பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Friday, June 1, 2012

அகநானூற்றில் கண் புலப்பாடு

அகநானூற்றில் கண் புலப்பாடு
முன்னுரை

          தமிழ்கூறு நல்லுலகில் தோன்றி பழந்தமிழ் இலக்கியங்களின் வர்ணனைகளுக்கு நிகரான வர்ணனைகள் வேறு எவ்விலக்கியங்களிலும் இல்லை எனலாம். நுணுகிப்பார்க்கும் திறனும் உற்று நோக்கலும் சங்கப் பாக்களைச் செம்மாந்து நிற்கச் செய்கின்றன. அப்புலவர்களின் பார்வையில் பார்வை உறுப்பான கண்கள் எவ்வாறு புலப்படுத்தப்படுகின்றன என விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கண்

          கடவுள் படைத்த உடல் உறுப்புகளுள் உணர்ச்சி மிகுந்த உறுப்பு கண் ஆகும். உடலின் எந்த உறுப்பிற்கு நோவு ஏற்ப்பட்டாலும் பொதுவாகக் கண்கள் கலங்கும். இதனையே அதற்குச் சான்றாகக் கூறலாம். பொதுவாக, வழக்கில் நகத்தின் நுனிப்பகுதியை நகக்கண் என்றும் தேங்காய், நுங்கு முதலிய பொருட்களின் பயனுறு பகுதியின் தலைப்பகுதி கண் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும். அவ்வகையில் உலகியலைக் கண்டு உள்ளத்தால் பயனுறச் செய்யும் பார்வை உறுப்பையும் கண் எனல் தகும். இதனை இடுகுறிப் பெயராகக் கருதாமல் இனி காரணப்பெயராய் மொழியும் சிறப்பாகும். கண்ணின் பயனாலே நாம் இறக்கும் வரை பயணிக்கின்றோம். பல இடங்களில் கேள்விக்காகவும் சில இடங்களில் விடைக்காகவும் விழி மொழியையே பயன்படுத்துகின்றௌம்.

          ஐம்பொறிகளும் தமக்கென ஒவ்வொரு தனித்தன்மையுடைய செயல்பாடுடன் இயங்கினாலும் ‘கண்’ மட்டும் ஏனைய நான்கு பொறிகளையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. எடுத்துக்காட்டாக கண் ஒரு தீயவரைக் காணின் அவர் பக்கம் கால்கள் செல்லாது. வாய் அவருடன் பேசாது. இது போன்று கண் ஐம்பொறிகட்கும் தலையாயதாய் விளங்குகின்றது.

          கண்களின் சிறப்பினை விரிப்பின் அகலும். சுருங்கக் கூறின் மொழியின்றி கூட வாழலாம். ஆனால், விழி இன்றி வாழல் கடினமே. அத்தகு கண்ணானது அகநானூற்றில் அடையாளப்படுத்தவும் உவமைப் பொருளிலும் உரிச்சொல் அடையுடனும் புலப்படுத்தப்படுகின்றது.

அடையாளப்படுத்துதல்

          கண் எனும் சினைப்பெயரானது அடையாளப்படுத்தும் விதமாய் ஆகுபெயரால் அமையும். அகநானூற்றில் உற்றுநோக்கல் சார்ந்த பண்பில் யானையைக் குறிப்பிடும் இடங்கள் கண் கொண்டு குறிப்பிடப்படுகின்றது. இதனை,

                        ‘‘………………..சிறுகண் யானை
                        இரும்பிடித் தடக்கை…………..’’
                                                                                  -        அகம், 117
எனும் இடத்தும்
                         ‘‘சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
                        வான்வாய் திறந்தும்…………..’’
                                                                                -        அகம், 179

எனுமிடத்தும் யானையானது சிறிய கண்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

          யானைக்குப் பெரிய உருவமும் நீண்ட தந்தமும் வலிய துதிக்கையும் உள்ளவிடத்துக் கண்ணைக் கொண்டு அடையாளப்படுத்துவதற்குக் காரணம் பெரிய உடலும் வலிய துதிக்கையும் சிறிய கண்களாலே வழி நடக்கும். அத்தனை பெரிய உடலில் கண்கள் இன்றேல் உடலின் ஆற்றலும் தோற்றமும் வீணே போய்விடும். அத்தகுத் திறத்தாலே மாற்றிமை மிக்க யானையானது சிறிய கண்களால் ‘சிறுகண் யானை’ எனும் பெயரில் அடை, சினை, முதலாய் இலக்கண வரம்பினின்று சிறப்பாகக் கூறப்படுகின்றது. இதனின்று புலப்பாடும் அதைப்புலப்படுத்தும் பாங்கும் தௌ்ளிதின் விளங்கும்.

உவமைப் பொருள்

          காதலைப் பாடாத கவிஞன் எவனும் இல்லை என்பது போல் கண்ணினைப் படாதா கவிஞர் எவரும் இல்லை. கண்கள் காந்தத்திற்கு நிகரானவை. சில இடங்களில் கவரும். அதனினும் வலிமையான சிலவற்றால் கவரவும் படும். கவரும் தன்மையாலே கண்ணிற்கு உவமைகளும் மிகுதியாகும்.

          முன்பு கூறியவாறு, ஒன்றன் நுழைவுப் பகுதி கண் எனப் பொதுவாகப் பெயர் பெரும். குறிஞ்சிப் பகுதியில் ஒரு பாறையில் ஒழுகும் நீர் நிறை சுனையில் பன்றியானது நீர் பருகுகின்றது. அச்செயலினைப் புலப்படுத்தும் பரணர் சுனையினை பாறைக்குக் கண் என்கிறார். கண்ணினின்று வழியும் கண்ணீராக இவ்விடத்தே நம் சுனையைக் கருதுதல் தவறாகும். சுனையானது வெளிப்படும் இடம். அப்பாறைக்கு அணிகலனாகப் பொருள்படும்படி சுனையை பாறைக்கும் கண் என்கிறார் பரணர். இக்காட்சியை,

                     ‘‘…………….பரூஉமயிர்ப் பன்றி
                      பாறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி’’
                                                                      -        அகம், 178
எனும் அடிகளால் அறியலாம்.

கண்ணின் நிறம் கருமையும் வெண்மையும் கலந்த நிறமாயினும் கண் புலப்பாட்டில் கருமை முதலிடம் பெறுகின்றது. கண்ணைப் போன்று கருமை நிறத்திற்கும் கவரும் தன்மை நிறைவே ஆகும். எனவே, கருநிற மலர்களுக்குக் கண் உவமையாகின்றது. சில இடங்களில் கண்களுக்கு மலர் உவமையாகின்றது. அவ்வகையில் கண்களானது கருமை நிறமுடைய குவளை மலர் மற்றும் நெய்தல் மலருக்கும் உவமையாக உவமிக்கப்படுகின்றன. அவை,

                        ‘‘கண்என மலர்ந்த மாஇதழ்க் குவளைக்
                          கல்முகை நெடுஞ்சுனை நம்மொடுஆடி’’
                                                                        -        அகம், 228

                          ‘‘சிறுகரு நெய்தற் கண்மேல் மாமலர்ப்
                            பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்’’
                                                                          -        அகம், 230

எனுமிடங்களே ஆகும். சிறப்பாக வற்றிய சுனையானது வறட்சிக் குறிப்பாய் யானையின் கண்ணிற்கு உவமையானதாய் வருகின்றது. இதனை,

                   ‘‘பசித்த யானைப் பழங்கண் அன்ன
                   வறுஞ்சுனை………………….’’
                                                               -        அகம், 321

எனும் அடிகள் உணர்த்தியமைகின்றன.

உரிப்பொருள் அடையுடன் வரல்

          நலம்புனைந்துரைத்தலில் மீன் போன்ற கண்ணுடையாள் எனப் பெண்களை வர்ணிப்பர். அகநானூற்றில் அம்மீனும் கண்களால் உரிப்பொருள் அடையுடன் குறிக்கப்படுகின்றது. ‘கடுமை’ எனும் உரிப்பொருளுடன் மீனின் கண்கள் கூறப்பட்டு அதனைக் கடலினின்று நெய்தலும் பிடித்து வந்த செய்தியும் பதிவாகியுள்ளது. அதனை,

                        ‘‘திமிலோன் தந்த கடுங்கண்வயமீன்’’
                                                           -        அகம், 320
எனும் அடியால் அறியலாம்.

நிறைவுரை

          பார்வை உறுப்பிற்குக் கண் என்ற பெயர் வந்த மாற்றையும் அக்கண்ணினை அகநானூற்றில் புலவர்கள் பல்வேறு வகைகளில் எடுத்தாண்ட மாற்றையும் இக்கட்டுரையானது விளக்கி அமைகின்றது.



நன்றி.

ம.பிரசன்னா,

No comments:

Post a Comment