தலங்களும் நெடுந்தொலைவு நடந்தும் பல்லக்கிலும் பயணம் செய்து ஆங்காங்கு கோயில் உறையும் கடவுளரைப் பாடினர்.அவர் தம் பாடல்கள் பிற்காலத்துத் தேவாரங்களாகவும், திருவாசகமாகவும், திவ்வியப்பிரபந்தமாகவும் தொகுக்கப்பட்டன. அக்காலச் சூழலில் இஃது அரும்பணியாகும். இவ்வாறு தொகுக்கப்பட்டத் தேவாரப் பாடல்கள் தில்லைச் சிற்றம்பலத்தில் பாதுகாக்கப்பட்டதாகவும், அவற்றை முதல் இராசராச சோழன் (கி.பி.11 ஆம் நூற்றாண்டு) மீட்டெடுக்க முயன்ற போது அவற்றுள் பெரும்பாலானவை கரையானால் அழிக்கப்பட்டிருந்ததாகவும் தமிழ் பக்தி இலக்கிய வரலாறு தெரிவிக்கிறது. ஓலைச்சுவடிகளில் நானூறு ஆண்டுகளுக்கு மேல் அவை இருப்பது என்பது அரிய செயல். தேவாரப் பாடல்களைக் கோயில் தோறும் ஓதுவார் பாடுவதற்கு முதல் இராசராசனும் இன்னபிற பிற்காலச் சோழ மன்னர்களும் தத்தம் காலத்தில் ஆக்கம் செய்துள்ளனர்.

                 
                           இவ்வாக்கம் பக்தி இலக்கியத்திற்குச் செய்யப் பெற்ற மிகப்பெரும் நன்றிச்செயல் என்பதில் ஐயமில்லை. இவ்வாக்கத்தின் ஊடே பாடல் பெற்ற தலங்களின் தனித்தமிழ்ப் பெயர்களும் அங்கிருந்த இறைவனின் தனித்தமிழ்ப்; பெயர்களும் இறைவியின் தமிழ்ப் பெயர்களும் தாம் பெற்றிருந்த தமிழ் வடிவத்தை இழந்து சமஸ்கிருத வடிவம் பெற்றன. இது தானே நிகழ்;ந்த நிகழ்வன்று. திருத்தலப் பெயர்களில் தமிழ் சமஸ்கிருத மாற்றத்திற்கு சோழர்காலத்தில் மிகுந்த ஆதிக்கம் பெற்றிருந்த உள்ளளுர்ப் பிராமணர்களும் வெளியூர்ப் பிராமணர்களுமே காரணம் ஆவர் என்பதை சோழர்கால அரசியல் வரலாறும் சமுதாய வரலாறும் உறுதிப்படுத்துகின்றன.


               சோழர், சமஸ்கிருதம் மட்டுமே அறிந்த பிராமணர்களை வட இந்தியாவில் இருந்தும் காஷ்மீரில் இருந்தும் தம் ஆட்சி இடமான தமிழகத்தில் குடியேறி உள்ளனர். அவ்வாறு குடியேற்றப்பட்ட பிராமணர்கள் மட்டும் அல்லாமல் தொடர்ந்து தானாக வந்த பிராமணர்களும் தமிழகத்தில் குடியேறினர். சோழர்காலத்தில் அவர் காலத்திற்கு முன்பிருந்த செங்கற்கோயில்களும் மண சுவர்க் கோயில்களும் கருங்கற்களால் செய்யப்பெற்ற கற்றளிகள் ஆக்கப்பெற்றன. சோழ அரசர்கள் மட்டுமின்றி அவர்தம் அரசியரும் அவர்தம் குடும்பத்தாரும் இவ்வாறு கற்றளிகள் ஆக்கிய தொண்டில் ஈடுபட்டனர். குறிப்பாக முதல் இராசராச சோழனின் வளர்ப்புத் தாயான அவனது தமக்கை குந்தவை தேவி, பின் வந்த செம்பியன்மாதேவி ஆகியோர் இத்தகு பணியில் முன்னின்றனர். கோயில்கள் மிகப்பெரிய அளவில் சோழர்காலத்தில் எடுப்பிக்கப்பட்டன. முன்பே நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடப் பெற்ற கோயில்கள் அனைத்தும் சோழர் காலத்தில் கற்றளிகள் ஆக்கப்பெற்றன. அக்கோயில்களில் கருவறையில் நுழைந்து பூசை முதலானவற்றைச் செய்வதற்கு சமஸ்கிருதம் மட்டுமே அறிந்த சிவ பிராமணர்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். சிவ பிராமணர்கள் சோழர்கள் காலத்தில் கருவறையில் நுழைந்து பூசை முதலானவற்றைச் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டார்கள் என்ற குறிப்பு கல்வெட்டுக்களில் பேசப்படுகிறது. சமஸ்கிரும் மட்டுமே அறிந்தவர்களும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் அறிந்தவர்களும் கோயிலுள் நுழைந்தமையால் இறைவனைப் பூசை செய்யும் மொழியாக சமஸ்கிருதம் சோழர்காலத்தில் எள்தாக இடம்பெற்றது. ஏனைய ஒடுக்கப்பட்ட சாதியார் கோயிலுல் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. கருவறை மூலவரை அருகு இருந்து வழிபட அனுமதிக்கப்பட வில்லை என்பதற்குத் தில்லை சிற்றம்பலக் கோயிலில் நடராசரை வணங்க நந்தன் என்ற ஒடுக்கப்பட்ட குலத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை சான்றாகும். நந்தனின் போராட்டத்தைப் பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் திரு நாளைப் போவார் நயினார் வரலாறு எனும் புராணத்தில் வருணித்துள்ளார். ஆக, சோழர்காலத்தில் சிவள் கோயில்களில் கருவறை பிராமணர்களுக்கு மட்டுமே பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது என்பதும் இறைவனை வழிபடும் மொழியாக சமஸ்கிருதம் ஆயிற்று என்பதும் தெளிவு.


                     சோழருக்கு முன்பு நாட்டை ஆண்ட பல்லவர், ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு குலத்தினர் எனினும் அவர் காலத்திலேயே வட இந்திய குப்தர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேதங்களும் வைதீக முறைகளும் தமிழ்க் கோயில்களில் நுழைந்துவிட்டன. இவை சோழர் காலத்தில் பேராதிக்கம் பெற்றன. சோழர் காலத்தில் வாழ்ந்த பிராமணர்கள் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேதங்களைக் கற்கவும் கோயில் பணி செய்யவும் அரசர்களால் நிலங்கள், மானியமாக வளங்கப்பெற்றன. பிரம்மதேயம் எனும் அருட்கொடைக்குப் பெயரிட்டு பல ஊர்கள் வரியிலி நிலமாக ஆக்கப்பட்டு பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன. பிரம்ம என்றால் பிராமணர். தேயம் என்றால் நாடு. பிராமணருக்கு உரிய நாடு என்பது பொருள். ஆரசன் தன் ஆட்சிக்கு உதவும் முகமாக நன்கு கற்ற பிராமணர்களைப் பிரம்மதேயத்திடம் கேட்டு பெற்றுக்கொள்ளவது உண்டு. எனவே அரசியலில் பிராமணர்களின் பங்கு மிகக் கணிசமாக இருந்தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலனை அமைச்சரவையில் பொறுப்பு வகித்த இரண்டு பிராமண அதிகாரிகள் கொன்று விட்டனர். அவர்களை அடையாளம் கண்டு பின்னாளில் அரசனாகப் பொறுப்பேற்ற முதல் இராசராச சோழன் மரண தண்டனை விதித்துள்ளான் என்பது வரலாறு. புpரம்மதேயங்களுக்கு அரசன் செய்யும் மிகக் கூடுதலான சலுகைகள் மக்களிடையே சீற்றத்தை உண்டாக்கி உள்ளன. மூன்றாம் இராசராசன் காலத்தில் (1223) தலைச்சங்காடு என்ற பிரம்மதேயக் கிராமத்தில் அவ்வூர் மக்களால் அங்கிருந்த நிலவுரிமைப் பத்திரங்களும் புத்தகங்களும் அழிக்கப்பட்டு கிளர்ச்சி செய்யப்பட்டது.

                            தமிழ்க் கல்விக்குத் தம் நானூறு ஆண்டுகால ஆட்சியில் எந்தச் சிறு முயற்சியும் செய்யாத சோழ மன்னர்கள் நூற்று எழுபத்தோரு பிரம்ம தேயங்களை மானியங்கள் கொடுத்து உதவி செய்ததோடு ஆங்காங்கே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ரிக் முதலான நான்கு வேதங்களையும் உபநிடதங்களையும் வியாகரணங்களையும் பிராமணப் பிள்ளைகள் குழந்தைப் பருவத்தில் இருந்து கற்க கடிகை எனும் கல்லூரி வசதி செய்து தந்திருந்தார்கள். தமிழருடைய பண்பாடடிற்குப் பொருந்தாத திரௌபதி கதையைக் கொண்டுள்ள மகாபாரதத்தைத் தமிழிலே மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தார்கள். அம்மட்டுமின்றி ஊர் நடுவே உள்ள அம்பலத்தில் மகாபாரதத்தை நன்கு கற்ற வேத பிராமணர் ஒருவர் சமஸ்கிருத மொழி வழியே எடுத்துச் சொல்ல மானியம் வழங்கிஅ து தொடர்ந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுதலையாகத் தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள், திருக்குறள், திழுமந்திரம், சிலப்பதிகாரம் முதலானவற்றைக் கதையாகச் சொல்லவோ, சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கவோ எவ்வித முயற்சியும் செய்யப்பெறவில்லை. காஞசிபுரத்தில் கடிகை என்ற பெயருடைய ஒரு சமஸ்கிருத பல்கலைக்கழகமே பல்லவர் காலத்தில் இருந்து நடத்தப்பட்டது.


                             ஆக, சோழஅரசியலும் சோழ அரசரிடமும் அருகு இருந்த பெரும் செல்வாக்கைப் பெற்று முன்பே கட்டப்பட்டிருந்த சைவக் கோயில்களுக்கு உள் பூசை செய்யும் உரிமையுடன் சென்ற சமஸ்கிருதம் மட்டும் அறிந்த பிராமணர்கள் அந்தக் கோயிலின் பெரையும் கோயில் மூலவர் பெயரையும் கோயில் இருந்த ஊரின் பெயரையும் மாற்றி இருக்க வேண்டும். தமிழகத்தில் உள் சமஸ்கிருதமாக்கப்பட்ட ஊர்கள் ஒரு காலத்தில் தனித் தமிழ்ப் பெயரைக் கொண்டிருந்தன என்பதும் இன்னும் சொல்லப் போனால் சைவ நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற அவ்வூர்ப் பெயர்கள் மூலவர்கள் பெயர்கள் தூய தமிழிலே இருந்தன என்பதும் அவை சோழர் காலத்தில் தான் மாற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் எளிதாக ஊகிக்கத்தகும். இவை இவ்வாறு மாற்றம் பெற்றன என்பதற்கு ஓரிரு சான்று: உலகப் புகழ்பெற்ற நடராசர் உருவத்தை மிகப் பழங்காலம் தொட்டுப் பெற்றிருக்கும் கோயில் திருநல்லம் என்ற பெயருடையதாகும். இந்த அழகான ஊர்ப்பெயர் பின்னர் கோனேரி ராஜபுரம் என்று மாற்றம் பெற்று இன்றுவரை தொடர்கிறது. காவிரி ஆற்றுத் தென்கரையில் உள்ள ஊர் திரு ஆவூர் என்பதாகும். இவ்வூர் பசுபதீஸ்வரம் என்று மாற்றப்பட்டு இறைவனின் பெயர் பசுபதீஸ்வரர் என்றும் இறைவி மங்கள நாயகி என்றும் மாற்றம் பெற்றன. தென்னார்க்காடு மாவட்டத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருமுதுகுன்றம் எனும் பெயர் விருத்தாசலம் என்று ஆயிற்று. இறைவனின் பெயர் விருத்தகிரீஸ்வரர் என்றும் இறைவியின் பெயர் விருத்தாம்பிகை என்றும் என்றும் மாற்றம் பெற்றன. காவேரிளூ தென்கரையில் உள்ள சேரி நாட்டுத் திருமறைக்காடு வேதாரண்யம் என்று மாற்றப்பட்டது. திருஞானசம்பந்தரின் தேவாரத்தில் மறைவனம் என்றே இவ்வூர் குறிக்கப்படுகிறது. இவ்வூரில் உள்ள இறைவனின் பெயர் வேதாரண்யீஸ்வரர். இறைவியின் பழந்தமிழ்ப் பெயர் யாழைப் பழித்த மொழியம்மை. அப்பெயர் வேதாரண்ய ஈஸ்வரி என்று மாற்றப்பெற்றது. ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பாண்டிய நாட்டு ஊர் திருப்புத்தூர். இவ்வூர் ஸ்ரீதலீஸ்வரர் என்றும் அம்மனின் பெயர் சிவகாமி அம்பாள் என்றும் மாற்றம் பெற்றன. சம்பந்தரின் தேவாரம் திருப்புத்தூர் இறையாரை (272) என்பதாகும். குhவிரித் தென்கரையில் உள்ள திரு சோற்றுத் துறை மாற்றம் பெற்று அவ்வூர் அம்மன் அன்னபுரணி என்று ஆக்கப்பெற்றார்.

‘‘ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண்ணீற்று

அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே''

என்பர் ஞானசம்பந்தர் (பா.294). புகழ் பெற்ற மயிலாடுதுறை இறைவன் மயூரநாதர் என்று மாற்றம் பெற்றார். அம்மனி;ன் பெயர் அபயாம்பிகை என்று மாற்றம் பெற்றது. சம்பந்தர் இவ்வூரில் உள்ள இறைவன் மேல் பாடிய தேவாரப்பா பல, மயிலாடுதுறை என்றே முடிகிறது. (பா. 404 – 413) சிதம்பரம் அண்ணாமலை நகரை அடுத்துள்ள திருவேட்களம் எனச் சம்பந்தரால் பாடப்பெற் திருத்தலம். சம்பந்தர் இங்குள்ள இறைவனை வேட்கள நன்னகராரே எனத் தேவார எண் 415 முதல் 424 வரை பாடுகிறார். வேட்கள நன்னகரார் என்ற திருப்பெயர் பாசுபதேஸ்வரர் என்றும் அம்மன் பெயர் சற்குணாம்பாள் என்றும் மாற்றப் பெற்றன. திருமுதுகுன்றம் எனும் பெயர் ஞானசம்பந்தரால் பாடல் தோறும் முதுகுன்றே முதுகுன்றே என்று (570 இல் இருந்து 578) பாடப்பெற்றது. இப்பெயர் விருத்தாசலம் என்று இறைவனின் பெயர் வேதகரீஸ்வரர் என்றும் மாற்றப்பெற்றன. தொண்டை நாட்டில் உள்ள திருவோத்தூர் எனும் திருத்தலக் கடவைள ஓத்தூர் சடையீர் (581), ஓத்தூர் நாட்டீர் (583) எனத் திருப்பித் திருப்பி சம்பந்தர் பாடியிருப்பார். இப்பெயர் வேதபுரீஸ்வரர் என்னும் அம்மையின் பெயர் பால குசலாம்பிகை என்றும் மாற்றம் பெற்றன. சென்னைக்கு அண்மையில் உள்ள திருவேற்காட்டு இறைவனை ஞானசம்பந்தர் ஷவேற்காடு உயர்ந்தார்' என்று பாடுவார். இப்பெயர் வேதபுரீஸ்வரர் என இறைவனுக்கும் பாலாம்பிகை என்று இறைவிக்கும் பிற்காலத்து மாற்றப்பெற்றன. சிவஞான போதம் எழுதிய மெய்கண்டதேவரின் ஊர் திருத்தூங்கானை மாடம் என்பதாகும். இப்பெயரை ஒவ்வொரு பாடலிலும் சொல்லி சம்பந்தர் பாடியுள்ளார் (634-644). திருத்தலத்தின் பெயர் பிரள காளேஸ்வரர் என்றும் அம்மனின் பெயர் கடந்தைநாயகி என்றும் மாற்றம் பெற்றன.


                   கிட்டத்தட்ட பெரும்பான்மைத் தலங்கள் தேவார காலத் தமிழ்ப் பெயரை இழந்து சமஸ்கிருத பெயரை எய்தவைக்கப் பெற்றன. ஊர்ப் பெயரையும் உள்ளுர் இறைவனின் பெயரையும் இறைவியின் பெயரையும் நூற்றாண்டுகளாகச் சொல்லிச் சொல்லி வழிபட்ட தமிழ் மக்கள் முற்றும் வேற்று மொழியில் சமஸ்கிருதத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட போது எப்படி பொறுத்துக் கொண்டார்கள்? என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழர்கள் தமக்கு இழைக்கப்படும் ஆதிக்கச் செயல்களையும், தம் மொழிக்கு இழைக்கப்படும் அழிவுச் செயலையும் எதிர்க்க ஆற்றல் அற்ற கோழைகளாக இருந்தனர் என்பதையே இச்செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இவர்கள் இத்தகு அஞ்சி அடங்கும் அடிமைகளையும் பிரம்மதேயமாகப் பெற்றுத் துய்த்தனர் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. ஒரு சமயம் அரசன் அறிவித்த பிரம்மதேய கிராமங்களின் எல்லையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருந்த உழுகுடிகளின் வீடும் நிலமும் இருந்தன. ஊரிமை பெற்ற அம்மக்களின் ஒப்புதல் பெறாமலே சோழ மன்னன் அவர்களது நிலத்தையும் வீட்டையும் பிரம்மதேய அந்தணருக்கு நன்கொடையாக வழங்கி ஊர்க்கோயில் கல்வெட்டிலும் வெட்டச் செய்துவிட்டான். ஆதனால் பாதிப்படைந்த அவ்வூர் மக்கள் வாய் திறக்கவே இல்லை. அப்படியே ஏற்றுக்கொண்டு அங்கு புதிய எஜமானர்களான பிராமணர்களின் நிலத்தில் உழுகுடியாக வேலை செய்தார்கள்.




நன்றி.

க.ப.அறவாணன்


முன்னாள் துணைவேந்தர்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.



ஆசீவகமதம்

ஆசீவகமதம்.

              அழிந்தொழிந்துபோன இந்த மதம் இப்போது முழுவதும் மறக்கப்பட்டிருப்பதால், இதைப்பற்றிக் கூறுவது அமைவுடைத்து. பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரிபுத்திரர் என்பவர். பாளிமொழியில் இப்பெயர் மக்கலிபுத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் ‘கோசால’ என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலிபுத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று கூறும்.

                  ‘மக்கலி’ என்பது வடநாட்டில் பண்டைக் காலத்திலிருந்த இரந்துண்டு வாழும் ஒருவகைக் கூட்டத்தாருக்குப் பெயரென்றும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர், ஆகையால் இவருக்கு ‘மக்கலிபுத்திரர்’ என்னும் பெயர் வந்ததென்றும் சிலர் கூறுவர். ‘மக்கலி’ என்பது இவருடைய தந்தையின் பெயர், ஆகையால் இவருக்கு ‘மக்கலிபுத்திரர்’ என்னும் பெயர் வழங்கியதென்று வேறுசிலர் உரைப்பர். மக்கலி, அல்லது மற்கலி என்பவர், ஆருகத மதத்தை யுண்டாக்கிய மகா வீரரும், பௌத்த மதத்தையுண்டாக்கிய கௌதம புத்தரும் உயிர் வாழ்ந்திருந்த அதே காலத்தில் இருந்தவர். மகாவீரர் ஆருகத மதக்கொள்கையை உலகத்தாருக்குப் போதித்துவந்த காலத்தில், அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மற்கலி அவரிடம் சென்று அவரைச் சார்ந்திருக்க விரும்பினார். ஆனால், மற்கலியின் மாறுபட்ட ஒழுக்கங்களையும் குணங்களையும் அறிந்த மகாவீரர், அவர் தம்மைச் சார்ந்திருக்க உடன்படவில்லை. ஆயினும், மற்கலி எவ்வாறோ மகாவீரரது உடன்பாடு பெற்று, அவருடன் சில ஆண்டு தங்கியிருந்தார். பின்னர், அவருடன் மாறுபட்டுத் தனியே பிரிந்துபோய், ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார். அதுதான் ‘ஆசீவகமதம்’, அல்லது ‘ஆஜீவகமதம்’ என்பது. ஆருகதமதக் கொள்கைகள் சிலவற்றையும், தாம் உண்மை என்று கண்ட கொள்கைகளையும் திரட்டி மற்கலி இந்த மதத்தை உண்டாக்கினாரென்று சொல்லப்படுகின்றது. சற்றேறத்தாழ கி. மு. 500-இல் மற்கலி காலமானார் என்று கருதப்படுகின்றது. இவர் காலஞ்சென்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவீரர் வீடு பெற்றார் என்பர். மகாவீரர் வீடு பெற்ற சில ஆண்டுக்குப் பின்னர், கௌதம புத்தர் நிர்வாணம் அடைந்தார்.

                      ஆசீவகர், பௌத்தர், ஜைனர், வைதீகர் ஆகிய இந்த மதத்தவர்களுக்குள் எப்போதும் சமயப்பகை இருந்து கொண்டிருந்தது. ஆசீவக மதக் கொள்கைகளைக் கூறும் நூலுக்கு ‘நவ கதிர்’ என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப்பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும் தூய வெண்மைப் பிறப்புத்தான் மிக உயர் நிலைப்பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர்தாம் வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை. எண்பத்து நான்கு லட்சம் மகா கல்பகாலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலுமென்றும், அந்தக் காலம் கடந்ததும் அவை வீடுபேறடையுமென்றும் இந்த நியதி மாறி உயிர்கள் வீடுபேறடையாவென்றும் கொண்டது இந்த மதம் என்பர். இந்த நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும். ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ நீளாதது போல, உயிர்கள் யாவும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடுபெறான்; அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும் நிலையிலிருக்கும் ஒருவன் கால நியதியைக் கடந்து, தீய கருமங்கள் செய்து மீண்டும் பிறந்திறந்து உழல விரும்பினாலும், அவன் அவ்வாறு செய்ய இயலாது என்பதும், அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி அவன் வீடுபேறடைந்தாகவேண்டும் என்பதும் இம்மதக் கொள்கைகளில் சிலவாம். நவகதிரையன்றி, ‘ஆதித்தியம்’ என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தெரிகின்றது. இது, ‘ஆசீவக சங்க சமயத்தவருக்கு ஆதித்தியமென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப்பற்றியிருக்கும்; அது சோதி சாத்திரமெனவுணர்க. அன்றியேயும், ஆதித்தனைப் போல மீண்டும் அவர் வான மண்டல வரவுடையாரெனப் படுவர்’ என்று கூறும் தக்கயாகப் பரணி (183-ஆம் தாழிசை) உரைப் பகுதியினால் அறியப்படும்.


               மற்கலிக்குப் ‘பூரணர்’ என்னும் பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின், அவருக்கு இப்பெயர் உண்டாயிற்றென்பர். இந்தப் பூரணருடைய இயல்பு கீழ்க் கண்டவாறு ‘நீல கேசி’ என்னும் நூலில் கூறப்பட்டிருக்கின்றது.

‘உரையா னிறைவ னுணலு மிலனாய்த்

திரையா னரையான் றெரிவில் லுருவம்

வரையா வகை வானிடுவில் லனையன்

புரையா வறிவிற் புகழ் பூரணனே ’

(ஆஜீவக வாதச் சருக்கம் 15-ஆம் செய்யுள்.)


              ‘வாக்கியப் பிரவிருத்தியும், புத்தியும், நரை திரை முதலாயினவு முடையனல்லானாகி ஆகாச தலத்து இந்திர தனுசுப்போலத் தோன்றும் தோற்றத்தையுடையனாகிக் குற்றம்படாத வறிவையுடையவன் பூரணனென்னும் எம்முடைய ஆப்தன் என்றவாறு’ (மேற்படி உரை.) ஆசீவக மதத் துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்பது தக்கயாகப் பரணியுரையினால் அறியப்படுகின்றது. இதனை,


‘தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்

பாழியிற் பிணங்குளுந் துளப்பெழப் படுத்தியே’


என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர், ‘தாழி - முதுமக்கட் சாடி * * * தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம் செய்வராதலின், அவரைச் சுட்டி நின்றது’ என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம். மேலே காட்டிய உரைப் பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகின்றது. அதாவது, ஆசீவகமதம் ஆருகத மதமாகிய ஜைன மதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், ‘மணிமேகலை’, ‘நீலகேசி’ என்னும் நூல்களில், ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவகமதம் வேறு என்று தௌ¤வாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இந்தத் தவறுதலைத்தான் மேலே காட்டியபடி தக்கயாகப் பரணியுரையாசிரியர் எழுதியிருக்கிறார். நிகண்டுகளும் ஆசீவக மதம் ஆருகத மதத்தின் பிரிவு என்றே கூறுகின்றன.


‘சாவகர் அருகர் சமணர் ஆகும்;

ஆசீ வகரும் அத்தவத் தோரே’

-சேந்தன்திவாகரம்.

‘சாவகர் அருகர் சமணர் அமணர் ;

ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே’

-பிங்கலநிகண்டு.



‘சிவஞான சித்தியார்’ என்னும் சைவ சமய நூலிலே, இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றான திகம்பர ஜைன மதம் என்று தவறாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். ‘திகம்பரமொப்பினும் அநேகாந்த வாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க’ என்று எழுதியிருக்கிறார். அதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப்போன்ற கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். ‘மணிமேகலை’, ‘நீல கேசி’ என்னும் இரண்டு நூல்களைத் தவிர, பிற்காலத்து நூல்களாகிய ‘சிவஞான சித்தியார்’, ‘தக்கயாகப் பரணி’, ‘திவாகரம்’, ‘பிங்கல நிகண்டு’ முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம் என்றே கூறுகின்றன. இவ்வாறு கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவக மதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும் மேற்கொண்டுவந்த பொதுவான சில கொள்கைகளாகும். உடையின்றி இருத்தலும், குளியாமல் அழுக்குடம்போடு இருத்தலும், இவை போன்ற சில வெளிப்பார்வைக்குப் பொதுவாகத் தோன்றிய கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும், இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு ஆசீவக மதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிற்காலத்தில் தவறாகக் கருதப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வடநாட்டிலும் அவர் இவ்வாறே கருதப்பட்டுவந்தனர். இந்த மதத்தைப்பற்றிய உண்மை வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைப்பன எல்லாம் இந்த மதத்தின் பகைவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே, நடுநின்று கூறாமல் சார்பு பற்றிக் கூறியுள்ளன என்று கருதப்படுகின்றது. ‘மணிமேகலை’ என்னும் பௌத்த நூலிலும் (சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதை), ‘நீலகேசி’ என்னும் ஜைன நூலிலும் (ஆசீவக வாதச் சருக்கம்), ‘சிவஞானசித்தியார்’ என்னும் சைவ நூலிலும் (பரபக்கம் ஆசீவகமதம்) இந்த மதக்கொள்ளைகளை எடுத்துக்கூறி மறுக்கப்பட்டுள்ளன. இந்த மதத்தைப்பற்றி அறிய விரும்புவோர்க்கு மேற்சொன்ன தமிழ் நூல்களும், Encylopaedia of Religion and Ethics by James Hastings என்னும் ஆங்கில நூலும் உதவிபுரியும்.


                       இந்த மதம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது, தமிழ்நாட்டிலே சமதண்டம் என்னும் ஊரிலே இந்த மதத் தலைவர்கள் இருந்ததாக ‘நீலகேசி’ என்னும் நூல் கூறுகின்றது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும் செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும் கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு, உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

‘கண்ணகி தாதை கடவுளர் கோலத்

தண்ணலம் பெருந்தவத் தாசீவகர் முன்

புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் ’ - (நீர்ப்படைகாதை.)

எனவரும் அடிகளால் இதனை அறியலாம். இராச இராச சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட சிலா சாசனங்களில் ‘ஆசுவ கடமை’ என்னும் ஆயம் (வரி) குறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு, ஆசீவகமதத்தாருக்கு அக்காலத்தில் ஆயம் விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவர் சிலர். இதை மறுத்து, சாசனங்களில் கூறப்பட்டுள்ள ‘ஆசுவ கடமை’ என்பது செம்பு அல்லது பித்தளைப் பாத்திரங்களைச் செய்யும் கன்னாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்குமே தவிர, ஆசீவக மதத்தாருக்கு விதிக்கப்பட்ட ஒருவரியைக் குறியாது என்றும், அவ்வாறு கூறுவது தவறு என்றும் பேராசிரியர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் தாம் பதிப்பித்துள்ள ‘நீலகேசி’யின் ஆங்கில முன்னுரையில் விளக்கமாக எழுதியிருக்கின்றார்கள். ஆகவே, ஆசீவக மதத்தாருக்கு இறை விதிக்கப்பட்டிருந்ததாகக் கருதுவது தவறாகும்

Monday, April 2, 2012

மழைகளின் வகைகள்

மழைகளின் வகைகள்

 


1. ஊசித் தூற்றல்

2. சார மழை (ஊதல் காற்றௌடு கலந்து பெய்யூம் நுண்ணிய மழை)

3. சாரல்

4. தூறல்

5. பூந்தூறல்

6. பொசும்பல்

7. எறிதூறல் (பொடீக் கற்களால் மேலே எறிவது போன்ற தூறல்)

8. தூவானம்

9. பொடித்தூறல்

10. ரவைத்தூறல்

11. எறசல்

12. பறவல்மழை

13. பருவட்டு மழை (மேலெழுந்த வாhpயாக)

14. அரண்ட பருவம் (தேவைக்குக் காணாத மிகச் சொற்பமான மழை)

15. மழை மhhp

16. துணைமழை (முதல் மழையைத் தொடா;ந்து மறுநாளோ அதுக்கும்       மறுநாளோ பெய்வது)

17. பே மழை

18. நச்சு மழை (இடையில்லாமல் தொடா;ந்து பெய்துகொண்டேயிருப்பது)

19. வதி மழை (பூமியெல்லாம் சேறு ஆகும்படியாக)

20. கல் மழை (ஆலங்கட்டி மழை)

21. காத்து மழை (காற்றும் மழையூம் கலந்து பெய்வது)

22. சேலை நனைகிறாப்புல

23. கோடை மழை

24. கால மழை

25. தக்காலம் (மழைக்காலம்)

26. பாட்டம் பாட்டமாய் (விட்டுத் தொடா;;ந்து)

27. நீரூத்து மழை (தரையிலிருந்து நீh; கசிந்து வெளியேறிக் கொண்டேயிருக்கும் படியாகப் பெய்யூம் தொடா; மழை)

28. வெக்கை மழை (சூட்டைக் கிளப்பி விடும்படியானஇ பூமியைச் சாந்தி பண்ணமுடியாத மழை)

29. அட மழை (அடை மழை)

30. மாசி மழை (காpசல் விவசாயிகளுக்கு உகந்த மழை)

31. தை மழை (வேண்டாத மழை)

32. சுழி மழை ( பரவலாகப் பெய்யாமல் ஆங்காங்கே சுழி சுழியாகப் பெய்யூம் மழை)

33. பட்டத்து மழை (சாpயான காலத்தில் பெய்யூம் மழை)

34. எல்லைக் கட்டிப் பெய்யூம் மழை ( ஊhpன் எல்லையோடு பெய்து நின்றுவிடும்)

35. மகுளிக்கும் மழை (பூமி உள்வாங்கிக் கொண்டது போக மண் நீரை வெளியே கக்கும் மழை)

36. வெள்ள மழை

37. பரு மழை (கன மழை)

38. பருவ மழை

39. பதமழை (விதைப்புக்கான ஈரமுள்ள மழை)

40. அப்பு மழை (மதியத்துக்கு மேல் வீசும் உப்பங்காத்து காலையிலேயே வீச ஆரம்பித்தால் அன்றைக்கு நிச்சயம் மழை உண்டு என்பது)



நன்றி.

கதைசொல்லி.

Sunday, March 25, 2012

வேதநாயகம் பிள்ளையின் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்

            இசைப்பாட்டு வடிவத்தின் முதிர்ந்த நிலையே கீர்த்தனைப் பாடல்களாகும். இப்பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற மூன்று நிலைகளில் அமையப்பெறும். இவற்றை எடுப்பு, தொடுப்பு, படுப்பு என்ற பெயர்களில் அழைப்பர். இத்தகைய கீர்த்தனைப் பாடல்களைச் சமரச நோக்கோடு பாடியவர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை ஆவார். இவர் பாடிய இசைப்பாடல்களுக்குச் ``சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்'' என்று பெயரிட்டழைத்தார். இதில், 192 கீர்த்தனைப் பாடல்கள் இடம் பெற்றன. இந்நூலின் பெயருக்கு ஏற்ப, எல்லா மதங்களுக்கும் பொதுவான எந்தக் கடவுளையும் சுட்டாத அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இசைப்பாடல்களாகப் பாடி இருப்பது சிறப்பிலும் சிறப்பாகும். இத்தகைய சமரச நூலில் காணலாகும் கருத்துக்களை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.



வேதநாயகமும் தமிழும்

                  தமிழ்நாட்டில் சிறப்புமிக்;க கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று விளங்குபவர் வேதநாயகம் பிள்ளையாவார். இவர் தமிழில் நாவல் என்னும் புத்திலக்கிய வகையைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்தவர். இவரின் நாவல்களில் நகைச்சுவை நிரம்பிய நிலையில் அமையும். இசைத் தமிழின் பெருமையைக் கீர்த்தனை என்ற இலக்கிய வகையில் நிலை நிறுத்தியவர். உண்மையில் நாட்டம் காணல், சர்வ சமய சமரசச் சிந்தனைகள், பெண்மையை மேம்படுத்துதல் ஆகியன இவரின் இலக்கியக் கொள்கைகளாகும்.

                 வேதநாயகம் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள குளத்தூரில் பறிந்தவர். சிறுவயதிலேயே ஆங்கிலப் பயிற்சி பெற்றமையால் ஆங்கில அரசாங்கம் இவரை மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தியது. பின்பு, தரங்கம்பாடி, சீர்காழி, மாயூரம் ஆகிய இடங்களில் மாவட்ட நீதிமன்றத்தில் முன்சீப் என்ற உயர் பதவியில் பணியாற்றினார்.


நூல்களும் சிறப்புகளும்


                   சீர்காழியில் பணியாற்றிய காலத்தில், அங்கு வசித்து வந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் நெருங்கிப் பழகிச் செந்தமிழைக் கற்றறிந்தார். சீகாழிக் கோவை பாடிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் புலமைத் திறத்தைப் பாராட்டிப் பற்பலக் கவிதைகள் இயற்றினார். நன்னெறியில் நாட்டம் கொண்டு தம் மனத்தில் பதிந்த கருத்துக்களைப் பாடல்களாகப் பாடினார். அப்பாடல்கள் 45 அதிகாரங்களைக் கொண்டது. அதனை `நீதி நூல்' என்ற பெயரில் வெளியிட்டார்.

                     வேதநாயகர் சீர்காழியிலிருந்து மாயூரத்திற்கு முன்சீப்பாக மாற்றம் பெற்றார். அச்சமயத்தில் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை இயற்றிய கோபாலகிருஷ்ண பாரதியார் நட்பு கிடைத்தது. அவரின் தொடர்பால் கீர்த்தனைப் பாடல்களைப் பாடும் தொடர்பைப் பெற்றார். ஒரு சமயத்தில் தஞ்சாவூர்ப் பகுதியில் ஏற்ப்பட்ட பஞ்சம் குறித்து நெஞ்சுருகப் பாடினார். தாம் சேர்த்து வைத்த செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மாயுரத்தின் பல பகுதிகளில் கஞ்சித் தொட்டிகளை அமைத்து மக்களின் பசித் துன்பத்தைப் போக்கியுள்ளார். இத்தகைய அறப்பணியைக் கண்ட கோபால கிருஷ்ண பாரதியார் வேதநாயகரை வியந்து பாராட்டி, `நீயே புருஷ மேரு' எனத் தொடங்கும் கீர்த்தனைப் பாடலைப் பாடியுள்ளார். மனிதர் நோக மனிதர் பார்க்காத நற்பண்பிற்குக் கிடைத்த பேறாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.


                        வேதநாயகம்பிள்ளை பிற சமயத்தாருடன் வேற்றுமை இல்லாமல் பழகியுள்ளார். அன்றைய திருவாவடுதுறை ஆதினத் தலைவர் சுப்பிரமணியத் தேசிகரைப் பாராட்டிப் பற்பல கவிதைகள் பாடியுள்ளார். திருவாவடுதுறை ஆதீன வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வேதநாயகம் பிள்ளையினைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துக் `குளத்தூர்க் கோவை' இயற்றியுள்ளார்.

                               கிறித்துவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவராயினும் தெய்வத்தின் பெயரால் சமயத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்வது தவறு என்று எண்ணினார். பல சமயத்தைச் சார்ந்தோரும் சமரச உணர்ச்சியோடு வாழ வேண்டும் என ஆசைப்பட்டார். அதன் விளைவாக சர்வ சமரசக் கீர்த்தனைகள் என்ற நூல் தோற்றம் பெற்றது. சத்திய வேத கீர்த்தனைகள், திருவள்ளுவ மாலை, தேவத் தோத்திர மாலை, பெண்மதி மாலை, திருவருளந்தாதி, தேவ மாத அந்தாதி, பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி சரித்திரம், ஞான சுந்தரி ஆகியன இவர் படைத்த நூல்களாகும்.


எக்காலமும் பணிந்து போற்றல்


                     எக்காலமும் உன்தன் திருவடிகளை நான் பணிந்து கொண்டிருக்க நீ வரம் அருள வேண்டும். சிறப்பு பொருந்திய மேலோரின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் அறிவிற் சிறந்தவனே! அனைத்து உலகங்களையும் காப்பவனே! நன்மை தருவோனே! ஊன் மேல் இன்னிசை மிக்க பாடல்களைப் பாட வேண்டும். மணம்; மிக்க தாமரைப்பாதங்களை என் தலையில் சூடி வணக்கங்கள் பல சொல்லிப் பூமியில் விழுந்து வணங்க வேண்டும். தூய உள்ளம் உடைய நல்ல மனிதர்களோடு சேர்ந்து ஞானக் கடலில் நான் ஆட வேண்டும். எவ்விதக் குற்றமும் குறையுமின்றி உன்னை நாள் முழுவதும் நாடித் தொழுது நேசமுடன் பக்திப் பரவசத்தால் அழுது பாட வேண்டும். சிவந்த நெருப்பில் உருகும் மெழுகினைப் போல் என் மனம் உருகி மிகுதியும் மெய் சிலிர்த்து எக்காலமும் உன்னை நான் பணிந்து போற்ற நீ வரம் அருள வேணடும். இதனை,


``எக்காலமும் உந்தன் பொற்கால் பணிந்துகொண்டு

இருக்கநீ வரம் அருள்வாய்''

என வரும் `பல்லவி'யால் உணரலாம்.

அழகிற் சிறந்தோனே! அனைத்தும் கடந்தவனே!

                 தலைவனே! நான் உன்னைத் தேடி ஓடி வந்தேன். நீ எனக்கு உதவி செய்தருள வேண்டும். நான் உன்னை நாடி வந்து உன் திருப்பாதங்களைத் தொட்டுக் கொடிமுறை கும்பிட்டேன். ஐயனே! அழகிற் சிறந்தவனே! துன்பம் தீர்ப்பவனே! அறிவு மிக்கோனே! பேதங்கள் அற்றவனே! அனைத்தும் கடந்தவனே! வாத பிரதிவாதங்களுக்கு அப்பாற்பட்டவனே! புகழ்மிக்கவனே! அற்பமான இவ்வுலகப் பொருள்களை நான் சிறிதும் வரும்ப மாட்டேன். இதுவே முற்றிலும் உண்மையாகும். இந்த உலகத்தில் அற்புதமான இறைவனின் பொருளாகிய அருள் மட்டும் கிடைத்தால் எனக்கு அதுவே மிகுந்த பயனை விளைவிக்கும். நான் வேறு யாரின் துணையையும் நாடிச் செல்வதில்லை. உன் துணையையே நாடி வந்துள்ளேன். கீர்த்தனை மாலைகள் வகை வகையாகத் தொடுத்தேன். நீ வாசிப்பதற்கே என் இரு கரங்களையும் கொடுத்தேன். என் மனத்தை உன் வீடாக்கிக் கொள். உன் மனத்தில் எனக்கு இடம் தருவாயாக. உன்னைப் பணிந்து நடப்போர்க்கு அன்போடு உதவுகின்றவனே! உருவம் அற்றவனே! நியாயத்தின் இருப்பிடமாக விளங்குகின்றவனே! பற்பல புதுமைகள் செய்பவனே! கற்பனையின் கடலே! பாவத்தை அழிப்பவனே! உலகை ஆளும் மன்னனே! பேரொளியே! இன்ப வடிவாய் ஆனவனே! இதனை,


``ஓடி நான் உனைத் தேடி வந்தேன் - எனக்கு

உதவி செய்தருள் ஐயனே!''

எனவரும் பல்லவி அறிவுறுத்துகின்றன.

மன இருளைப் போக்குபவன்

                            வீணாய்ப் பொழுதைப் போக்கிய நான் ஒரு சிறு புல்லாகவும், நான் செய்த வினை அந்தப் புல்லை அரிக்கும் கரையானாகவும் ஆகிவிட்டோமே! உன்னை நினையாத என் மனம் கல் தானே? நித்தம் மனத்துடன் யுத்தம் செய்யவேண்டியுள்ளதே! எப்போதும் வற்றாத நல்லறிவு படைத்தவனே! நல்லோர்களின் பாராட்டுக்குரியவனே! தீயோர்களைத் திருத்துபவனே! இவ்வுலக வாழ்வில் நான் காணும் தொல்லை துயரங்களுக்கு எல்லையே கிடையாது. நான் யாரிடத்தில் சென்று முறையிடுவேன்? தெய்வமே! என் வார்த்தைகளைக் கேட்டு எனக்கு நீ உதவ வேண்டும். அடியேனாகிய நான் வினை வசத்தால் இவ்வாறு தொல்லைகளுக்கு ஆளாகிவிட்டேன். என்பால் கருணை கொண்டு அருள் பாலித்து இவ்வுலகத் துன்பங்களிலிருந்து என்னைப் பாதுகாக்க வேண்டும். பக்தர்களின் அன்பனே! சுத்த மனங்களில் வாசம் செய்பவனே! எண்ணத்தில் அமைந்த குற்றங்களைப் போக்குபவனே! அறிவின் ஒளியாகத் திகழ்பவனே! இத்தகையவனை,

``என்னை ஆதரிப்பாயே – என்மன இருள்

தனையே பிரிப்பாயே''

என்ற பல்லவி வழியுறுத்துகின்றன.

வெயிலுக்கு நிழலாய் இருப்பவனே

                              நல்லோருக்கு இன்பம் நல்கும் இறைவனே! பொன்னாசையால் நான் இவ்வுலகத்தில் பெருந்துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். வயிற்றுப் பசியால் துடிக்கும் குழந்தை பசியைத் தீர்த்துக் கொள்ள தன் தாயிடம் தான் செல்லும். இக்குழந்தை வேறு யாரிடமும் செல்லாது. நாளும் துன்பம் தரும் பெருநோய் மருந்தால் அன்றி வேறு வகையில் குணம் ஆவதில்லை. அவ்வகையில் தாயாகவும் பெரு நோய்க்கு மருந்தாகவும் விளங்குபவனே! உயிர்ப் பயிரை வளர்க்கும் மழையே! உன்னை அல்லாமல் எம்மைக் காப்பார் வேறு யாருமில்லை. சல்லடை போன்ற பல ஓட்டைகளை உடைய துன்புறும் வெறும் புழுவும் மலமும் நிறைந்த கூடான இவ்வுடம்பை நிலையெனக் கருதி மனம் என்னும் குரங்கு பல செயல்களைச் செய்கின்றது. அதனால் தினம்தினம் பாடாத பாடு படுகின்றேன். இறைவனே! நான் பிழை எது செய்தாலும் நீ வந்து காப்பாய் என்று நம்பினேன். என் மேல் உனக்கு இன்னும் கோபமோ? இந்த உலகத்தில் சொல்ல முடியாத துன்பத்தைத் தரும் ஐம்புலப் பகைவர்கள் மென்மேலும் துன்புறுத்துகின்றனர். என் பார்வை மங்கையர் மேல் செல்கின்றது. வாயோ தீய வார்த்தைகளையே பேசுகின்றது. என் காதுகளோ தீய வார்த்தைகளையே கேட்டு மகிழ்கி;ன்றன. என் உடம்போ சிற்றின்பத்தையே நாடுகின்றது. இவ்வாறு நான்படும்பாடு நாய்படும் பாடாக உள்ளது. ஆதலால், என் தந்தையே! தினமும் மகிழ்ச்சியைத் தருபவனே! வேநாயகனே! என்னுடைய குறைகளை உன்னிடத்தில் சொல்லுகின்றேன். உன்னையன்றி எனக்கு வேறு யார் உளர். நீ எனக்கு மனமிரங்கி நல்வழி காட்ட வேண்டும் எனக் கூறுகின்றார். இதனை,



``உன்னிடத்தில் சொல்லாமல் யாரிடத்தில் சொல்லுவேன்

ஓஓ ஜெகதீசா''

எனவரும் பல்லவி வழி அறியமுடிகின்றது.

என்பிழைகள் பொறுத்தருள்வாய்

                      இறைவனே! நான் உன் பக்தனைப் போல விவரித்துப் பேசுவேன். உன்னைத் துதி செய்து ஆயிரம் கவிகள் விரிவாகப் பாடுவேன். நான் இவ்வாறு பேசுவதெல்லாம் வாய் வார்த்தையோடு முடிந்து போகின்றது. என் மனத்தில் தோய்ந்து வெளிப்படும் அன்பு இதில் சிறிதும் இல்லை. சிறு நாயேன் அன்புகூட உன்மேல் இல்லாமல் தீயவனாய்த் திரிகின்றேன். நான் செய்திருக்கும் பாவங்களை எண்ணிப் பார்க்க இயலாதவை. இந்த மண்ணில் நான் பிறந்து ஒரு பயனுமில்லை. தினந் தினம் உண்ணுவதும் உறங்குவதும் பெரும் பாவங்களைச் செய்வதுமாகத் திரிகின்றேன். உன் பாதத்தைச் சிறிதும் சிந்திக்காது காலத்தைக் கழிக்கின்றேன். மனிதத் தன்மைகள் அற்ற குணங்கள் என்னிடம் மென்மேலும் குடிகொண்டுள்ளன. என் மனம் பஞ்சமா பாதகங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயமாய் உள்ளது. இந்த உலகத்தில் உன்னை நொக்கித் தவம் புரிகின்றவர்களுக்குக் குற்றங்குறைகள் நீங்கும். அவ்வகையில் இந்த உலகத்தில் நன்மை கிடைக்கச் செய்தருளும் இறைவனான வேத நாயகனே! நீ மனம் இரங்கி என் பிழைகளைப் பொறுத்து என்னை வருத்தும் தீவினைகளைப் பொறுத்து, என்னை வருத்தும் தீவினைகளைப் போக்கி அருளுதல் வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறார். இதனை,


``என்பிழைகள் பொறுத்தருள்வாய் எனை – அலைக்கும்

துன்பவினை அறுத்தருள்வாய்''

என்ற பல்லவியின் வழி உணரமுடிகின்றது.

                     இவ்வாறாக, வேதநாயகம் பிள்ளை தனது சர்வ சமய சமரசக் கீர்த்தனையில், இறைவனிடம் தம் குறைகளைச் சொல்லி, தமக்கு அருள்புரியுமாறு வேண்டுகிறார். எச்சமயமும் சார்ந்து பாடாமல் இறைவனின் பெருமைகளைக் கூறி, எச்சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மனம் உருகிப் பாடுகின்றார். இறைவனுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தைச் சில கீர்த்தனைகளில் பாடுகின்றார். மொத்தத்தில் மன அழுக்குகளை எல்லாம் களைந்து இறைவனைத் தரிசிக்கத் தயாராக இருக்கும் ஓர் ஆன்மாவை இனம் கண்டு கொள்ளும் வகையில் இக்கீத்தனைகள் அமைந்துள்ளன எனக் கூறுதல் முற்றிலும் பொருத்தமுடையதாகும்.

 
 
நன்றி.
 
முனைவர். சோ.முத்தமிழ்ச்செல்வன்.

Monday, March 19, 2012

பாரதியின் சிற்றிலக்கியங்கள்

``சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது
சொற்புதிது சோதிமிக்க
நவகவிதை``

என்று புத்திலக்கிய வகைக்கு முண்டாசுக்கவி பாரதி விதை போட்டார். பழமையினைப் பாதுகாக்கும் தமிழினத்தின் தவப்புதல்வனான பாரதி தம் முன்னோர்கள் போற்றிய மரபையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டவர். அதனால் தான் அவர்கள் வடிவமைத்த பாவகைகளையும் இலக்கிய வகைகளையும் போற்றி அதனூடே புதுமையைப் புதுக்கியும் புதுமை செய்தார். படித்தவனுக்குச் சொந்தமான இலக்கியத்தைப் பாமரனின் இல்லத்திற்குள்ளும் செலுத்தியவன். இத்தகைய பாரதியின் படைப்பாக்கத்தில் கருக்கொண்ட பிரபந்தங்களைக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் எண்ணம்.

பாரதியின் இலக்கியவகைகள்

            தமிழிலக்கிய உலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகள் சுட்டப்பெற்றுள்ளன. அவற்றில் பலவற்றைத் தன்னுடைய படைப்பில் பாரதி புகுத்தியுள்ளார். நான்மணிமாலை, தூது, அகவல், பஞ்சகம், பள்ளியெழுச்சி, நவரத்தினமாலை, தசாங்கம், பள்ளு, கும்மி போன்ற பல்வேறு வகைகளைக் கையாண்டுள்ளார்.

நான்மணிமாலை

            வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் ஆகிய நான்கு பாவகைகளால் நாற்பது பாடல்களை எப்பொருளிலேனும் பாடுவது நான்மணிமாலையாகும். இதனை,


``வெண்பா கலித்துறை விருத்தம் அகவல்
பின்பேசும் அந்தாதியின் நாற்பது பெரின்
நான்மணிமாலையாம் என நவில்வர்``
-           இலக்கண விளக்கம் 81

என்ற இலக்கண விளக்க நூற்பா நவில்கிறது. இவ்வகை இலக்கியத்தினை மகாகவி அவர்கள் விநாயகரின் மேல் துதிப்பொருண்மையில் பாடியுள்ளார். 15 ஆம் நூற்றாண்டில் ``கோயில் நான்மணிமாலை`` யின் வாயிலாகப் பட்டினத்தார் தொடங்கி இவ்வகை பாரதியின் கைபட்டு மேலும் மிளிர்கிறது.

தூது

            ஒருவருடைய கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்கும் பொருட்டு பறிதொருவரை அனுப்புவது தூது. தொல்காப்பியத்திலேயே சுட்டப்படும் இத்தூது இலக்கியம் சங்க இலக்கியத்திலும் தொடர்கிறது. அதனை, இருபதாம் நூற்றாண்டிற்கும் கடத்திய பெருமை பாரதிக்கும் உண்டு.

``செல்ல வல்லாயோ? – கிளியே!
செல்ல நீவல்லாயோ.
வல்ல வேலமுரு கன்தனை - இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று``

என்று தனது எண்ணத்தைக் கிள்ளையின் வாயிலாகத் தெரிவிக்கிறார்.

பஞ்சகம்

            ஒரு பொருளைப் பற்றி பாடும் ஐந்து பாடல்களின் தொகுதியே பஞ்சகம் ஆகும். இது பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றிய பாடல் தொகுதியாக இருக்கும். சிறுபான்மை மக்களைப் பற்றியும் மேம்பட்டவர்களைப் பற்றியும் அமையும். இது வெவ்வேறு பாவும் பாவினமாகவும் வரும். இவ்வகையில் பாரதி இரண்டு பஞ்சகம் படைத்திருக்கிறார். ஒன்று மஹாசக்தி பஞ்சகம். மற்றொன்று  மஹாத்மா காந்தி பஞ்சகம்.


பள்ளியெழுச்சி

            அரசன் விழித்தெழப் பாடுவது துயிலெடை எனும் இலக்கிய வகையாகும். இதனையே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பள்ளியெழுச்சி என்று கூறுகின்றனர். அதுபோல அரசன் துயில்கொள்ளப் பாடுவது கண்படை எனும் இலக்கிய வகையாகும். இதனைத் தொல்காப்பியம்,

``தாவில் நல்லிசை கருதி கிடந்தோர்க்கும்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்``
-தொல்காப்பியம் 1037
           
என்கிறது. இவ்வகையில் இதுவரை சுமார் பதினொரு இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இந்தப் பதினொரு இலக்கியங்களில் பத்து இலக்கியங்கள் இறைவனுக்கும் இறைவனைப் போற்றுபவர்களுக்கும் மட்டும் படைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாரதியின் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி மட்டும் தான் மாறுபட்டுள்ளது. கவிதை வடிவில் புதுமை புகுத்திய பாரதி இலக்கிய வகையிலும் புதுமையைப் புகுத்தி,

``பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் போயின யாவும்
...........................................
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
வியப்பது காண்! பள்ளியெழுந்தருளாயே``

என்று தூங்கிய பாரதத் தாயைத் தட்டி எழுப்புகிறார்.

நவரத்தினமாலை

            நவம் - ஒன்பது. நவரத்தினமாலை என்பது ஒன்பது செய்யுள்களின் தொகுப்பாகும். இவ்வகை இலக்கியத்தையும் பாரதி படைத்துள்ளார். இவருடைய பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள், இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப்பெற்றிருக்கின்றன.


தசாங்கம்
           
            அரசச் சின்னங்கள் பத்தினைப் பத்து வெண்பாக்களால் புகழ்ந்து பாடுவது தசாங்கம் ஆகும். இவ்வகை இலக்கியம் ‘ஷதசாங்கப் பத்து என்றும் அழைக்ப்படுகிறது.

``புல்லும் மலையாறு நாடுஊர் புனைதர்மா
கொல்லும் களிறு கொடிமுரசம் - வல்லகோல்
என்றிவை நஞ்செழுத்தோடு ஏலா வகைஉரைப்ப
நின்ற தசாங்கம் எனநேர்``
-           வெண்பாப் பாட்டியல் 19

என்று வெண்பாப் பாட்டியல் இதற்குரிய இலக்கணத்தை இயம்புகிறது. இவ்வகை இலக்கியத்தையும் இயற்றி பாரததேவியின் புகழைப் பார்முழுதும் பறைசாற்றியிருக்கிறார். நாமம், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்ற பாரத தேவியின் பத்து உறுப்புகளை காம்போதி, வசந்தா, மணிராங்கு, சுருட்டி, கானடா, தன்யோசி, முகாரி, செஞ்சுருட்டி, பிலகரி, கேதாரம் என்ற பத்து இராகங்களில் பாடியிருக்கிறார்.

கும்மி

            இன்றும் கிராமங்களில் வழக்கில் இருந்து வரும் கும்மி இலக்கிய வகையும் பாரதியின் படைப்பில் அடக்கம். பெண்கள் விடுதலைக் கும்மி என்ற பெயரில் இது அமைந்துள்ளது.

``கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
            குலுங்கிடக் கைகொட்டி கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
            நன்மை கண்டோ மென்று கும்மியடி!

என்று பெண்களின் விடுதலைக்கும்மி பாடி பெண்கள் விடுதலைக்கு விளக்கேற்றியவர் பாரதியார் ஆவார்.



காதல்

            காதல் எனும் இலக்கியவகையும் பாரதி கைபட்டு மிளிர்கிறது. தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் விரும்பிக் கூடுகின்ற நிலையே இயற்கைப் புணர்ச்சி ஆகும். இந்த இயற்கைப் புணர்ச்சிப் பொருளில் வந்த தனி இலக்கிய வகையே காதல் ஆகும்.

``கொண்ட மயல் இரடிக் கண்ணியில்; இசை காதலுக்கே``
-           சுவாமிநாதம் 171

என்று இதனைச் சுவாமிநாதம் கூறுகின்றனது. தன் மனைவியுடனான காதலைக் ஷஷகண்ணம்மாவின் காதல்|| என்ற பெயரில் பாரதி இலக்கியம் படைத்துள்ளார்.

``காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்
            காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் நில
            வூறித் ததும்பும் விழிகளும்...``

என்று தன் காதலைக் கவியாக்கி கரைந்திருக்கிறார்.

            ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலிப்பா, கண்ணி, கலித்துறை, கலிவிருத்தம், கீர்த்தனை, குறள் வெண்பா, செந்துறை, சிந்து, தாழிசை, வஞ்சித்துறை, வெண்பா போன்ற பா வடிவங்களும் இன்ன பா என்று வகுக்கவியலாப் பாடல்கள் சிலவும் இவரது படைப்பில் காணப்படுகின்றன. ‘‘இலக்கிய வடிவம் என்பதைப் பொறுத்தவரையில் பாரதி முற்காலக் கவிஞர்களின் நிழலில் மறைந்து நின்று பாடியதைப் பார்க்கிறோம்’’ என்ற தமிழவன் (இருபதில் கவிதை) கருத்து இங்கு நம் சிந்தைக்குரியது.

நிறைவுரை

            பாரதியின் காலத்தில் தான் பல்வேறு பிரபந்த வகைகளும் பா வகைகளும் மறுமலர்ச்சி அடைந்தன என்பதை இக்கட்டுரை தெளிவுற விளக்குகிறது. பாரதியின் படைப்புகளைப் படித்து இரசித்தால் மட்டும் போதாது. அவரது ஆசைகளையும் கனவுகளையும் கவியில் மட்டும் பாராது நினைவிலும் இருத்திக் கொள்ள வேண்டும்.

Wednesday, March 7, 2012



சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற (2 மற்றும் 3 மார்ச் 2012)  ‘‘தமிழ்ப் புனைகதை இலக்கியங்களின் தற்காலப் போக்குகள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கள் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களுடன் எடுத்துக்கொண்ட படம்.

Thursday, March 1, 2012

சேத்தூர் (சேறை)

செழுமை + பழமை = சேறை




தொடக்கம்

            தொப்புள் கொடி உறவுகள் கூட திசைமாறிப் போகலாம். ஆனால் தான் பிறந்த புண்ணிய பூமியின் அன்பு என்றும் அகலாது. காரணம் தாய் தன்னை ஈன்றாலும் தான் மடியும் வரையும் மக்கும் வரையும் தாங்கி நிற்பது மண் மட்டும் தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த மண்ணின் பெயரைத் தன் மார்பு தட்டி கூறி ஒவ்வொரு மனிதனும் பெருமைப் பட்டுக் கொள்கிறான். இது சங்க காலம் முதல் தொடர்கின்ற ஒன்று. எத்தனையோ அறிஞர்கள் தன் பெயருக்கு முன்னால் பிறந்த மண்ணின் பெயரைச் சேர்த்துக்கொள்கின்றனர். காரணம் பெயர் எடுப்பதற்கு மட்டும் அன்று தன் மண்ணின் பெயரை நிலைநாட்டவும் தான். அத்தகைய அறிஞர் பலர் தனது மண்ணின் பெருமையை இலக்கியமாக வடித்தனர். அம்மண்ணின் வரலாற்றை அதன் வழி அறிய முடியும்.



சேறை(சேத்தூர்) = செழுமை



‘‘ஆண்மறை நாடு'' என்று அன்போடு இது அழைக்கப்படுகிறது. தேவியாறு, நகரையாறு, கோறையாறு, புறவடியாறு, மனமாக்கியாறு என்று பஞ்ச நதிகளின் மூலம் பசுமையாகக் காட்சியளிக்கின்றது. இதனைச் சேறைத் தலபுராணத்தில் நாட்டுப் படலம்



                        ``கொண்டன் மேதி கொழுங்கு வடேமடி
 
                          மண்டலத்தில் வருநதி நீண் முலை


                         கண்ட நீண்முலைக் காம்பின் வடிந்தபா


                        லுண்ட கன்றுகளொக்குங் குளங்களே''


                                                                                     - சேறைத் தலபுராணம்.



என்று கருமுகில் பசுவாகவும் மலைக் குன்றுகள் பசுவின் மடுக்களாகவும் ஆறுகள் மடுக்களின் காம்புகளாகவும் குளங்கள் பாலைக் குடிக்கும் கன்றுகளாகவும் உருவகப்படுத்திக் கூறுகின்றது. ‘‘சோழ நாடு சோறுடைத்து'' என்று தமிழறிஞர்கள் கூறுவது பழமை. ஆனால் ``சோற்றுக்கு அலைந்தவர்கள் சேற்றூருக்குச் செல்லுங்கள்'' என்று கூறுவது தான் புதுமை. இதிலிருந்து இத்தேசத்தின் செழுமை நன்கு புலப்படும்.



``மணிவயல் வாளைபாய வளரிளங் கதலி தூங்கும்


இணையின் மென்பழஞ் சிந்துந் தேனிடை விடா தொழுகச் செந்நெற்


பனையெலா மோங்குஞ் சேறைப் பதிவளர் நாட்டுப் பண்ணைக்


கணைநிகர் கருங்கட்பண் மங்கையர் வரவுரைக்கின்றேன்.''


                                                                                         - சேறைபட் பிரபந்தம்



என்று சேறையின் செழுமையை சேறைப்பட் பிரபந்தம் செப்புகிறது.



சேறை = பழமை

             `சேற்றூர்', என்றும் `போற்றூர்' என்றும் இலக்கியங்கள் பாராட்டுகின்றன. சேறை, சேரூர், சேம்மரம், குலசேகர புரம் என்னும் பெயர்களைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சேற்றூர் என்பது மருவி இன்று சேத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ஏகாம்பரத்தேவரின் மரபில் தோன்றியதே சேறை சமஸ்தானம் என்று ‘நதிவிலாசம்' கூறுகிறது.

                இராமன் இராமேசுவரத்தில் மணலைக் குவித்து சிவலிங்கத்தை வழிபட்டார். திருவாடனைக்கு அருகில் உள்ள உப்பூரில் உப்பைக் கவித்து விநாயகரை வழிபட்டார். அதுபோல சேத்தூரில் அகத்தியர் மணலைக் குவித்து வழிபட்டதாகப் புராணங்கள் பகர்கின்றன.


                      கிபி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிலையும் சமண முனிவர்கள் வாழ்ந்த குகையும் இங்கு அமைந்துள்ளது.

                 சுந்தரபாண்டியன், ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியன், அதிவீரராமன் ஸ்ரீவல்லபதேவன், தர்மப்பெருமாள் குலசேகரப்பாண்டியன், செண்பக பராக்கிரம பாண்டியன் ஆகிய மன்னர்களின் காலத்துக் கல்வெட்டுக்கள் சுமார் 14 இத்தேசத்தில் இருக்கின்றன.

                 ``சென்று நேரியன் சேனை புகுந்துநீ

                   யொன்றும் பூசலுடற் றுமவ் வேளையிற்


                   குன்று போலுற் குறட்டை யேவிநாம்


                    வென்று நல்குவம் வெற்றியுனக் கொன்றான்''


                                                                                           - சேறைத் தலபுராணம்

என்று இறைவனே பாண்டிய மன்னனுக்குச் சேவகம் செய்ததைச் சேறைத் தலபுராணம் சிவபெருமான் சேவகஞ் செய்த படலம் கூறுகின்றது. மூவேந்தரும் வழிபட்ட தலம் என்று பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிலங்குகிறது.

                 தோல்வியே கண்டிராத மருதநாயகத்தை எதிர்த்துச் சமமாக 1756 ல் போரிட்டுள்ளது. 1800 க்குப் பிறகு சேத்தூர் பாளையம் என்ற தகுதியினைப் பெற்றது. 1803 ம் ஆண்டுக்கு முன்பு வரை இது மதுரை மாவட்டத்திலும் அதன் பின்பு சீர்மிகு திருநெல்வேலி மாவட்டத்திலும் இருந்தது. 1910 முதல் இராமநாதபுரம் மாவட்டத்திலும் 1984 முதல் விருதுநகர் மாவட்டத்திலும் இருந்து வருகின்றது.


சேறையும் செந்தமிழும்


                    சேறையில் முத்தமிழும் முகிழ்த்தது. முத்தமிழ் வித்தகர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தது. சேறைமன்னர் சுந்தரராசுத் தேவர் `துறைக்கோவை', `பதிகப்பாமாலை', `தனிப்பாடற்திரட்டு' போன்ற அற்புதக் கவிகள் புனைந்துள்ளார். வடமொழில் இருந்த சேறைத் தலபுராணத்தை 1574 ல் சிந்தாமணிப்பிள்ளை என்ற பொன்னாயிரங்கவிராயர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதனை 1893 ல் இராமசாமிக்கவிராயர் வெனியிட்டுள்ளார். ‘குறவஞ்சிப் பிரபந்தம்', ‘தாய்மகளெசல்' போன்ற பல இலக்கியங்களை இராமசாமிக்கவிராயர் படைத்துள்ளார். சங்கரமூர்த்திக் கவிராயர் ‘சேறைப்பட் பிரபந்தம்' பாடியிருக்கிறார். மன்னர் பரம்பரையின் 14 வது பாட்டனார் சுந்தரராசுத் தேவர் ‘அன்னம்விடு தூது' பாடியிருக்கிறார். மு.ரா.கந்தசாமிக் கவிராயர் ‘குமணவள்ளல் சரித்திரம்' பாடித் தமிழ் வளர்த்துள்ளார். இத்தனைக்கும் மேலாக பாவேந்தன் பாரதி தனது இளமையில் சிறிது காலத்தை சேறையில் செலவழித்துள்ளார் என்பதும் சிறப்பு. ‘‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது முந்தைய மொழி. ஆனால் இன்றைய திருமொழி என்னவெனில் சேறைச் செந்நிலமும் செந்தமிழ் செப்பும்'' என்ற வரலாற்று ஆய்வாளர் ந.இராசையாவின் வாக்கு முற்றிலும் உண்மையே.


தொகுப்புரை

                சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தப் பாண்டிய தேசத்தின் குறுநிலமே சேறை. இச்சேறையம்பதியும் முத்தமிழ் வளர்த்தது. செழுமை பழமையும் மிக்க இம்மண்ணின் பெருமைகளை இங்கு தோன்றிய இலக்கியங்கள் பறைசாற்றி நிற்கின்றன.