பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Monday, January 25, 2021

சுதந்திரச் சிந்தனை, இராசபாளையம்
30 ஆவது நிகழ்வு



        ‘வைகறை முரசு’ ஒருங்கிணைப்பில் ‘சுதந்திரச் சிந்தனை’ இலக்கிய அமைப்பு சார்பில் இராசபாளையம் நகரில் 30 ஆவது கலந்துரையாடல் நிகழ்வு (19.12.2020) அன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் நாவிதர் சமூகத்தின் ‘இன வரைவியல்’ நாவலான ‘‘சுளுந்தீ’’ ஆசிரியர் இரா.முத்துநாகு பங்கேற்றார். நிகழ்வின் போது க.கந்தசாமி பாண்டியன் வரவேற்றார். விஜய் அய்யப்பன், வைகறை முரசு சுதாகர், பாலசுதர்சன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வேலாயுதம் பொன்னுச்சாமி, பாலசுதர்சன் உள்படப் பலரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனா். பேராசிரியர்களும் இலக்கிய ஆர்வலர்களும் வினவிய வினாக்களுக்கு நூலாசிரியர் இரா.முத்துநாகு ஆவண ரீதியாகவும், வரலாற்றுப் பூர்வமாகவும் விளக்கம் அளித்தார். சுந்திரச் சிந்தனை ஒருங்கிணைப்பாளர் இரா. நரேந்திரகுமார் தலைமை உரை ஆற்றினார். இந்நிகழ்வில் எழுத்தாளர் திரு இரா.முத்துநாகு பேசியதாவது: 


v  மக்களாட்சி (ஜனநாயகம்) என்பதை புத்தகக் கண்காட்சியைத்தான் சொல்லமுடியும். ஏனென்றால் அனைத்துத் தரப்பு நூல்களும் இருக்கும் . அதை நூல் விற்பனை என்று சொல்வதற்குக் கூட மறுக்கிறார்கள். புத்தகக் கண்காட்சிக்கு ஜனநாயகம் என்ற சொல் எப்படிப் பொருந்துமோ அதைப்போல 100 விழுக்காடு இந்த சுதந்திரச் சிந்தனைக்கும் பொருந்தும். ஏனென்றால் எல்லாத் தரப்பு ஆட்களையம் பேசவைத்து பெருமைப்படுத்தி உங்களிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். மக்கள் மயப்படுத்துதல் அல்ல ஜனரஞ்சகமாக அமைகின்றது.

v  என்னுடை எழுத்து தொழில்முறை எழுத்து அல்ல. நான் அடிப்படையில் ஒரு புகைப்படக் கலைஞர். 100 விழுக்காடு விவசாயி.

v  இந்த 30 நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் இந்த நூலை ஜெயமோகன் எழுதினார், இந்த நூலை பிரபஞ்சன் எழுதினார் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் சுளுந்தீ எழுதிய முத்துநாகு பேசுகிறேன். நான் எழுதிய சுழுந்தீ என்று கூறமுடியாது. சுளுந்தீயால்தான் நான் அறியப்பட்டேன்.

v  ஆங்கிலேய ஆட்சியில் சாதிய முதலாளித்துவம் என்பது தமிழகத்தில் முதலில் வெற்றிபெற்றது செட்டிநாட்டுப் பகுதிதான். அதன் பின்னர் வெற்றி பெற்றது இந்த இராசபாளையம் தான். கோயம்புத்தூர் வெற்றி பெற்றதாகக் கூறினாலும் அதில் பல சாதிகள் வெற்றி பெற்றன. ஒற்றைத் தன்மையுடன் வெற்றி பெற்றது என்பது இதுதான்.

v  இராஜபாளையம் என்பது இராஜுக்கள் பாளையம் என்று கூறுவது பொத்தாம் பொதுவான கருத்து. ஆய்வாளர்கள் சான்று கேட்டால் கொடுப்பதற்கு ஏதும் இருக்காது.

v  நம் பகுதியில் முனியாண்டி என்பதும் வடதமிழகத்தில் முனியப்பன் என்பதும் விஜயநகர காலத்தில் வந்ததுதான். அது உள்ளூர்ச்சாமி அல்ல. அதேபோல் காமாட்சி அம்மன் என்பதும் வெளியிலிருந்து வந்ததுதான். காமட்டம்மன் என்பதுதான் காமாட்சியம்மன்.

v  குலநீக்கம் செய்வதற்கான வரம்பு அல்லது அதிகாரம் என்பது காஞ்சி மடத்திற்குத்தான் வழங்கப்பட்டது. சாதிவிட்டு சாதித் திருமணம் செய்வது, முறைமாறி திருமணம் செய்வது, இரவில் திருமணம் முடித்தல், ஐயர் இல்லாமல் திருமணம் முடித்தல், தீப்பந்தம் ஏற்றித் திருமணம் செய்வது போன்றவை குல நீக்கத்திற்கான காரணங்கள் ஆகும்.

v  1967 வரை குலநீக்கம் என்பது சட்டமாக இருந்தது. சாதிமறு மணம் என்பதும் 1967 வரை செல்லாது. இது நாயக்கர் காலத்தில் தொடங்கியது என்பதை நாம் எளிதாக மறந்து விடுவோம்.

v  கி.ரா வின் சாகித்ய அகாடமி விருது பெற்ற இலக்கியல் கி.ரா சொல்லுவார் ‘‘இந்தப் பகதியில் நிலம் சும்மா  இருந்தது. நெருஞ்சியாக இருந்தது. அதை அகற்றிவிட்டுதான் நாயக்கர் சமூகத்தார் குடியேறினர்’’ என்பார். எந்த ஊரிலும் நிலம் சும்மா இருக்காது. பிரிட்டன் அரசு வந்த போது நமது ஊரில் தரிசு என்ற சொல்லே கிடையாது. அதுவரை திணை வரையறையில் தான் நிலங்கள் பிரிந்து கிடந்தன. நஞ்சை, புஞ்சை, மானாவரி என்றுதான் பிரித்திருப்பான். அதன்பின்னர் தமிழன் மேய்ச்சல் தரிசு என்றுதான் சொன்னான். பின்னர் எப்படி சும்மா இருந்தது என்ற கூறிமுடியும். இதுபோன்ற காரணங்களால்தான் சுளுந்தீயை எழுதுவதற்கு நான் நிர்பந்திக்கப்பட்டேன். என்தரப்பு செய்தியை அவர் கேட்பதற்கும் சொல்வதற்கும் தயாராக இல்லை. அந்த அடிப்படையில் தமிழக் குடிகளின் பிரதிநிதியாய் நிர்பந்தம் இருந்தது.

v  நான் இந்த நாவலை எழுதுவதற்கு கரு எடுத்து எழுதவில்லை. நான் உங்களைப் போன்ற வாசகன்தான். நான் எழுதவேண்டிய சூழலை இந்த எழுத்துலகம் தான் ஏற்படுத்தியது.

v  ஏழு வயது இருக்கும்போது என்னை கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் பாவாணரின் கடைசி மாணவன் அறவரசன்.

v  12 அல்லது 13 வயதில் எந்த வகையான எண்ணத்தை நாம் செலுத்துகிறோமோ அதுதான் இறுதிவரை நிற்கும். 12 வயது முதல் 18 வயது வரை ஒருவரின் மூளைக்குள் என்ன திணிக்கப்படுகிறதோ அது தான் அவனுக்கான 45 வயது வரை இருக்கும். அல்லது அவன் ஆய்வுப் புலத்திற்குள் வரும் வரை அல்லது அந்தக் கருத்தை மறுபரிசீலனை செய்யும் வரை அந்தக் கருத்துதான் நிற்கும். அந்த அடிப்படையில்தான் தமிழக்குடிகள் தொடர்பான தகவல்களைத் தேடவேண்டியது வந்தது.

v  ஒவ்வொரு இனக்குழுவும் அதற்கான பழக்க வழக்கங்கள், பண்பாட்டினை, மரபுக் கூறுகளை ஏதேனும் ஒரு வகையில் சுமந்துகொண்டுதான் இருக்கும்.

v  எங்க அம்மா பெரிய காது வளர்த்தா. எங்க காட்டுக்கு அருகில் இருக்கும் எர்ர நாயுடு அத்தை காதில் சிவப்பு நிற பெரிய கடுக்கன் அணிந்திருந்தாள். இதைப் பார்த்து சிறுவயதில் கேள்வி கேட்டேன். ஆனால் அதற்குச் சரியான பதில் இல்லை. காது வளர்ப்பது என்பது சமணர்க்குரியது. ஆனால் எங்க ஆத்தாவும் பாட்டியும் காது வளர்த்திருந்தால் அதை என்னவென்று சொல்லுவது.

v  இதையெல்லாம் தொகுத்துத்தான் எழுதினேன். ஆனால் அது 500 பக்கங்களைத் தாண்டியது. பின்னர் ஏர் மகாராசன் போன்றோர்தான் சுருக்கிக் கொடுத்தார்கள். இதை நான் கதையாக எழுதவில்லை. கட்டுரை போன்றுதான் உள்ளது. எனவே வாசிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான்.

v  ஸ்ரீவில்லிபுத்தூரில் அருந்ததியர் இன மக்கள் தான் முதலில் பெருமாளுக்கு செருப்பினை காணிக்கையைச் செலுத்த வேண்டும். அதைத்தான் அனைவரும் தொட்டு வணங்கி அடித்துக்கொள்ள வேண்டும் என்பது மரபு. இது நாயக்கர் காலத்தில் வந்தது என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் மயோன் வழிபாடு என்பது நமது பழைய மரபு.

v  இப்படி பழைய திணைக் கலப்பு தான் சாதியமாகத் தோன்றியது. அதை ஒரு வரைமுறைப்படுத்தும் போதுதான் குல நீக்கம் என்ற கருத்தாக்கம் பெறுகிறது. இதையும் முதலில் வெளிக்கொண்டுவந்தது திராவிட இயக்கம் தான்.

v  தமிழன், திராவிடன் யார் என்று முறையாக எழுதிவைத்தவர் பாவாணர் தான். அதை மறுத்துப் பேசவோ எழுதவோ யாரும் இல்லை.

v  பெரியார் தான் முதலில் ஈரோட்டில் அனைத்து சமூகத்திற்கும் குழாய் அமைத்து வீட்டிற்கே தண்ணீர் வரவழைத்தார். அதுதான் இன்று அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது.

v  கிணற்றை எப்போது வெட்டியிருப்பார்கள். அசோகர் எப்படி கிணறு வெட்டினார். எவ்வளவு ஆழம் வெட்டியிருப்பார். அதற்கு எந்தக் கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? கிணறு தோண்டுவதற்கு எந்த வகையான ஆயுதத்தைப் பயன்டுத்தியிருப்பார்கள் அல்லது வெடிபொருட்களைப் பயன்படுத்தி இருப்பார்கள் என்று எந்த நூலும் சொல்லவில்லை.

v  குடைவரைகளையும் இதைப்போல எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பகுதியில் உள்ள குடைவரைகள் படுக்கை அறைகொண்ட குடைவரை இது சமணத்திற்கானது. இது தென்தமிழகத்தில்தான் உள்ளது வடதமிழகத்தில் இல்லை.

v  மலையடிக்குறிச்சிதான் முதல் குடைவரை. இது பல்லவர் காலத்திற்கு முந்தையது என்பர். ஆனால் இது பாண்டியர் குடவரை. இது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதோடு சேர்ந்ததுதான் பிள்ளையார்பட்டி குடைவரை. குடைவரை எப்பொழுது வெட்டியது யார் காலத்தைச் சார்ந்தது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அதை எப்படி வெட்டினான். எதைவைத்து வெட்டினான் என்பதே இங்கு கேள்வி.  

v  குன்றக்குடி ஆதினத்தில் கீழ் உள்ள திருக்கோலங்குடி குடைவரைதான் ஆசியாவிலேயே மிகப் பெரிய குடைவரை. இதை எப்படிக் குடைந்திருப்பான். அதைக் குடைவதற்கு அவன் பயன்படுத்திய விஞ்ஞானத்திற்கான துணைக்கருவி வெடிபொருளாகத்தான் இருக்க வேண்டும். உப்பை வெடியாகத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படி அவன் பயன்படுத்திய பொருள் கந்தகம் ஆகும். இதை கி.பி. 9 ஆம் நூற்றாண்டு தெலுங்குக் கல்வெடு ‘‘கெந்தகம்’’  என்கிறது. வெடிமருந்துதான் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஆங்கிலேயரே கூறியுள்ளனர். அதை எவ்வாறு பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதை திருமந்திரம் சொல்லியுள்ளது. இதை ஆய்வறிஞர் ரெங்கையா முருகன் ஒரு குறிப்பில் சொல்லியுள்ளார். திருமந்திர நூலாக்கமும் இந்தக் கல்வெட்டின் காலமும் ஏறத்தாள ஒன்றாகவே உள்ளது.

v  சாதீய அடுக்குமுறை என்ற இந்த இழிநிலையை சுளுந்தீயில் முதல் பக்கத்திலேயே காணலாம். மாடன் ஊர் சாற்றி முடித்துவிட்டு வாரேன் சாமி என்பான். அப்பொழுது அங்கிருந்தவர்கள் என்னப்பா? எங்கள அரண்மனையார் மாதிரி சாமினு சொலற என்பார்கள். இதில் மாடன் அருந்ததியர் பாத்திரம். இன்றைக்கு இவர்கள் கீழ்நிலைச் சமூகம். ஆனால் அன்றைக்க அவர்கள் அவ்வாறு இல்லை. அனைவரும் சமமாகத்தான் இருந்துள்ளார்கள். குலநீக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே சாமி என்று அழைக்கவேண்டும்.

v  பார்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய நூல்களில் முதன்மையானது கைவல்ய நவநீதம் என்பதாகும். இதன் முக்கியப்பங்கு வகிப்பது இராசபாளையம் தான்.

v  இன்றைய சாதியப் படிநிலையை வலதுசாரி எழுத்தாளர்கள் வளர்நிலை என்கிறார்கள்.

v  லா.சாராவிலிருந்து கி.ரா வரை இவர்கள் எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் இடுவார்கள். அதில் தென்னரசும் சிற்றரசும் இருக்கமாட்டர்கள். இவர்கள் எழுதாத கதையா. அல்லது அண்ணாவும் கலைஞரும் எழுதாத கதையா? ஆனால் இவர்களை யாரும் எந்த மேடையிலும் குறிப்பிடுவது இல்லை.

v  அம்பேத்காரை எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் பெரியாரையும் சீர்திருத்தவாதி அல்லது புரட்சிக்காரரகப் பார்க்கவேண்டும். ஆனால் சிலர் பெரியாரைக் கலகக்காரர் என்கிறார்கள்.

v  அனைவரும் பாரதியாரைத் தூக்கி நிறுத்துவது போல் பாரதிதாசனை நிறுத்துவது இல்லை. பாரதியார் காணி நிலம் வேண்டும் என்றார். காணி என்பது பரம்பரை பரம்பரையாக அனுபவிக்கும் நிலம். அரசே நினைத்தாலும் கூட அதை வாங்கமுடியதது. இது பிராமணர்களுக்குக் கொடுக்கும் நிலம். அதைத்தான் பாரதி கேட்டான். இதை சிற்றரசு தனது எழுத்தில் பதிவு செய்துள்ளார். அதை யாரும் கூற மாட்டார்கள்.

v  இதைப்போலத்தான் நீங்கள் யார் யாரெல்லாம் பெரிய எழுத்தாளர்கள் என்று பட்டியலிடுகிறீர்களோ அதில் திராவிட இயக்க எழுத்தாளர்கள் இடம் பெறுவது இல்லை. அதைப்போலத்தான் எந்த இலக்கியவாதியும் இந்த தமிழக் குடியைப் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யும் பட்டியலிலும் இல்லை. அதனால்தான் இந்தத் தமிழ்க்குடியைச் சுளுந்தீ பதிவு செய்தது.